நகராட்சி பூங்காவில் அத்துமீறி கட்டப்பட்ட கட்டிடம் ! அனுமதி அளித்த அதிகாரி யார் ? கேள்வி எழுப்பும் பொதுமக்கள்!
திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சிக்குட்பட்ட 22 வது வார்டுப் பகுதியில் , ஓங்காரக்குடில் அருகே உள்ள நகராட்சிக்கு சொந்தமான பூங்காவில் தற்போது கட்டிடம் ஒன்று புதியதாக கட்டப்பட்டு முடிவுறும் தருவாயில் உள்ளது சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மேலும் இதே பூங்காவில் பெரிய தகரத்தாலான ஷெட் அமைத்துள்ளனர். அதில் இறகுப்பந்து விளையாடுவதற்குண்டான உள் அரங்கம் அமைக்கப்பட்டதாக தெரியவருகிறது. பொதுவாகவே நகராட்சி பூங்காக்களில் எவ்விதமான கட்டிடங்களோ , ஆக்ரமிப்புகளோ இருக்கக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு உள்ள நிலையில், அந்த இடம் சிறுவர்கள் விளையாடுவது மற்றும் வயது முதிர்ந்தோர் சிறிது நேரம் உட்கார்ந்து ஓய்வெடுப்பது என்பதற்கான இடம் என்பதையே மறந்து பூங்காவிற்குள் கட்டிடம் கட்டப்படுவதை எப்படி அனுமதிப்பது ? இதற்கு அனுமதி அளித்த அதிகாரி யார் ?
நகராட்சிக்கு சொந்தமான பூங்காவில் அத்துமீறி கட்டிடத்தை கட்டி வரும் நபர் யார் என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பிய நிலையில் சமூக ஆர்வலர்கள் சிலர் இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகள் கேட்டுள்ளனர். அதற்கு நகராட்சி நிர்வாகம் சரியான பதிலை அளிக்காமல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தற்போது 22 வது வார்டு குடில் பகுதியில் உள்ள அந்தப் பூங்காவில் கட்டப்பட்டு வரும் கட்டிடம் பூச்சி வேலை செய்து வர்ணம் பூசக்கூடிய நிலையில் உள்ளது. இத்தகைய அத்துமீறலின் செயல் குறித்து தஞ்சை நகராட்சி மண்டல இயக்குனர் மற்றும் சென்னை பெருநகராட்சி மண்டல இயக்குனர் அவர்களுக்கும் புகார் அளித்திருந்த நிலையில் அதிகாரிகளும் இதுகுறித்து துறையூர் நகராட்சி நிர்வாக அதிகாரிகள் மூலம் நேரில் வரவழைத்து விசாரித்து அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை இடித்து அகற்றுமாறு உத்தரவிட்டதாகவும் தெரியவரும் நிலையில் துறையூர் நகராட்சி ஆணையர் நகரமைப்பு ஆய்வாளர் நகராட்சி பொறியாளர் உள்ளிட்டோர் கைகட்டி வேடிக்கை பார்த்து மெத்தன போக்கை கடைபிடித்து வருவதாக சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் இதுகுறித்து சந்தேகம் எழுப்பிய சமூக ஆர்வலர்கள் சிலர் துறையூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பூங்காக்களை நகராட்சி நிர்வாகம் தனி நபர்களுக்கு இதேபோன்று தாரை வார்த்து விட்டதா என்ற சந்தேகத்தையும் எழுப்பி உள்ளனர் . மேலும் இந்த 22 ஆவது வார்டு நகராட்சி பூங்கா திமுக நிர்வாகி ஒருவரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், பூங்காவிற்குரிய கேட்டின் சாவியை அவரே வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
துறையூர் நகராட்சியில் நகரமைப்பு ஆய்வாளர்களாக மொத்தம் உள்ள 24 வார்டுகளில் 12 வார்டுகளுக்கு ஒரு அதிகாரியும், மீதமுள்ள 12 வார்டுகளுக்கு ஒரு அதிகாரியும் பிரித்து வார்டுகளை ஆய்வு செய்து வரக்கூடிய நிலையில், துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட22 ஆவது வார்டு நகராட்சி பூங்காவில் அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ள கட்டிடப் பணி முடிவுறும் தருவாயில் வரையிலும் அதனை கண்டு கொள்ளாமல், கட்டிடம் கட்டிய திமுக நிர்வாகி மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமலும், இது நாள் வரை கண்டுகொள்ளாமலும் இருந்த நகரமைப்பு ஆய்வாளர் மற்றும் நகராட்சி கமிஷனர் உள்ளிட்டோர் மீது பெருத்த சந்தேகத்தை எழுப்புவதாகவும்,
இது பற்றிய செய்திகள் சமூக வலைதளங்களில் புகைப்படத்துடன் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து துறையூர் நகராட்சி ஆணையர் சம்பத்தப்பட்ட நபர் மீதும் , இதனை கண்டு கொள்ளாமல் இருந்த நகரமைப்பு ஆய்வாளர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து துறையூர் நகராட்சி ஆணையர் கண்ணனிடம் செல்போனில் தொடர்பு கொண்ட போது , “22 ஆவது வார்டில் உள்ள நகராட்சி பூங்காவில் கட்டப்படும் கட்டிடம் குறித்து தமக்கு எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை, இதுநாள் வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் இருந்ததால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை எனவும் மேலும், இதுகுறித்து காவல்துறையிடம் ஏற்றவே புகார் அளித்துள்ளோம். தற்போதும் இதுகுறித்து நடவடிக்கைக்காக நகராட்சி அதிகாரிகளை துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சொல்லி இருக்கிறேன் என கூறி முடித்துக் கொண்டார்.
தற்போது தமிழக அரசில் ஏற்பட்டுள்ள நிலையை தனக்கு சாதகமாக்கி தனது வார்டில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தை எப்படியாவது முடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் அத்துமீறி செயல்பட்டு வரும் திமுக நிர்வாகி மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டடத்தை இடித்து அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நகராட்சி பூங்காவினை கொண்டு வர வேண்டும் என 22 ஆவது வார்டு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் நகராட்சி அதிகாரிகள் இடத்தில் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனர். துறையூர் நகராட்சி பூங்காவில் எவ்வித அனுமதியும் இன்றி கட்டப்படும் கட்டிடம் பற்றிய சர்ச்சை தொடர்வதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.








Comments are closed, but trackbacks and pingbacks are open.