வழி மறித்து தாக்கிய காவல்துறை! உண்ணாவிரதப் போராட்டத்தில் விவசாயிகள்!
திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம். விவசாய விளைபொருட்களுக்கு 2 மடங்கு லாபகரமான விலை வழங்க வேண்டும்.கோதாவரி காவிரியை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் நீதிமன்ற உத்தரவை பெற்று கடந்த நவம்பர் 17 -ம் தேதி டெல்லியில் போராட்டம் நடத்த ரயில் மூலம் புறப்பட்டு சென்றனர்.
பின்னர் மறுநாள் பாதி வழியில் மத்திய பிரதேச மாநிலம் நர்மதாபுரம் ரயில் நிலையத்தில் மத்திய பிரதேச காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
பின்னர் துரந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு பெட்டிகளை கூடுதலாக இணைத்து அவர்களை திருப்பி அனுப்ப முயற்சித்தனர். அப்போது ரயில் பெட்டிக்குள் நெருக்கடி ஏற்பட்டதால் மேலும் இரண்டு பெட்டிகளை இணைக்க வலியுறுத்தி ரயில் நிலையம் முன்பு அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக நாக்பூர் ரயில்வே போலீசார் அய்யாக்கண்ணு உள்ளிட்ட 307 விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்து சம்மன் அனுப்பி உள்ளனர்.
இதை கண்டித்து இன்று அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். போராட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் முன்னிலை வகித்தார். இதில் வக்கீல் முத்துசாமி, கொட்டப்பட்டு பரமசிவம், தமிழ்செல்வன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.