அங்குசம் பார்வையில் ‘ஹபீபி’
தயாரிப்பு: நேசம் எண்டெர்டெய்ன்மெண்ட் சாகுல் ஹமீது, கோவை இப்ராஹிம், ஜிகேஎஸ் பிரதர்ஸ் புரொடக்சன்ஸ் வி.குணசேகரன், வி.கருப்பசாமி, வி.சங்கர், தமிழ்நாடு ரிலீஸ்: ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இயக்கம்: மீரா கதிரவன், கதாசிரியர்: முகமது அமீன், நடிகர்- நடிகைகள்: கஸ்தூரி ராஜா, ஈஷா, மாளவிகா மனோஜ், தனஸ்ரீ, இஸ்மத் பானு, அனுஸ்ரேயா ராஜன், ரேகா குமணன், ஒளிப்பதிவு: மகேஷ் முத்துசாமி, இசை: சாம் சி.எஸ். எடிட்டிங்: விஎஸ்.மதி, ஆர்ட் டைரக்டர்: அப்புன்னி சாஜன், பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா & ஏ.அப்துல் நாசர்.
நெல்லை மாவட்டத்தில் நெசவுத் தொழில் செய்து வாழ்கையை நகர்த்தும் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி தான் கதைக் களம். அங்கு கண்ணாடி வாப்பா மன்ஸில்( இல்லம்) குடும்பத் தலைவர் முகமது யூசுப் ( கஸ்தூரி ராஜா) அவரது மனைவி, மகன் அபுதாஹிர் ( ஈஷா), யூசுப் பின் தம்பி, இவரது மனைவி என கூட்டுக் குடும்பமாக வாழ்கிறார்கள். கைத்தறி நெசவு மட்டும் குடும்பத்தைக் காப்பாற்ற முடியாது என்று நினைத்து யூசுப் தம்பி வளைகுடா நாட்டுக்கு வேலைக்குச் செல்கிறார்.
சிறு வயதிலிருந்தே நிலோஃபர் நிஷா ( மாளவிகா மனோஜ்) மீது அபுதாஹிருக்கு ஒரு பிரியம். வாலிப வயதில் இருவருக்குள்ளும் காதல் பூக்கிறது. ஆனால் பொருளாதார ஏற்றத் தாழ்வு அதற்கு தடையாகி, நிலோஃபரை வேறு ஒருவருக்கு கட்டிக் கொடுக்கிறார்கள். நிலோஃபர் நினைப்பிலேயே கல்யாணத்தை தட்டிக் கழிக்கும் அபுதாஹிர், ஒரு கட்டத்தில் பெத்தவர்களின் வற்புறுத்தலுக் காக கதீஜா பர்வீனை ( தனஸ்ரீ) கல்யாணம் செய்ய சம்மதிக்கிறார். இந்த நிக்ஹாஹ் நடந்ததா? இதான் மனிதர்களிடையே அன்பை விதைக்கும் ‘ ஹபீபி’.
இது முழுக்க முழுக்க இஸ்லாமிய சமூகத்தின் வாழ்வியலைப் பேசும் சினிமா என்று யாரும் ஒதுக்கிவிட முடியாது, ஒதுக்கவும் கூடாது. தமிழர்களின் வாழ்வியல் என்று தான் சொல்ல வேண்டும். இருந்தாலும் இஸ்லாமிய சமூகத்தின் வாழ்வியலை இந்த அளவுக்கு நுட்பமாகவும் அறத்துடனும் பதிவு செய்த தென்னிந்திய சினிமாவை இதுவரை நாம் பார்த்ததில்லை. 1980, 94, 2003 காலகட்டங்களில் கதையை எழுதிய முகமது அமீனும் அதை திரையில் காட்சிப்படுத்தி காண்போரை கலங்க வைத்த இயக்குனர் மீரா கதிரவனும் என்றென்றும் நமது நேசத்திற்குரிய உறவுகள் தான்.
அப்பா – மகன் வணக்கம் சொல்லிக் கொள்வது, கணவன் –மனைவி வணக்கம் சொல்லிக் கொள்வது, இளையோர் தோள் தொட்டு ஆசீர்வாதம் பண்ணும் பெரிய மனுஷி, இஸ்லாமியர்கள் இறந்த பிறகு நடக்கும் சடங்குகள், இதையெல்லாம் மீரா கதிரவனால் மட்டுமே பதிவு செய்ய முடியும். அது மட்டுமல்ல, இஸ்லாமியர்களின் தமிழ்ப்பற்று, தேசப் பற்று இதை மிகச் சரியாக பதிவு செய்து சக்திகளுக்கு ‘செப்பல் ஷாட்’ பிரசண்ட் பண்ணிருக்கார் நம்ம பிரதர் மீரா கதிரவன்.
அதே சமயம் 2000–க்குப் பிறகு தான் தமிழ் முஸ்லிம் பெண்கள் பர்தா போட ஆரம்பித்ததையும் பதிவு செய்ய மறக்க வில்லை மீரா கதிரவன். ஃபோட்டோ ஸ்டுடியோ வெள்ளப் பாண்டி, முகமது யூசுப் பின் நண்பனாக மயில் வாகனன், “அண்ணே அபுதாஹிரை நம்ம வீட்ல கொண்டாந்து விடுங்கண்ணே” எனச் சொல்லும் மயில் வாகனன் மனைவி, அஞ்சுமன் அறிவகத்தின்( நூலகம்) பொறுப்பாக இந்து சகோதரி என படம் முழுக்க மனிதத்தை உயர்த்திப் பிடித்து இமயம் போல உயர்ந்து நிற்கிறார் நம்ம மீரா கதிரவன்.
படத்தின் உயிர்நாடியே கஸ்தூரி ராஜா தான். மூன்று காலகட்டங்களில் மாறுபடும் முகத் தோற்றம், உடல் மொழி, கண்களாலேயே பேசும் நடிப்பு, கஸ்தூரி ராஜா என்ற மகா நடிகனை பார்த்தாலே பரவசம் ஆகிறது. இவரது மனைவியாக வரும் அந்த பெண்மணியும் வெகுவாக கவர்ந்து விட்டார். நிலோஃபர் நிஷாவாக மாளவிகா மனோஜ். வசனம் அதிகம் இல்லை, ஆனால் முகபாவனைகளில் அற்புதமான நடிப்பை வழங்கி அசத்தி விட்டார். அதிலும் பஞ்சாயத்தில் அபுதாஹிரை புளிய விளாரால் அடிக்கும் போது, வீட்டுக்குள் தொழுகை நடத்தும் சீனில் கலங்க வைத்துவிட்டார் மாளவிகா மனோஜ். க்ளைமாக்ஸில் அவரது போர்ஷன் திணிக்கப்பட்டது போல் இருந்தது.
அபுதாஹிராக ஈஷா, கதீஜா பர்வீனாக தனஸ்ரீ, மற்றும் இஸ்மத் பானு என எல்லோருமே கதையின் மாந்தர்களாக நம் மனதில் பதிகிறார்கள். மூன்று காலகட்டங்களில் அந்த நகரம் எப்படியெல்லாம் மாற்றம் அடைகிறது என்பதை நுணுக்கமாக பதிவு செய்துள்ளார் கேமரா மேன் மகேஷ் முத்துசாமி. அன்பை விதைக்கும் இந்த ஹபீபிக்கு ஆத்மா மியூசிக் டைரக்டர் சாம் சி.எஸ்.தான். பின்னணி இசையால் படம் முழுக்க உயிரூட்டியிருக்கிறார். சில படங்களில் சில நடிகர் – நடிகைகளைப் பற்றி எழுதும் போது அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார் என்று எழுதுவோம். இந்த ஹபீபியிலோ இஸ்லாம் சமூகத்தில் நம்மையெல்லாம் உறவுகளாகவே வாழ வைத்துள்ளார் அன்புச் சகோதரர் மீரா கதிரவன். திசையெல்லாம் பரவட்டும் இந்த கதிரவன் ஒளி.
அங்குசம் பார்வையில் ‘ஹபீபி’ 75/100
— ஆண்டவர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.