தேர்தல் விதிமுறைகளை காற்றில் பறக்க விட்ட நகராட்சி அதிகாரிகள் !
திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா பேருந்து நிலையப் பகுதியில் அண்ணா சிலை , கலைஞர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் கட்சி சார்ந்த விளம்பர பதாகைகள் பெரும்பாலான இடங்களில் உள்ளன. நேற்று மாலை நான்கு மணி அளவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டும், இதுவரை அரசியல் தலைவர் சிலைகள் மறைக்கப்படவில்லை, விளம்பர பதாகைகளும் அகற்றப்படாமல் உள்ளன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு ஆரம்பத்திலேயே விதிமுறைகளை பின்பற்றாத அதிகாரிகள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இறந்தவர்களுக்காக வைக்கப்படும் அறிவிப்பு பலகைகள் மற்றும் திருவிழா சம்பந்தமான விளம்பர பதாகைகளை அகற்றுவதில் உள்ள ஆர்வம் அரசியல் கட்சி நிகழ்வுகளில் அதிகாரிகள் மெத்தனம் காட்டுவது ஏன் என்ற கேள்வியும் பொது மக்களிடையே எழுந்துள்ளது.
அரசியல் கட்சி நிர்வாகிகள் தாங்களாகவே முன்வந்து தங்களது தலைவரின் சிலைகள் மற்றும் கொடிகளை அகற்றிக் கொள்ள வேண்டும், தவறும் பட்சத்தில் நகராட்சி அதிகாரிகள் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது. ஆனால் இதுவரை அகற்றப்படாமலும், சிலைகளை துணிகள் சுற்றி மறைக்காமலும் நகராட்சி அதிகாரிகள் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
மேலும் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் துறையூர் தொகுதிக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது போல் அதிகாரிகளின் நடவடிக்கை மற்றும் அலட்சியப் போக்கு உள்ளதாக சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வேதனை தெரிவிக்கின்றனர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.