அங்குசம் செய்தி எதிரொலி ! டிஜிபி பிறப்பித்த அதிரடி உத்தரவு !
அங்குசம்செய்தி எதிரொலி ! டிஜிபி பிறப்பித்த அதிரடி உத்தரவு ! அங்குசம் ஆடுகளம்
சமீபத்தில் திருச்சி மாநகரில் நள்ளிரவில் ஒரு குறிப்பான குற்றச்சம்பவம் தொடர்பாக, பிரத்யேகமான தகவல் ஒன்றை தெரிவிக்கும் பொருட்டு குறிப்பிட்ட காவல் எல்லைக்குட்பட்ட உதவி ஆணையரை அங்குசம் சார்பில் தொடர்பு கொள்ள முயற்சித்தோம்.
போலீசாரின் பொது இணையத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரியின் தொடர்பு எண் கிடைக்காத நிலையில், சம்பந்தப்பட்ட காவல் நிலையம், நுண்ணறிவு பிரிவு போலீசார் வரையில் முயற்சித்தும் முடியாமல் போனது. போலீசாரின் அலட்சியமான பதிலையே எதிர் கொள்ள நேரிட்டது.
அடுத்தகட்ட முயற்சியாக, அன்றைய நாளின் இரவு ரோந்து அதிகாரிகளின் விவரங்களை தேடினோம். அப்போதுதான், இரவு ரோந்து அதிகாரிகள் பற்றிய தகவல் பொதுமக்கள் பார்வையில் படும்படி சமூக வலைதளத்தில் பதிவிட வேண்டும் என்ற டிஜிபியின் முந்தைய உத்தரவு திருச்சி உள்ளிட்டு சில மாவட்டங்களில் அமல்படுத்தப்படாதிருப்பதை அறிந்தோம்.
இந்த பின்னணியில் இருந்தே, “டிஜிபி உத்தரவை மதிக்காத 11 மாவட்ட போலீசார்” என்ற தலைப்பில் அங்குசத்தில் செய்தியாக்கிருந்தோம்.
செய்தியை காண
DGP உத்தரவை மதிக்காத 11 மாவட்ட காவல்துறை !
பொதுவில் போலீஸ் உதவி எண் 100 நடைமுறையில் உள்ள போது அந்தந்த மாவட்டங்களில் இது போன்ற குறிப்பான காவல் அதிகாரிகளின் விவரங்கள் பொதுவெளியில் ஏன் பகிரப்பட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. முதல் காரணம் பல நேரங்களில் அவசர உதவி எண் 100 ஐ தொடர்பு கொள்வதிலேயே சிக்கல் இருப்பதாக பலரும் தெரிவிக்கிறார்கள். அடுத்து, அவர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தகவல் கொடுத்து அந்த காவல் நிலையத்தில் இருந்து காவலர் வந்து சேர்வதற்குள் குற்றமும் பாதிப்பும் நிகழ்ந்தேறிவிடுகிறது.
இதற்கு மாற்றாக, அந்தந்த பகுதிகளில் இரவு காவல் பணிபுரியும் காவல் அதிகாரிகளின் எண்களில் நேரடியாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் மிக மிக குறுகிய கால இடைவெளியில் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து சேர்ந்துவிட முடியும்.
மற்றொரு முக்கியமான காரணம், அன்றைய இரவு காவல் பணிக்கு பொறுப்பான உயர் அதிகாரிகளின் எண்களும் இடம் பெற்றிருப்பதால் சம்பந்தப்பட்ட காவலர் கடமை தவறும் பட்சத்தில் உடனடியாக உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வாய்ப்பு இருக்கிறது.
டிஜிபி சங்கர் ஜிவால்.
இவற்றையெல்லாம் விட மிக முக்கியமான விஷயம். ஒரு குற்றம் நிகழ்த்தப்படுவதற்கு முன்பாகவே, முன்கூட்டியே தகவல்கள் பகிரப்பட்டு அக்குற்றம் தடுத்து நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. சில இடங்களில் குற்ற சம்பவங்களுக்கு உடந்தையாக செயல்படும் போலீஸ் கருப்பு ஆடுகள் குறித்த தகவல்களும் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்கான வாய்ப்பை கொண்டிருக்கிறது.
போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் நேரடியான தொடர்பை பேணுவதற்கான வாய்ப்புகளோடு, உருப்படியான நம்பகமான துப்புத் தகவல்களையும் பொதுமக்களிடமிருந்து பெறுவதற்கு பாலமாகவும் அமைகிறது. இவற்றையெல்லாம் நாம் தெளிவாக பதிவு செய்திருந்த பின்னணியில் இருந்து தான், தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி.க்களுக்கு டிஜிபி அலுவலகத்தில் இருந்து பறந்திருக்கிறது அந்த உத்தரவு.
இரவு ரோந்து அதிகாரிகளின் விவரங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்பதை சுற்றறிக்கையாகவே அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைத்திருக்கிறார், போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால்.
அங்குசம் செய்தி எதிரொலியாக தமிழகத்தில் இப்படி ஒரு நல் முன்னெடுப்பு நிகழ்த்தப்பட்டிருப்பது ஊக்கமளிக்கிறது. அங்குசத்தின் சமரசமற்ற ஊடகப்பணி தொடரும்…
— ஆசிரியர்.