“உழவில்லை எனில் உணவில்லை” விழிப்புணர்வு பேரணி நடத்திய இமயம் வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள். !
“உழவில்லை எனில் உணவில்லை” விழிப்புணர்வு பேரணி நடத்திய இமயம் வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள். ! முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சுட்டெரிக்கிறது வெயில். புவி வெப்பமயமாதல் என்பதோடு, சுற்றுச்சூழலியல் மாற்றமும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. நகர்மயமாக்கம் அதிகரிப்பதற்கேற்ப பெரும் எண்ணிக்கையிலான மரங்கள் வெட்டப்படுகின்றன.
வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்பது மனம் கவர்ந்த வாசகங்களாக மட்டுமே, நம் நினைவில் நிற்கின்றன. இந்த பின்னணியில், “மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்”, “உழவில்லை எனில் உணவில்லை” என்ற முழக்கங்களோடு பள்ளி மாணவர்களின் பங்கேற்போடு விழிப்புணர்வு பேரணியை நடத்தியிருக்கின்றனர், திருச்சி மாவட்டம், துறையூறை அடுத்த கண்ணனூரில் அமைந்துள்ள இமயம் வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள்.
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் கிராமத்தில் அரசுப்பள்ளி மாணவர்களை அணிதிரட்டி, பாடாலூரின் பிரதான வீதிகளில் விழிப்புணர்வு வாசகங்களை தாங்கிய பதாகைகளுடன் பேரணியாக சென்றனர். இமயம் வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கான ஊரக வேளாண் பணி அனுபவத்தில் பகுதியாக நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியை கல்லூரி மாணவர்கள் மோ. குருநாத், த. ஹரிபிரசாத், ம. ஐயப்பன், ஜ. ஜாவித் அலி, சீ.பு.ஜெயபிரியன், ரா.கபிலன், வெ.கபிலன், க. கார்த்திகேயன், கு. கவின்குமார், ஞா.கிருபாகரன் ஆகியோர் ஒருங்கிணைத்து வழிநடத்தினர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீர் வளம் மண்வளம் பாதுகாப்பை மையப்படுத்திய இந்த பேரணியின் வழியே, மண்வளத்தை பற்றியும் நீர் மேலாண்மை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அங்குசம் செய்திப்பிரிவு