திமுக கோட்டையை கூட்டணி கட்சிக்கு காவு கொடுப்பதா? கொந்தளித்த தொண்டர்கள் !
திருச்சி – துறையூர் சட்டமன்ற தொகுதியை மீண்டும் திமுகவிற்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், துறையூர் அண்ணா பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலையின் முன்பு திமுகவினர் ஒன்று திரண்டு கண்டன முழக்கம் எழுப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த இரண்டு முறையாக துறையூர் தனி சட்டமன்றத் தொகுதியானது திமுக வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு துறையூர் தொகுதியை ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதனை அறிந்த திமுகவினர் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்தும் விதமாக இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.
துறையூர் சட்டமன்றத் தொகுதி திமுகவின் கோட்டையாக மாறி உள்ளதை அமைச்சர் கே என் நேருவே பாராட்டி பேசி உள்ளார் எனவும் இதுகுறித்து திமுகவின் தலைமை நன்றாக உணர்ந்துள்ள நிலையிலும்; தற்போதுதிமுக எம்எல்ஏவாக இருந்து வரும் ஸ்டாலின் குமார் இத்தொகுதிக்கு பொதுமக்களின் கோரிக்கையை பெருமளவில் நிறைவேற்றி கொடுத்துள்ளதை குறிப்பிட்டும்; திமுக ஆட்சியில் தொகுதிக்கு செய்யப்பட்டுள்ள பல்வேறு நலத்திட்டங்களை குறிப்பிட்டும் மீண்டும் இத்தொகுதியில் திமுக அறுதி பெரும்பான்மை பெற்று வெற்றி பெறக்கூடிய சூழல் நிலவி வரும் நிலையில் இப்படி ஒரு அறிவிப்பா என்றே கேள்வி எழுப்புகிறார்கள்.
மக்கள் விரும்பும் வேட்பாளருக்கு தான் சீட் என்று திமுக தலைமையே கூறிவரும் நிலையில், தற்போது கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு துறையூர் தொகுதியை ஒதுக்கி உள்ளதை ஏற்றுக் கொள்ளாத மக்களின் மனநிலையானது , சுயேட்சையாக களம் காண்வதற்கான வாய்ப்பையும் கொண்டிருப்பதாகவே சொல்கிறார்கள்.
— அங்குசம் தேர்தல் செய்திக்குழு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.