“விபத்து நடந்தால் கைதுதான்… அமைச்சர் கீர்த்தனாவிடம் பட்டாசு உற்பத்தியாளர்கள் குமுறல்!
சிவகாசி: தமிழகத்தின் பட்டாசு தலைநகராக விளங்கும் சிவகாசியில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தலைமையில் நடைபெற்ற பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் ஆலோசனைக் கூட்டம், தொழில்துறையினரின் குமுறலால் பரபரப்பாக மாறியது. வெடி விபத்துகளுக்குப் பிறகு ஆலை உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் சட்ட நடவடிக்கைகள் முதல், புதிய ஆலைகளுக்கான அனுமதி வரை பல்வேறு பிரச்சினைகள் அதிகாரிகள் முன்னிலையில் முன்வைக்கப்பட்டன.
“விபத்து நடந்ததும் கைது… தொழிலாளர்களுக்கே உதவ முடியவில்லை!”
கூட்டத்தில் பேசிய பட்டாசு உற்பத்தியாளர் ஒருவர், ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டவுடன் உரிமையாளர்களை உடனடியாக கைது செய்யும் நடைமுறை பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக வேதனை தெரிவித்தார்.
“கரூர் துயரச் சம்பவத்தில் முதல்வர் விஜய் அனுபவித்த வேதனையைப் போலவே, ஒவ்வொரு விபத்தின்போதும் நாங்களும் அனுபவித்து வருகிறோம். ஆனால் விபத்து நடந்த உடனேயே எங்களை கைது செய்வதால், உயிர் தப்பிய தொழிலாளர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் உடனிருந்து உதவ முடியாத நிலை உருவாகிறது” என அவர் உருக்கமாக பேசினார்.
ஆலை உரிமையாளர்களை உடனடியாக கைது செய்யும் நடைமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் அரசிடம் கோரிக்கை விடுத்தார்.
“நாயை விட மோசமாக நடத்துகிறார்கள்!”
மற்றொரு உற்பத்தியாளர் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 60 பட்டாசு ஆலைகள் செயல்படத் தயாராக இருந்தும், அதிகாரிகள் அனுமதி வழங்க மறுப்பதாக குற்றம் சாட்டினார்.
அதிகாரிகளின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்த அவர், “அதிகாரிகள் எங்களை நாயைவிட மோசமாக நடத்துகிறார்கள்” என வேதனை தெரிவித்தார்.
மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் சுமார் ₹180 கோடி முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் தயாராக இருந்தும், அதற்கான வாய்ப்பை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
இதனை தொடா்ந்து உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை முழுமையாக கேட்டறிந்த தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, பட்டாசு தொழிலின் வளர்ச்சிக்கும், தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் நலனுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும், அனைத்து வகையான ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
— மாரீஸ்வரன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.