கலைமகள் சபா விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் தொடர் கண்காணிப்பில், ஓய்வு பெற்ற நீதியரசர் எஸ்.எஸ்.சுந்தர் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து கலைமகள் சபா தொடர்பான நிலங்களை விற்று தீர்வு ஏற்படுத்தி தருவதற்கான முன்னெடுப்புகள் நடைபெற்று வருகின்றன. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐ.ஏ.எஸ். தனி அலுவலராக தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில், பணமாக அல்ல நிலமாகத்தான் தீர்வு வேண்டும் என்ற கோரிக்கையில் கலைமகள் சபா உறுப்பினர்களில் ஒரு தரப்பினர் உறுதியாக நிலைப்பெற்று வருகிறார்கள். கலைமகள் சபா உறுப்பினர்கள் நலன் மற்றும் பாதுகாப்பு அறக்கட்டளை (Kalaimagal Sabha Members Welfare and Protection Trust) என்ற பெயரில் அமைப்பாக அணிதிரண்டு, கலைமகள் சபா உறுப்பினர்கள் உரிமை மீட்பு கூட்டத்தை கடந்த ஆகஸ்ட் 09 அன்று கோவை காந்திபுரம் ஆர்.வி ஹோட்டலில் நடத்தியிருக்கிறார்கள்.
பூ. வெ. கோபால் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக G. பழனியப்பன், K. R. குப்புசாமி மற்றும் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் வழக்கறிஞர் N. அறிவழகன் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களும் திரளாக கலந்துகொண்டனர்.
அறக்கட்டளையின், பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டமாகவும் நடைபெற்ற இந்நிகழ்வில்,
* கலைமகள் சபா உறுப்பினர்களின் பொதுநலனை கருத்தில் கொண்டு, அனைத்து வழக்குகளும் Trust மூலம் ஒருங்கிணைத்து நடத்துவது.
* சங்க துணை விதிமுறைகளின்படி உறுப்பினர்களுக்கு நிலமாகவே சொத்துகளை உடனடியாக பிரித்து வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுவது.
* E-Auction மூலம் சொத்து விற்பனை செய்யும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
* உறுப்பினர்களுக்காக பதிவு செய்யப்பட்ட சொத்துகளை “கலைமகள் சபா” பெயரில் மாற்றும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.
* உறுப்பினர்களின் பிரதிநிதித்துவம் இன்றி சுமார் 870 ஏக்கர் நிலங்கள் விற்பனை செய்யப்பட்டது மற்றும் கணக்கு விவரங்கள் வெளியிடப்படாதது ஆகியவற்றுக்கு கண்டனம்.
* உறுப்பினர் விவரங்கள், பங்குகள், நிதி விபரங்கள் ஆகியவை வெளிப்படையாக வெளியிடப்பட வேண்டும்.
* தற்போதைய தனி அலுவலரை மாற்றம் செய்ய வேண்டும். அனைத்து தகவல்களையும் இணையதளத்தில் வெளியிட்டு வெளிப்படைத்தன்மை உறுதி செய்ய வேண்டும்.
* உறுப்பினர்கள் செலுத்திய தொகைக்கு ஏற்ப நிலம் அல்லது உரிய மதிப்பில் சொத்து வழங்கப்பட வேண்டும்.
* ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துகளை நீதிமன்ற வழிகாட்டுதலுடன் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* உறுப்பினர்களின் முழுமையான விவரங்களை சேகரித்து, பங்களிப்பிற்கு ஏற்ப நிலம் வழங்குதல், ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைத்தல்.
* அதிகபட்சம் ஒரு ஆண்டிற்குள் நிரந்தர தீர்வு காண குழு மனப்பான்மையுடன் பணிகளை முன்னெடுப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள்.
தொடர்புக்கு : 9994662582
— அங்குசம் செய்திப் பிரிவு.









Comments are closed, but trackbacks and pingbacks are open.