பி.எட் பயின்ற கணினி ஆசிரியர்கள் முதல்வருக்கு கோரிக்கை !
தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவைக்கான தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் ச.ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசுக்கு தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்திருப்பதோடு, தங்களது நீண்ட நாள் கோரிக்கையை கனிவுடன் பரிசீலிக்குமாறும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார், அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வெ.குமரேசன்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “புதிதாக பொறுப்பேற்கும் தமிழக அரசுக்கு தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
கல்வித்துறையில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும் மாணவர்கள் கோரிக்கையான கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது தனிப்பாடமாகவும் கட்டாய பாடமாகவும் கொண்டு வர வேண்டும். இதனை கற்றுக் கொடுக்க மற்ற பாட ஆசிரியர்களை போன்று கணினி அறிவியல் பாடத்திற்கும் முறையாக பி.எட் பயின்ற கணினி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.
இந்தியாவிலே கணினி அறிவியல் பாடம் இல்லாத ஒரே மாநிலம் தமிழகம் தான். கணினி அறிவியல் பாடத்திற்கென பி.எட். பயின்ற ஆசிரியர்களை நியமனம் செய்து மாணவர்களுக்கு முறையான கல்வியயை கொண்டு சேர்க்க வேண்டும்.
ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழகத்தில் கணினி அறிவியல் பாடம் என்பது அரசு பள்ளியில் இல்லை. அதற்கான பாட புத்தகங்களும் பாட வேலைகளும் இல்லை.” என்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
– அங்குசம் செய்திப்பிரிவு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.