அங்குசம் பார்வையில் ‘ஒரு நொடி’ படம் எப்படி இருக்கு !
அங்குசம் பார்வையில் ‘ஒரு நொடி’ படம் எப்படி இருக்கு ! தயாரிப்பு: ’மதுரை அழகர் மூவிஸ் & ஒயிட் லேம்ப் பிக்சர்ஸ்’ ஜி.அழகர், கே.ஜி.ரத்தீஷ்,. டைரக்ஷன்: பி.மணிவர்மன். நடிகர்—நடிகைகள்: தமன்குமார், ஸ்ரீரஞ்சனி, எம்.எஸ்.பாஸ்கர், வேலராமமூத்தி, பழ.கருப்பையா, ஜி.அழகர், தீபா சங்கர், நிகிதா, அருண் கார்த்திக், விக்னேஷ் ஆதித்யா, கருப்பு நம்பியார், கஜராஜ். ஒளிப்பதிவு: கே.ஜி.ரத்தீஷ், இசை: சஞ்சய் மாணிக்கம், எடிட்டிங்: எஸ்.குரு சூர்யா, ஆர்ட் டைரக்டர்: எஸ்.ஜே.ராம். பி.ஆர்.ஓ. பி.ஸ்ரீ வெங்கடேஷ்.
இரவு 9.30 மணி. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் காவல்நிலையத்திற்கு வருகிறார் சகுந்தலா( ஸ்ரீரஞ்சனி ). தனது கணவர் சேகரனை ( எம்.எஸ்.பாஸ்கர் ) காலை 10.30—லிருந்து காணவில்லை என புகார் கொடுக்க வருகிறார். “இப்ப நைட்டு ஒன்பதரை மணி தாம்மா ஆகுது. பத்து மணிக்கு கடை அடைச்சுருவாய்ங்க. அதுக்குப் பிறகு அவனே வீட்டுக்கு வந்துருவான்” என அலட்சியமாக பதில் பேசுகிறார் ஏட்டு மாணிக்கம் ( கருப்பு நம்பியார் ). உடனே சகுந்தலா, ”கம்ப்ளெய்ண்டை எடுக்கப்போறீகளா?” என ஆவேசமாகிறார்.
இதையெல்லாம் கேட்டபடி, உள் அறையில் இருந்து வெளியே வருகிறார் இன்ஸ்பெக்டர் பரிதி இளமாறன் ( ஹீரோ தமன்குமார்). சகுந்தலாவை உட்கார வைத்து என்ன நடந்தது என்பதை பொறுமையாகக் கேட்கிறார். கந்துவட்டிக்காரன் கரிமேடு தியாகுவிடம் ( வேல ராமமூர்த்தி ) தங்களது மகள் திருமணத்திற்காக கடன் வாங்கியதையும் அதற்காக வீட்டுப் பத்திரத்தை அவனிடம் கொடுத்த கதையையும் சொல்கிறார் சகுந்தலா.
எம்.எஸ்.பாஸ்கரை இன்ஸ்பெக்டர் தமன்குமார் கண்டு பிடித்தாரா? என்பதற்கு விடை சொல்லும் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘ஒரு நொடி’யின் ஒன்லைன். சிம்பிளான இந்த ஒன்லைனை செம வெயிட்டான சீன்களை ஒன் பை ஒன்னாக கனெக்ட் பண்ணி, கனகச்சிதமாக விறுவிறுப்பான திரைக்கதையை கட்டமைத்து க்ரைம் த்ரில்லர் ஜானரில் படத்தை நகர்த்திக் கொண்டு போய், யாருமே எதிர்பார்க்காத, யூகிக்க முடியாத க்ளைமாக்ஸுடன் படத்தை முடித்த டைரக்டர் மணிவர்மனுக்கு மணிமகுடமே சூட்டலாம். அவ்வளவு நேர்த்தியான, கடினமான உழைப்பைக் கொட்டியிருக்கிறார்கள் டைரக்டரும் அவருக்கு உறுதுணையாக இருந்த தொழிநுட்பக் கலைஞர்களும். மணிமகுடத்தை டைரக்டருக்கு மட்டுமல்ல, ஹீரோ தமன்குமார், கேமராமேன் ரத்தீஷ், மியூசிக் டைரக்டர் சஞ்சய் மாணிக்கம், எட்டிட்டர் குரு சூர்யா, ஆர்ட் டைரக்டர் எஸ்.ஜே.ராம் ஆகியோருக்கும் தாரளமாக சூட்டலாம்.
சரி, இப்ப கேரக்டர்களின் பெர்ஃபாமென்ஸைப்பத்தி சொல்லியே ஆகவேண்டும். இன்ஸ்பெக்டர் பரிதி இளமாறன் கேரக்டரில் 100% ஃபிட்டாகியிருக்கார் ஹீரோ தமன்குமார். கந்துவட்டி தியாகுவை ஸ்டேஷனுக்கு தூக்கிட்டு வந்து ரகசிய அறையில் விசாரிக்கும் ஸ்டைல், தியாகுவுக்கு சப்போர்ட்டாக வரும் எம்.எல்.ஏ.பழ.கருப்பையாவிடம் காட்டும் காக்கி கெத்து, ஸ்ரீரஞ்சனிக்கும் அவரது மகளுக்கும் அனுசரணையுடன் ஆதரவு காட்டும் பண்பு, நகைக்கடையில் வேலை பார்க்கும் பார்வதி ( நிகிதா ) கொலையை விசாரிக்கும் தோரணை, கிரிமினல்களிடம் காட்டும் கம்பீர லுக் என எல்லா ஏரியாவிலும் நடிப்பில் தூள் கிளப்பியிருக்கார் தமன்குமார்.
பத்து வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் நல்லதொரு இடமும் அந்தஸ்தும் கிடைக்கப் போராடிக் கொண்டிருக்கும் தமன்குமாருக்கு இந்த ‘ஒரு நொடி’ நிச்சயம் நல்ல பலன் தரும், தரட்டும்.
தொடர்ந்து போலீஸ் விசாரணையாக போய்க் கொண்டிருக்கும் திரைக்கதையில் நிகிதாவுக்கு ஒரு லவ் எபிசோடை சின்னதாக வைத்திருப்பதற்காக டைரக்டரை மீண்டும் ஒருமுறை பாராட்டலாம். நிகிதாவின் பெற்றோராக வரும் தயாரிப்பாளர் அழகர்—தீபா சங்கர் தம்பதிகளில் தீபா சங்கரின் நடிப்பு ஓவர் ஆக்டிங் தான். வேலராமமூர்த்தி, பழ.கருப்பையா ஆகியோரின் கேரக்டர்கள் பல இடங்களில் மிடுக்காக இருந்தாலும் சில இடங்களில் கடுப்பாகவும் இருக்கிறது.
சீனியர் ஆர்ட்டிஸ்ட் எம்.எஸ்.பாஸ்கரைப் பற்றி, அவரின் நடிப்பு ஆற்றலைப் பற்றி நாம் புதிதாக எதுவும் சொல்ல வேண்டியதில்லை. இவரின் மனைவியாக வரும் ஸ்ரீரஞ்சனியின் நடிப்புக்கு சாட்சி, அந்த ஐந்து நிமிட க்ளைமாக்ஸ் காட்சி. அதே போல் போலீஸ்காரர்களாக வரும் கருப்பு நம்பியார், அருண் கார்த்திக், தமன்குமாரின் ஜீப் டிரைவர் என எல்லா கேரக்டர்களுமே உதவும் மனப்பாங்கு உள்ள நல்லவர்களாக இருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம். செம ஸ்ட்ராங்கான க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் சீனில் வரும் விக்னேஷ் ஆதித்யாவுக்கு தாராளமாக சபாஷ் போடலாம்.
நமது வாழ்க்கையில் ஒரு நொடியில் நடக்கும் ஒரு சம்பவம், அது நல்லதாகவோ, கெட்டதாகவோ நமது வாழ்க்கையையே புரட்டிப் போடலாம் என்பதை மிகத்திறம்படச் சொன்ன இந்த ‘ஒரு நொடி’ மிகச்சிறந்த படைப்பு என்பதில் சந்தேகமேயில்லை. மலையாளப்படங்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் தியேட்டர் ஓனர் மகராசாக்களே… இந்த ‘ஒரு நொடி’யையும் கைப்பிடித்து தூக்கிவிடுங்கப்பு. ஒங்களுக்கு புண்ணியமா இருக்கும்.
–மதுரை மாறன்