கை கால்களை கட்டி வைத்து … காலில் சிலிண்டரை கட்டி தொங்கவிட்ட போலீசார் ! அதிரடி காட்டிய மனித உரிமை ஆணையம் !
Lockup Death | ஓட்டேரி | கிஷோர் குமார் | பேச்சிவேல் | சாத்தான்குளம் | மாமூல் | போலீஸ் கஸ்டடி
வழக்கு ஒன்றின் விசாரணைக்காக அழைத்துச்சென்ற நபரை போலீசு நிலையத்தில் வைத்து கொடுமைபடுத்தியதாக எழுந்த புகாரில், சம்பந்தபட்ட போலீசார் இருவருக்கும் தலா 2 இலட்சம் அபராதம் விதித்து அதிரடி காட்டியிருக்கிறது, மாநில மனித உரிமைகள் ஆணையம்.
திருநெல்வேலியை சேர்ந்தவர் சந்திரா. இவரது மகன் பேச்சிவேல். கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர்-10 ஆம் தேதி, வழக்கு ஒன்றின் விசாரணைக்காக பேச்சிவேலை தேடி வருகிறார்கள் திருநெல்வேலி டவுன் போலீசார். அவர் நடத்தி வரும் மளிகை கடையில் புகுந்து தேடி பார்த்தும், பேச்சிவேல் இல்லாததால், கடையை அடித்து நொறுக்கிவிட்டு பொருட்களை சேதப்படுத்தியிருக்கிறார்கள் போலீசார். சம்பந்தபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கமிஷனருக்கு புகார் அனுப்பி வைக்கிறார்கள்.

இதனால் மேலும் ஆத்திரமுற்ற போலீசார், பேச்சிவேலை விசாரணைக்கு அழைத்து செல்கின்றனர். இரண்டு நாட்கள் சட்டவிரோத கஸ்டடியில் வைத்து விசாரிக்கப்பட்டிருக்கிறார். அப்போதுதான் போலீசாரால் அவர் சித்திரவதைக்குள்ளாகியிருக்கிறார். விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று தன் மகனை கொடுமையாக தாக்கிய சப் இன்ஸ்பெக்டர் விமலன், காவலர் மகாராஜன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்கிறார், சந்திரா.
மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் கண்ணதாசன் வழக்கை விசாரிக்கிறார். ராஜா என்பவர் அளித்த புகாரின் பேரில் பேச்சிவேலுவை விசாரிக்க அழைத்ததாகவும், அப்போது தப்பியோட முயன்றபோது காலில் காயம் ஏற்பட்டதாகவும் உரிய சிகிச்சைக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டப்பட்டதாகவும் பேச்சிவேலுவின் மீது 20-க்கும் அதிகமான வழக்குகள் இருப்பதால், அதிலிருந்து தப்பிக்கவே போலீசுக்கு எதிராக புகார் செய்திருக்கிறார்கள் என்பதாக போலீசு தரப்பில் பதிலளித்திருக்கிறார்கள்.
நிறைவாக, ஆணையத்தின் விசாரணையில் பேச்சிவேலுவை விசாரணைக்காக அழைத்து, அவரது கை, கால்களை கட்டி வைத்து அடித்துள்ளதும்; காலில் சிலிண்டரை கட்டி தொங்கவிட்டு சித்திரவதை செய்ததும் உறுதியானதாகவும்; அவர் எப்போது கைது செய்யப்பட்டார்? எப்போது முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது? என்ற விவரம் போலீசாரால் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது என்பதையும் உறுதி செய்த ஆணையம், பாதிக்கப்பட்ட பேச்சிவேலுக்கு தமிழக அரசு 4 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. சப் இன்ஸ்பெக்டர் விமலன், காவலர் மகாராஜன் ஆகிய இருவரிடமிருந்தும் தலா 2 இலட்சத்தை பிறகு அரசு வசூலித்துக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருக்கிறார் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் கண்ணதாசன்.

இதே காலகட்டத்தில் நிகழ்ந்த சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் தந்தையும் மகனும் கொல்லப்பட்ட வழக்கு, தமிழகத்தை உலுக்கிய போலீசு கஸ்டடி கொலைகளுள் முக்கியமானது. அந்த வழக்கின் விசாரணையே ஐந்தாண்டுகளுக்கும் மேலாக, தீர்வை நோக்கி நகராமல் கிடப்பில் போடப்பட்டு கிடக்கிறது. நீதிமன்றமே தாமாக இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தும்; முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே சிபிஐ வசம் வழக்கை ஒப்படைத்த பின்னரும் ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது, அந்த வழக்கு.
இதுஒருபுறமிருக்க, போலீசு நிலைய கழிவறைகளில் குற்றவாளிகள் வழுக்கி விழுந்து கை, கால் உடைந்து போகும் சம்பவங்கள் குறித்து நீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தது. இந்த பின்னணியிலிருந்துதான், ஓட்டேரியில், மாமூல் கேட்டு மிரட்டியதாக வந்த புகாரில், இந்திய குடியரசு கட்சியை சேர்ந்த கிஷோர்குமார் என்பவரை போலீசு நிலையத்தில் வைத்து போலீசார் தாக்கியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
– ஆதிரன்.