நூலேணி பதிப்பகத்தின் ஹைக்கூ திருவிழா – 2026
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்ற நூலேணி பதிப்பகத்தின் ஹைக்கூ திருவிழா – 2026 நடைபெற்றது . விழாவில் உலகத்தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றத்தின் நிறுவுனர் கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்கள் தலைமையில் ஹைக்கூ கவியரங்கம் சிறப்பாக நடைபெற்றது.
கவியரங்கில் கவிஞர்கள் யுகபுத்திரன், ந.வேலாயுதம், அனுராதா சவுரிராஜன், முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி, சாந்திசரவணன், சஞ்சீவி மோகன்,நம்மவூர் கோபிநாத்,கவிதா பிருத்திவி, அனலேந்தி,ஹாரிங்டன் ஹரிஹரன், சுப சந்திரசேகரன், பாளை மாணிக்கம், வீரமுத்து, பெ.அருணகிரி,வாலிதாசன் ஆகியோர் கலந்து கொண்டு ஹைக்கூ கவிதைகளை வாசித்தனர்.
முன்னோடிகளின் ஹைக்கூக்களை இடையிடையே சொல்லி கைத்தட்டலைப் பெற்றார் கவியரங்கத் தலைவர் கா.ந.கல்யாணசுந்தரம். கவியரங்கில் கலந்துகொண்டோருக்கு நூலேணி பதிப்பகம் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா புத்தகங்களைப் பரிசாகக் கொடுத்தார்.
விழாவில் 30க்கும் மேற்பட்ட நூல்களை முனைவர் இராம.குருநாதன் அவர்கள் வெளியிட ஓவியக் கவிஞர் மலர்மகன் பெற்றுக்கொண்டார். நூல்களை வெளியிட்டு முனைவர் இராம.குருநாதன் பேசுகையில் ஹைக்கூ கவிதைகள் எளிமையான சொற்களோடு தமிழ் மண் சார்ந்த மரபு காத்து சமூக அவலங்களை வெளிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக தமிழ்ப்பல்லவி இதழ் ஆசிரியர் முனைவர் பல்லவி குமார் தமிழ் ஹைபுன் குறித்த நீண்ட நெடிய உரை ஆற்றுகையில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் ஹைக்கூவை வளர்த்தெடுத்த முன்னோடிகளின் பணிகள் மற்றும் சாதனைகள் வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்படுகிறது…. இது ஹைக்கூ வரலாற்றில் பதிவேற்றப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு தமிழ் ஹைபுன் கவிதை நூல்களை கவிஞர்கள் பெரிதும் வரவேற்று புத்தகங்களைப் படைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
ஆசா பதிப்பகம் கவிஞர் ஆரீசன் அவர்கள் தமிழ் ஹைக்கூ மற்றும் சென்றியு குறித்த உரை ஆற்றினார். அடுத்த உலக ஹைக்கூ மாநாடு மற்றும் நூலேணி ஹைக்கூ திருவிழா இரண்டையும் பேரா.தமிழ் எழுத்தாளர் சங்கம் கவிஞர் பச்சைபாலன் தலைமையில் மலேசியாவில் நடத்த உள்ளதாக அரங்கில் உறுதி கூறினார். அனைவரது வரவேற்பையும் பெற்றார். முன்னிலை வகித்த கவிஞர் கல்லை மலரடியான் அவர்கள் ஹைக்கூ கவிஞர்களை வாழ்த்திப் பேசினார். விழாவில் ஹைக்கூ ஆளுமை ஓவியக் கவிஞர் அமுதபாரதி உள்ளிட்ட பல கவிஞர்கள் கலந்து கொண்டனர்.
விழா நிகழ்வுகளை அன்புப்பாலம் ஆசிரியர் பன்முகத் தென்றல் ச.விஜய் ஆனந்த் அவர்கள் மிகச் சிறப்பாக தொகுத்தளித்தார். தன்முனைக் கவிதைகள் குழுமத்தின் செயல் தலைவர் கவிஞர் ந.வேலாயுதம் நன்றி கூறினார். விழாவில் கவிஞர்களுக்கு ஹைக்கூ விசிறி, சாவிக்கொத்துகள் வழங்கப்பட்டன.








Comments are closed, but trackbacks and pingbacks are open.