விவாகரத்து : இவ்வளவு விஷயம் இருக்கா ?
என்ன காரணங்கள் கூறி கணவரோ மனைவியோ விவாகரத்து கேட்க முடியும் ?
1.கள்ள தொடர்பு. 2. தொழு நோய். 3. கொடுமைப்படுத்துதல் மன ரீதியான கொடுமையும் உள்ளடங்கும். 4. பாலுறவு நோய். 5. ஒருவர் இன்னொருவரை விட்டு விலகி போதல். 6. துறவறம் செல்லுதல். 7. மதம் மாறி செல்லுதல். 8. கணவர் அல்லது மனைவி உயிரோடு இருக்கிறாரா என தெரியாமல் இருத்தல். 9. மன நல பாதிப்புக்கு உள்ளாகி இருந்தால். 10. இணைந்து வாழாமல் இருத்தல். மேலே சொன்னது இருவருக்கும் பொதுவானது.
மனைவி, கணவர் மேல் விவாகரத்து கேட்க, கூடுதலான காரணங்கள் :
- கணவர் வேறு பெண்ணை கற்பழிப்பு செய்கை செய்திருந்தால், விலங்குகளோடு உடலுறவு கொண்டால், மல வாய் மூலம் ஒரு ஆணுடனோ பெண்ணுடனோ உடலுறவு கொண்டால்.
- ஹிந்து திருமண சட்டம் (1956) நடைமுறைக்கு வந்தபிறகு, முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது இரண்டாம் திருமணம் செய்திருந்தால்.
- பதினைந்து வயதுக்கு முன் ஒரு பெண் ஒருவரை திருமணம் செய்திருந்து பதினெட்டு வயதுக்குள் அந்த திருமணத்தை துறந்தால்.
- ஒரு வருடமாக உடலாலும் மனதாலும் பிரிந்திருந்தால் மேலும் மனைவி ஜீவனாம்ச வழக்கு போட்டு தீர்ப்பாகி கணவர் அதை மதித்து பணம் கட்டாமல் இருந்தாலும் மனைவி கணவரிடம் விவாகரத்து கேட்கலாம்.
விவாகரத்து வழக்கு எங்கு தாக்கல் செய்யலாம்.
கடைசியாக இருவரும் எங்கு கணவர் மனைவியாக வாழ்ந்த இடம். இதற்கு எழுத்துபூர்வமான ஏற்று கொள்ள கூடிய ஆதாரம் வேண்டும். உதாரணம் வாடகை ஒப்பந்தம், குடும்ப அட்டை, திருமணம் நடந்த இடம் , எதிர்மனுதாரர் குடியிருக்கும் இடம் .
மனைவிக்கு கூடுதல் வாய்ப்பு, மனைவி விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யும் போது, எந்த இடத்தில் வசிக்கிறாரோ அந்த இடத்தில் சார்பு நீதிமன்றம் அல்லது குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம்.
உதாரணம் – மதுரை மாநகராட்சி எல்கைக்குட்பட்டது என்றால் மதுரை குடும்ப நீதிமன்றம். மதுரை மாநகராட்சிக்கு வெளியே என்றால், சார்பு நீதிமன்றம்.
என்ன ஆவணங்கள் தேவைப்படும்.
- கணவரின் இருப்பிட சான்று. 2. மனைவியின் இருப்பிட சான்று. 3. திருமண பத்திரிக்கை அல்லது திருமணம் பதிவு செய்திருந்தால், திருமண சான்றிதழ். 4. திருமண புகைப்படம் . 5. யார் வழக்கு தாக்கல் செய்கிறார்களோ அவர்களது பாஸ்போர்ட் புகைப்படம். 6. இருவரும் சேர்ந்து வாழ எடுத்து கொண்ட முயற்சிகள் தோற்று விட்டன என்பதை காட்டும் ஆவணங்கள் (இருந்தால்). 7. வருமான வரி சான்றிதல்கள் (இருந்தால்). 8. என்ன வேலை பார்க்கிறார், என்ன சம்பளம் வாங்குகிறார் என்ற விவர சான்றிதல்கள் (இருந்தால்). 9. குடும்ப background பற்றிய தகவல்களை காட்டும் ஆவணங்கள் (இருந்தால்). 10. ஒரு வருடத்திற்கு மேல், கணவர், மனைவி பிரிந்து வாழ்கிறார்கள் என்பதை காட்டும் ஆவணம் (இருந்தால்). 11. சொத்துக்கள் ஏதும் கணவர், மனைவிக்கு இருந்தால், அதை காட்டும் ஆவணம்( இருந்தால்).
P.M.சுந்தரமூர்த்தி M.A.,M.L.,
அரசு வழக்கறிஞர்,
திருப்பத்தூர்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.