ஈழமகள் சாரா ஏன் நெகிழ்ந்தார்?
திருப்பரங்குன்றம் மலை மீது ஏறி, ‘ஜெயிச்சிட்டேன் முருகா’ என்று உரக்க முழங்கிவிட்டு, முதன் முதலாக சென்னைக்கு, அதுவும் தனியாக வந்ததாக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் நேற்று நடைபெற்ற ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ நிகழ்வில் சொன்னது, திருத்தணி மலை வரை நிச்சயம் எதிரொலித்திருக்கும்.
சனாதனம் எப்போதும் பெண்களை ஒடுக்க நினைக்கும். சமூக நீதி அவர்களுக்கான சமத்துவத்தை வழங்கும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ விழா தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சியின் பாலின சமத்துவ உரிமைகளுக்கான சான்றாக அமைந்தது.
1 கோடியே 30 இலட்சத்து 69 ஆயிரத்து 831 பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் பெறும் வகையில் நேற்றைய விழாவில் இத்திட்டம் புதிய பயனாளிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதுமைப் பெண், வெற்றி நிச்சயம், மக்களைத் தேடி மருத்துவம், தோழி விடுதி, நான் முதல்வன் உள்ளிட்ட திராவிட மாடல் அரசின் பல திட்டங்களும் தமிழ்நாட்டுப் பெண்களின் வாழ்வில் மறுமலர்ச்சியையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
தலைமுறையின் வளர்ச்சியை சிந்திக்கும் அரசுதான் இதனை சாதிக்க முடியும். இவை வெறும் வாக்குகளுக்கான திட்டங்களல்ல என்பதை, அந்த விழா மேடையில், ஒரு கைக்குட்டையில் தன் திறனை வெளிப்படுத்தி, அதை முதலமைச்சரிடம் பரிசளித்து, ‘அப்பா’ என்று நெகிழ்ந்த ஈழமகள் சாராவின் குரல் உரக்கச் சொன்னது.
2021 முதல் தமிழ்நாட்டில் உள்ள 100க்கும் அதிகமான இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வாழ்பவர்களின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஏறத்தாழ 4000 வீடுகள் கட்டி முடித்து அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும் 3000 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. மாத உதவித் தொகை, தொழில் பயிற்சி, கல்வி உதவி, மகளிர் சுயஉதவிக்குழு கடனுதவி, இரு சக்கர வாகனங்களைத் தங்கள் பெயரில் பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பு எனப் பலவும் அவர்களுக்கு கிடைத்து வருகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், கொரோனா நிவாரண நிதி என தமிழ்நாட்டு மக்களுக்கானத் திட்டங்கள் அனைத்தும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்கும் கிடைக்கச் செய்திருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர்.

திருவண்ணாமலை மாவட்டம் தச்சூர் முகாமில் வசிக்கும் ஈழமகள் சாரா பி.காம் படித்துள்ளார். பொதுவாகவே, இலங்கைத் தமிழ்ப் பெண்களுக்கு தையல் கலையில் ஆர்வம் உண்டு. வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், ‘ஆரி’ எனப்படும் தையல் கலையினைப் பயிலும் வாய்ப்பைப் பெற்ற அந்த ஈழமகள், மணமகள்கள் அணியும் உடைகளில் ஆரி கலையைப் பயன்படுத்துவதை வெற்றிகரமாக நிறைவேற்றி, இன்று தன் கையில் ஒரு திறனை வைத்திருப்பதுடன், அந்தத் திறனுக்கு ஊக்கமாகவும் உதவியாகவும் நின்ற முதலமைச்சருக்கு, தன் கைத்திறனில் எம்பராய்டரி போட்ட கர்சீப்பை வழங்கி மகிழ்ந்திருக்கிறார்.
மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை கிடையாது. வாக்குரிமையும் கிடையாது. அதை வழங்க வேண்டிய அதிகாரம் ஒன்றிய அரசிடம்தான் உள்ளது. ஆனாலும், தமிழ்நாட்டில் வாழும் ஈழமகள்களுக்கும் தாயுமானவராகத் திகழ்கிறார் திராவிட நாயகரான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
— கோவி.லெனின்








Comments are closed, but trackbacks and pingbacks are open.