வைகோவின் பஞ்சாயத்து – சமாதனம் நீடிக்குமா ? மல்லை சத்யாவை விலைபேசும் கட்சிகள்
கடந்த வாரத்தில் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணிக் கூட்டம் மதிமுக தலைமையாகமான தாயகத்தில் நடைபெற்றது. அதில் உரையாற்றிய கட்சியின் முதன்மை செயலாளர் துரைவைகோ,“கட்சியில் உள்ள ஒருவர் இயக்கத்தின் தந்தைக்கும் கட்சிக்கும் எதிராக கடந்த 7 ஆண்டு காலம் செயல்பட்டு வருகிறார். இவரை நீக்க வேண்டும்” என்று பேசினார். அந்த ஒருவர் மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாதான் என்பது எல்லாருக்கும் தெரியும்.
அந்தக் கூட்டத்தில் பேசிய மல்லை சத்யா,“எனக்கு முகவரி வைகோதான். என்னை அடையாளப்படுத்திய மதிமுகவை நான் உயிருக்கும் மேலாக நேசிக்கிறேன். நான் யாருக்கும் எதிராக செயல்படவில்லை” என்று உரையாற்றினார். தொடர்ந்து பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பேசும்போது,“முதன்மை செயலாளர் துரைவைகோ, துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா இடையே சின்னசின்ன கருத்து வேறுபாடுகள் முரண்பாடுகள் ஏற்பட்டுவிட்டன. இது விரைவில் தீர்க்கப்பட்டுவிடும். இது கண்ணாடியில் விழுந்த விரிசல் அல்ல; நீரில் விழுந்த விரிசல். நீரடித்து நீர் விலகாது. மாமல்லபுரம் கடலில் படகு பயணம் செய்தபோது நான் சென்ற படகு கவிழ்ந்தபோது என்னை கடலிலிருந்து காப்பாற்றியவர் மல்லை சத்யா. இருவரிடையே இருக்கும் பிரச்சனைகள் பேசி ஏப்ரல் 20ஆம் நாள் நடைபெறவுள்ள கட்சியில் நிர்வாகக்குழுக் கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்படும்” என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து துரைவைகோ ஆதரவு மதிமுக மாவட்டச் செயலாளர்கள் பலர், துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவைக் கட்சியிலிருந்து நீக்கவேண்டும் என்று தீர்மானங்களை நிறைவேற்றி கட்சியின் தலைமைக்கு அனுப்பி வைத்தனர். உடனே வைகோ,“மாவட்டச் செயலாளர்கள் மல்லை சத்யா தொடர்பாக எந்தவொரு தீர்மானத்தையும் நிறைவேற்றி கட்சிக்கு அனுப்பி வைக்கக்கூடாது” என்று அறிக்கை விடுமளவுக்குக் கட்சியில் துரைவைகோ ஆதரவாளர்கள் கை ஓங்கியே இருந்தது.
ஏப்ரல் 14ஆம் சென்னையில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அம்பேத்கர் சிலைக்கு வைகோ மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட மல்லை சத்யா வைகோவிற்கு மாலை அணிவித்து அம்பேத்கரின் சிறிய சிலையை வழங்கினார். மல்லை சத்யா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று துரைவைகோ கோரிக்கை வைத்த நிலையில், மல்லை சத்யாவோடு வைகோ சிரித்துக்கொண்டு, அவர் கொடுத்த மரியாதையை ஏற்றுக்கொண்டது துரைவைகோவிற்குச் சினத்தை ஏற்படுத்தியது.
கடந்த 19ஆம் நாள் துரைவைகோ விடுத்த அறிக்கையொன்றில்,“நான் பொறுப்பில் உள்ள முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன். இயக்கத் தந்தைக்கும் கட்சிக்கும் எதிராக செயல்படுவரை கட்சியில் வைத்துக்கொண்டு என்னால் முதன்மை செயலாளர் பொறுப்பில் நீடிக்கமுடியாது. அந்தப் பொறுப்பிலிருந்து என்னை விடுவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,“துரைவைகோ முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகியது என்ற செய்தியைத் தொலைக்காட்சியைப் பார்த்துதான் தெரிந்துகொண்டேன்” என்று கூறினார். தந்தையிடம் மனம் விட்டு பேசும் அளவிற்கு கோபமான மனநிலையில் துரைவைகோ இருந்தார் என்பதை உணர்ந்துகொள்ளலாம்.
20ஆம் நாள் மதிமுக தலைமையகத்தில் கட்சியின் நிர்வாகக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அக் கூட்டத்தில் கலந்துகொள்ள புறப்பட்ட

ஆனந்தவிடகனுக்குப் பேட்டிக் கொடுத்தபோது,“தேவையானால் நான் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள தயாராக இருக்கிறேன்” என்று அறிவித்தார். காலையில் தொடங்கிய கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அது தொடர்பான விவாதங்கள் நடைபெற்றன. இதை செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, துரைவைகோ – மல்லை சத்யா பிரச்சனை என்ன ஆனது என்று கேட்டபோது மாலை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.
மாலை 4.30 மணியளவில் வைகோ செய்தியாளர் சந்திப்பில்,“துரைவைகோ – மல்லை சத்யா இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் குறித்து விரிவாக பேசப்பட்டது. விவாதிக்கப்பட்டது. மல்லை சத்யா,“கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் என் படத்தை இணையத்தில் பயன்படுத்தி, கட்சிக்குக் களங்கம் ஏற்படுத்தியத்திற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. என்றாலும் முதன்மை செயலாளர் துரைவைகோவிற்கு மனம் புண்பட்டிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எதிர்காலத்தில் இப்படி எதுவும் நடக்காது” என்று கூறினார். இதனையடுத்து துரைவைகோ சமாதானம் அடைந்தார். கட்சியின் வளர்ச்சிக்கு நானும் மல்லை சத்யாவும் இணைந்து கட்சியின் வளர்ச்சிக்குப் பாடுபடுவோம்” என்று கூறினார். இருவரும் கைக்குலுக்கி ஒருவரையொருவர் ஆரத்தழுவிக் கொண்டனர். இந்நிலையில் மல்லை சத்யா சிரித்துக்கொண்டிருக்க, துரைவைகோவின் முகத்தில் சிரிப்பில்லை. சீரிஸ்-ஆகவே இருந்தார்.

வைகோவின் இந்தப் பஞ்சாயத்தில் துரைவைகோவிற்கு உடன்பாடு இருந்ததாகத் தெரியவில்லை. தான் செய்யாத செயலுக்காக மல்லை சத்யா மன்னிப்பு கேட்டதைக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ஏற்கவில்லை. மதிமுகவில் ஏற்பட்ட இந்தப் பிரச்சனையில் ஒரு செய்தி தெளிவாகியுள்ளது. மதிமுகவில் வைகோ அணி என்றும் துரைவைகோ அணி என்றும் இரு அணிகள் செயல்பட்டு வருவது தெளிவாகியுள்ளது. தற்போது மதிமுகவில் துரைவைகோவின் கையே ஓங்கியுள்ளது. தற்போது வைகோ செய்துவைத்த பஞ்சாயத்து எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெரியவில்லை. மல்லை சத்யா தொடர்ந்து கட்சியில் நீடிப்பது என்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்று மதிமுகவின் முன்னாள் பகுதி செயலாளர் அங்குசம் செய்தியிடம் தெரிவித்தார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மதிமுகவின் உள்கட்சி பிரச்சனை தற்போது தீர்க்கப்பட்டாலும் அது நீறுபூத்த நெருப்பாகவே இருக்கும் என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மதிமுக கட்சியில் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு, செயல்பட்டால், கட்சியின் செயல்பாடுகள் திராவிட கருத்தியலுக்கு வலிமை சேர்க்கும் என்ற எதிர்பார்ப்பே திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
— ஆதவன்.