2023 ஆம் ஆண்டில் சிறந்த நகைச்சுவை? அதியன் பதில்கள் (பகுதி-6)

0

                        2023 ஆம் ஆண்டில் சிறந்த நகைச்சுவை?                          அதியன் பதில்கள் (பகுதி-6)

அதியன் கணிப்பில்  2024ஆம் ஆண்டு எப்படி இருக்கும்?
அதியன் ஜோதிடர் அல்ல. 2024ஆம் ஆண்டில் மக்கள் மழை, புயல், வெள்ளம் என்று பேரிடர்களால் துன்பம் அடையாமல் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

ரோஸ்மில்

 சென்னை மழையளவை விடத் தென் மாவட்டங்களில் தூத்துக்குடி மாவட்ட மழையளவு அதிகமாக இருந்துள்ளதே?
உலகம் வெப்பமயமாதலால் ஏற்படும் விளைவுகள் என்று சூழலியல் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். என்றாலும் வீடுகளையும் ஆடு, மாடுகளை இழந்து வாடும் தூத்துக்குடி மக்களுக்கு நம் அனைவரும் உறுதுணையாக இருந்து பேரிடரிலிருந்து மீண்டு வர உதவிட வேண்டும்.


நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறி நுழைந்து வண்ணப்புகைக் குப்பியை வெடிக்கச் செய்திருப்பது, நாடாளுமன்றப் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்துவதாக உள்ளதா?
நாடாளுமன்றத்திற்கு வெளியே பேசிய ஒன்றியத் தலைமை அமைச்சர் மோடி, நாடாளுமன்றப் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகளை ஒத்துக்கொண்டுள்ளார். எதிர்க்கட்சிகள் இதை அரசியலாக்கக்கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பதிலிருந்து பாதுகாப்பு இனி வருங்காலங்களில் உறுதி செய்யப்படும் என்பதை உணரலாம்.

- Advertisement -

- Advertisement -

அண்மையில் டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி கூட்டத்தில் பிரதமர் வேட்பாளராக, காங்கிரஸ் கட்சித் தலைவர் கார்கேவை மம்தா, கெஜ்ரிவால் முன்மொழிந்திருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கையா?
முன்மொழிவை கார்கே மறுத்துள்ளார். நடக்கப்போவது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காகத் தேர்தல். பிரதமருக்கான தேர்தல் அல்ல. முதலில் எதிர்க்கட்சிகள் வெற்றிபெறுவோம். பின்னர்ப் பிரதமரைத் தேர்வு செய்வோம் என்று பொறுப்புணர்ச்சியோடு கார்கே பேசியிருப்பது வரவேற்கத்தக்கது.

பொன்முடிக்குச் சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள சிறைத் தண்டனையைத் திமுக IT Wing  ஆளுநர் Vs பொன்முடியோடு மோதலோடு முடிச்சி போடுவது சரியா?
பொன்முடி மீதான இந்தச் சொத்துக்குவிப்பு வழக்கு 2011 ஜெயலலிதா ஆட்சியில் தொடரப்பட்டது. இதற்கும் ஆளுநர் Vs பொன்முடி மோதலுக்கும் எள்ளளவும் தொடர்பில்லை. மேலும், நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கொச்சைப்படுத்துவதும் தேவையில்லை. உச்சநீதிமன்றத்தில் தனக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளப் பொன்முடிக்கு எல்லா வகையிலும் உரிமை உள்ளது.

ஜெயலலிதா - பொன்முடி
ஜெயலலிதா – பொன்முடி

அண்மையில் நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களில் ஆட்சி பொறுப்பையேற்றுள்ள ஆட்சியில் துணை முதல்வர்கள் நியமிக்கப் பட்டிருப்பது சட்டப்படி சரியா?

அரசியல் சாசனத்தின்படி துணை முதல் அமைச்சர் பதவி என்பது இல்லாத ஒரு பதவி. துணை முதல் அமைச்சர் என்று சொல்லிக்கொள்ளலாம். ஆட்சி அதிகாரத்தில் எல்லாரையும் திருப்திப்படுத்தவே துணை முதல் அமைச்சர் போன்ற அதிகாரம் இல்லாத பதவிகள் உருவாக்கப்படுகின்றன.

4 bismi svs

அண்மையில் அதியன் இரசித்த தன்னம்பிக்கையான செய்தி யாது?
தேமுதிக பொதுக்குழுவில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஒப்புதலின்படி பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அக்கூட்டத்தில் உரையாற்றிய ,“2024இல் தேமுதிக நாடாளுமன்றத் தேர்தலில் வெல்வது உறுதி. 2026இல் தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பது உறுதி” என்பதே.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

ஆசிரியைகள் சுடிதார் போன்ற உடைகளைப் பள்ளிக்கு அணிந்து செல்லலாம் என்ற பள்ளிக் கல்வித்துறையின் துறையின் அறிவிப்பு வரவேற்புக்குரியதுதானே?
ஆபாசம் இல்லாத எல்லா உடைகளையும் அணிந்துசெல்ல ஆசிரியைகளுக்கு உரிமை உள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் இந்த அறிவிப்பை ஆங்கில ஆசிரியரும், கவிஞரும், சமூகச் செயற்பாட்டாளருமான சுகிர்தராணி வரவேற்றுள்ளார்.

அண்மையில் அறிவிக்கப்பட்ட சாகித்திய அகாதமி பரிசுகளில் தமிழ் கவிதைகளுக்கு வழங்கப்படவில்லை என்பதால் தமிழில் நல்ல கவிதையே இல்லை என்று பேராசிரியர் ஜெயதேவன் குறைபட்டுள்ளாரே?
தமிழில் நல்ல கவிதை நூல் வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன. அதன் கருத்துகள் ஒன்றிய அரசின் பரிசு பெற வகுத்துள்ள வரையறையை மீறிச் சமகாலத்தைப் பிரதிபலித்து உயர்ந்திருக்கின்றன என்பதே உண்மை. சமகாலக் கவிதைகள் ஒன்றிய அரசுக்கு உவப்பாக இருக்காது என்ற உண்மையையும் உணரவேண்டும்.

 கேரளாவின் சபரிமலை ஐயப்பனைத் தரிசிக்க இந்த ஆண்டு கட்டுக்கடங்காக் கூட்டம் கூடியுள்ளது என்ற செய்தி உண்மையா?
உண்மையே. இதனால் பேருந்து போக்குவரத்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஐயப்பனைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கமுடியாமல் கேரள தேவஸ்தான போர்டு தவித்து வருகின்றது. இளைஞர்களிடம் தன்னம்பிக்கையை விடவும் இறை நம்பிக்கையே அதிகரித்து வருகின்றது.

 “கடலில் ஏற்பட்ட சுனாமி பாதிப்பையே பேரிடர் என்று ஒன்றிய அரசு அறிவிக்கவில்லையே” என்று நிதி அமைச்சர் கூறியுள்ளரே, உண்மை என்ன?
சுனாமியால் கடற்கரையோரம் வாழ்ந்த மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளான ஓராண்டு கழித்துத்தான் ஒன்றிய அரசு இயற்கை பேரிடர் என்னும் துறையை உருவாக்கியது. அதற்கு நிதியும் ஒதுக்கியது. உண்மையை மறைத்து நிதி அமைச்சர் பேசுகிறார் என்று சூழலியல் ஆர்வலர் சுந்தர்ராஜன் கூறியுள்ளார்.

சிறந்த நகைச்சுவையாக 2023ஆம் ஆண்டில் அதியன் கருதுவது எதை?
செய்தியாளர்களிடம் நாம் தமிழர் கட்சியின் சீமான் பேசும்போது,“தமிழ்நாடு என் நாடு. இங்கே நான்தான் அதிபர், முதல்வர். என்னிடம் GST எல்லாம் கேட்கமுடியாது. செய்தியாளர், ‘அது சென்ட்ரல் கவர்மெண்ட் விவகாரம்” என்றவுடன் சீமான்,“என்ன சென்ட்ரல் கவர்மெண்ட்’ என்று கூறிய பதிலே இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை.

 எந்த வகையில் வரலாறு படைத்துள்ளது 2023ஆம் ஆண்டு?
நாடாளுமன்ற வரலாற்றில் 149 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இது புதிய வரலாறு. மூன்றில் ஒரு பங்கு உள்ள நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாமல் சட்ட முன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதும் புதிய வரலாறு.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.