பெண் பத்திரிகையாளர்களை மீண்டும் இழிவுபடுத்திய எஸ்.வி.சேகர் ! வழக்குப்பதிய கோரிக்கை !
தான் நடித்த நாடக காட்சி ஒன்றில், பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் விதமாக பேசியிருந்ததையடுத்து, மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார், நடிகரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர். ஏற்கெனவே, ஒருமுறை இதேபோல குறிப்பாக பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்திய பதிவுக்காகத்தான் நீதிமன்றத்தின் கண்டனத்தையும் ஒருமாத சிறை தண்டனையையும் எதிர்கொண்டார். தற்போது, அந்த தண்டனை தீர்ப்புக்கு எதிராக, மன்னிப்பு கேட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கும் நிலையில்தான் மீண்டும் அதே பாணியில் பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தியிருக்கிறார்.
மயிலாப்பூரில் தாங்கள் வசித்த தெருவிற்கு தனது தந்தையின் பெயரை சூட்ட வேண்டுமென்ற கோரிக்கையோடு தமிழக முதல்வரை சந்தித்து தனது நாடக விழாவில் பங்கேற்க அழைப்பும் விடுத்து தற்போது ஆளும் கட்சியுடன் நெருக்கமாக இருப்பதாக காட்டிக் கொண்டார் எஸ்.வி.சேகர். இந்த பின்னணியிலிருந்தே தற்போது, அதுவும் தற்செயலாக அல்ல; தெளிந்த சிந்தனையோடு “எவன் என்ன செய்துவிட முடியும்?” என்று சவால் விடும் வகையில்தான் அந்த நாடகத்தில் டயலாக் எழுதி தானே பேசி நடித்துமிருக்கிறார் எஸ்.வி.சேகர்.
எஸ்.வி.சேகரின் திமிர்ப்பேச்சுக்கு எதிராக பலரும் கண்டனங்களை தெரிவித்திருக்கும் நிலையில், சென்னை பத்திரிகையாளர் மன்றமும் தனது கடும் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் ம சுரேஷ் வேதநாயகம் பொதுச்செயலாளர் மு அசீப் ஆகியோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.
அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், “கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்களை மிகவும் கீழ்த்தரமாக சித்தரிக்கும் பதிவு ஒன்றை நடிகர் எஸ்.வி.சேகர் தன்னுடைய முகநூலில் மறுபதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு பத்திரிகையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பத்திரிகையாளர்ளும் பத்திரிகையாளர் அமைப்புகளும் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். எஸ்.வி.சேகரை கண்டித்து ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.
பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் வகையில் செயல்பட்ட எஸ்.வி.சேகர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்தது. இதை எதிர்த்து எஸ்.வி.சேகர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தற்போது, நிவாரணம் கோரி உச்சநீதிமன்றத்தை எஸ்.வி.சேகர் நாடியுள்ளார்.
இந்தநிலையில், எஸ்.வி.சேகர் சமீபத்தில் நடத்தியுள்ள நாடகத்தில், பெண் பத்திரிகையாளர்களை மோசமாக சித்தரிக்கும் வகையிலும், அவர்களை பாலியல் ரீதியாக இழிவுபடுத்தும் வகையிலும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்தமுறை பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் வகையில் பதிவிட்டதற்கு,
பத்திரிகையாளர்கள் மத்தியிலும், நீதிமன்றத்திலும் மன்னிப்பு கேட்ட எஸ்.வி.சேகர் தற்போத அதே தவறை மீண்டும் செய்துள்ளார். இதன்மூலம், தான் செய்த தவறை எஸ்.வி.சேகர் உணரவில்லை என்பது உறுதியாகிறது.
மேலும், தான் செய்வது என்வென்பதை அறிந்தே அவர் செய்துள்ளார் என்பதும் தெளிவாகிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஆகவே, பெண் பத்திரிகையாளர்களை மீண்டும் கீழ்த்தரமாக பேசியுள்ள எஸ்.வி.சேகரை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
எஸ்.வி.சேகர் நடத்திய நாடகத்தில் பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிராக இடம்பெற்று காட்சி தொடர்பாக எஸ்.வி.சேகர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
அதேபோல், உச்சநீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறை சார்பாக மனுதாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.” என்பதாக கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்கள்.
— அங்குசம் செய்திப்பிரிவு.