இலங்கையில் ‘தனிஈழம்’ கோரிக்கையை முன்வைத்து ஈழத்தமிழர்கள் நடத்திய உள்நாட்டுப்போர் 2009ம்ஆண்டு முடிவடைந்த பின்னரும் பிரச்சினை ஓய்ந்த பாடில்லை. ஒவ்வொரு வருடமும் ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில், ‘இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றம் குறித்து சர்வதேச நீதி விசாரணை வேண்டும்’ என்ற கோரிக்கையை விடுத்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளியினரான மலையகத் தமிழர்களுக்கு உள்நாட்டு நிர்வாக அமைப்பான பிரதேச செயலக முறையில் (தாலுக்கா) உரிய வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என அம்மக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இலங்கை நாடாளுமன்றத்தில் இப்பிரச்சினை பேசப்பட்டு, அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டு ‘வர்த்தமானி’ எனும் அரசாணையிலும் பிரகட னம் செய்யப்பட்டும் கூட தமிழர்களுக்கான பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை.
இலங்கையில் தமிழர்கள் அதிகளவில் வாழும் நுவரெலியா மாவட்டத்தில் ஐந்து புதிய செயலகங்களை அமைப்பதற்கு மாறாக உதவி காரியாலங்களை மட்டுமே அமைக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாகக் குற்றஞ்சாட்டி மலையகத் தமிழர் தரப்பில் கையெழுத்து இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலக ராஜா, ‘மலையக அரசியல் அரங்கம்’ எனும் அமைப்பை உருவாக்கி, அதன் ஊடாக பொதுமக்கள் கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகிறார். இவரே இலங்கைப் பாராளுமன்றத்துக்கு இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றவர் என்றும் பாராளுமன்ற அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் உள்ள தேயிலை, காப்பி தோட்டங்களில் கூலி வேலைச் செய்வதற்காக சென்ற தமிழ்நாட்டின் பூர்வகுடிகளான இம்மக்களின் இலங்கைக் குடியுரிமையை 1948 ம் ஆண்டே அப்போதைய ஸ்ரீலங்கா அரசு பறிமுதல் செய்து இருந்தது. அதன் பின்னர் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மிகுந்த போராட்டங்களுக்கு மத்தியில் தமிழ் மக்களுக்கு இலங்கைக் குடியுரிமைக் கிடைத்தது.
பெரும் போராட்டங்கள் மூலம் பெற்ற குடியுரிமை, இலங்கையில் வாக்களிப்பதற்கான உரிமையை அம்மக்களுக்கு வழங்கி இருக்கிறதே தவிர இலங்கையில் ஏனைய இனமக்கள் அனுபவிக்கும் உரிமைகள் முழுமையாக தமிழ் மக்களுக்கு கிடைப்பதில்லை என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.