அங்குசம் பார்வையில் ‘ஹிட்-3’
தயாரிப்பு : ‘வால் போஸ்டர் சினிமாஸ்’ & ’யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ்’ பிரசாந்தி திப்ரினேனி & நானி. ரசனையும்—இயக்கமும் [ டைட்டில் கார்டில் இப்படித்தான் போட்டார்கள்] சைலேஷ் கொலானு. ஆர்டிஸ்ட்ஸ் : நானி, ஸ்ரீநிதி ஷெட்டி, சமுத்திரக்கனி, சூர்யா ஸ்ரீனிவாஸ், அதில் பாலா, ராவ் ரமேஷ், மகந்தி ஸ்ரீநாத், ரவீந்திர விஜய், பிரதீக் பாபர், அமித் ஷர்மா & நம்ம கார்த்தி [ ஹிட்-4-க்கு க்ளைமாக்ஸில் எண்ட்ரி]. ஒளிப்பதிவு : சானு ஜான் வர்க்கீஸ், இசை : மிக்கி ஜே.மேயர், எடிட்டிங் : கார்த்திகா ஸ்ரீனிவாஸ். தமிழ்நாடு ரிலீஸ் : ‘சினிமாக்காரன்’ வினோத்குமார், பி.ஆர்.ஓ. : யுவராஜ்.
சைக்கோ கொலைகாரர்கள், ட்ரக் மாஃபியாக்களை வேட்டையாடுவதற்கென்றே ஆந்திர மாநிலம் விசாகபட்டணத்தில் இருக்கும் போலீஸ் டீமுக்குப் பெயர் தான் ‘ஹிட்’. இந்த டீமில் எஸ்.பி.யாக இருக்கும் அர்ஜுன் சர்க்கார், [நானி] இரண்டு பேரை மரத்தில் தலைகீழாக தொங்கவிட்டு கொடூரமாக கொலை செய்த குற்றத்திற்காக விசாகபட்டணம் செண்ட்ரல் ஜெயிலுக்குப் போகிறார். அவர் ஏன் அந்த கொடூரக் கொலைகளைச் செய்தார்? கொலைக்கான காரணம் என்பது தான் இந்த ‘ஹிட்’-3’யின் ரத்னச் சுருக்கமான கதை.
இதை ரத்தம் தெறிக்கத் தெறிக்க இரண்டரை மணி நேரம் நானி நடத்தும் ப்ளட் ரிவெஞ்ச் ஆபரேஷன் தான் ஹிட்-3’யின் வெரிஹீட் சமாச்சாரம். ஜெயிலுக்குள் இன்னொரு கைதியிடம் நானி சொல்லும் ஃப்ளாஷ்பேக்கில் ஆரம்பிக்கிறது படம். ஜம்மு—காஷ்மீரில் எஸ்.பி.யாக இருக்கும் போது, மரத்தில் தலைகீழாக தொங்கவிட்டு கொலை செய்தவனை வேட்டையாட களத்தில் இறங்குகிறார். ஒருவனைப் பிடித்த பின் பிகார் மாநிலத்தில் இருக்கும் கொலையாளியைத் தேடிப் போகிறார். பிடிபட்ட இருவருமே நானியின் கஸ்டடியில் இருக்கும் போதே தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
இதனால் அங்கிருந்து விசாகபட்டணத்தில் இருக்கும் ஹிட் டீமிற்கு டிரான்ஸ்பர் ஆகிறார். அங்கே அதே பாணியிலான சில கொலைகளைச் செய்து அதை வீடியோவாக எடுத்து அப்லோட் பண்ணுகிறார் நானி. அதன் பின் ஒரு கொலைகாரனைத் தேடி இராஜஸ்தான், அதைத் தொடர்ந்து அருணாச்சலப்பிரதேசம் என நானியின் ‘ஹிட்’ வேட்டை தொடர்கிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
நானியின் அசால்டான நடிப்பு, ஸ்ரீநிதி ஷெட்டியைப் பார்த்ததும் ஃபால் இன் லவ், கொடியவர்களைத் தாக்கும் போலீசின் காட்டடிமாட்டடி என நானியின் வெரைட்டியான பெர்ஃபாமென்ஸ் ரசிக்க வைக்கிறது. ஸ்ரீநிதிக்கு முன்னால் சிலரை அப்ரோச் பண்ணும் போது, அடிக்கடி சில கெட்டவார்த்தைகளைப் போட்டுவிட்டு, டக்டக்குன்னு ஸாரி கேட்பது, அப்பா சமுத்திரக்கனியிடம் அடிக்கடி முறைப்பது, “அம்மா வளர்ப்பு இல்லாததால தான் நீ இப்படி கோபப்படுறே” என ஸ்ரீநிதி ஷெட்டி சொன்னதும் உருகுவது, இதெல்லாம் நானியின் குட் பெர்ஃபாமென்ஸ் ஏரியாக்கள்.
நானியின் ஜோடியாக, சக போலீஸ் அதிகாரியாக ஸ்ரீநிதி ஷெட்டி பளிச்சுன்னு இருக்கார், நடிக்கவும் செஞ்சுருக்கார். நானிக்கும் இவருக்கும் ஒரே ஒரு டூயட் தான் என்பதே நமக்கு ஆறுதல் தான். விசாகபட்டணம்,காஷ்மீர், பீகார், இராஜஸ்தான், அருணாச்சலப்பிரதேசம் என பம்பரமாய் சுற்றிச்சுழன்று உழைத்திருக்கிறார் கேமராமேன் சானு ஜான் வர்க்கீஸ். மியூஸிக் டைரக்டர் மிக்கி ஜே.மேயர், ‘மைக்செட்’ ஓனரா இருந்திருப்பார் போல. ஃபுல்வால்யூமில் பேக்ரவுண்ட் ஸ்கோர் போட்டு அலறவிட்ருக்கார்.
ரசனையும் இயக்கமும் சைலேஷ் கொலானு என டைட்டிலில் பார்த்ததுமே ‘ரைட்டு கொஞ்சம் ரசனையாத்தான் இயக்கியிருப்பார்னு நினைச்சோம். நம்முடையா நினைப்பு முக்கால்வாசி ஒர்க்-அவுட் ஆகிவிட்டது. அதிலும் மனித உறுப்புகள் மூலம் போதை மருந்து தயாரிக்கும் கொடிய கும்பல், அந்தப் போதை வெளிநாடுகளில் சர்வசாதாரணமாக புழங்குவதை க்ளைமாக்ஸில் டீடெய்லாக சொல்லி ரசிக்க, சிலிர்க்க வைக்கிறார் சைலேஷ் கொலானு.
ஆனா பெருங்கொடுமை என்னன்னா இடைவேளைக்குப் பிறகு படம் ஆரம்பித்து பதினைந்தாவது நிமிடத்தில் அருணாச்சலப்பிரதேசம் ஏரியாவுக்குள்ள கதை போன பிறகு, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஒரே வெட்டு, குத்து, கழுத்தறுப்பு, ரத்தச்சகதி தான். நம்ம இடுப்புல எவனாவாது கத்திய சொருகிருவானோ, கழுத்துல கத்திய இறக்கிருவானோன்னு ஒடம்பெல்லாம் நடுங்கிப் போச்சு.
க்ளைமாக்ஸில் ஏசிபி வீரப்பனாக மாஸ் எண்ட்ரி கொடுத்து ‘ஹிட்-4’க்கு எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறார் நம்ம கார்த்தி. அதுலயாவது ரத்தச் சகதியைக் கம்மி பண்ணி, இன்னும் அதிக ரசனையா டைரக்ட் பண்ணுங்க சைலேஷ் கொலானு.
— மதுரை மாறன்.