ஆசிரியர்களின் நிர்வாக மாறுதல்களை நிறுத்துங்கள் ! ஐபெட்டோ வா.அண்ணாமலை வலியுறுத்தல்
ஆசிரியர்களின் பொது மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பங்களை EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டிய செயல்முறைகளை தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 25.06.2025 ஆகும். இந்த அறிவிப்பு வெளிவந்த உடன் கலந்தாய்வு தேதியை அறிவிப்பதற்கு முன்னர் நிர்வாக மாறுதல்கள் பெற நினைப்பவர்கள் யாரெல்லாம் அந்த இடத்திற்கு முந்திக் கொள்கிறார்களோ?.. அவர்கள் அணுக வேண்டியவர்களை அணுகி உடன் நிர்வாக மாறுதல் ஆணையினை எவ்வித தயக்கமின்றி உறுதியாக பெற்றுக்கொள்ளலாம் என்று புலனப்பதிவுகள் சமூக ஊடகங்களில் மிதந்து வருகின்றன.
புலனங்களில் கலந்தாய்வு தேதிக்கு முன்னர் காலிப் பணியிடங்கள் அனைத்தும் நிர்வாக மாறுதல் மூலமாக நிரப்பப்படும் என்று செய்தியினை வெளியிட்டு வருகிறார்கள். பத்திரிகைகள் பகிரங்கமாக நிர்வாக மாறுதல்கள் வசூல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று எழுதுகிறார்கள்.
ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதற்காக தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்கள் போராடி வருகிறார்கள். ஜாக்டோ ஜியோ இணைப்பு சங்கங்கள் போராடி வருகிறார்கள். பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் ஆசிரியர்களின் கோரிக்கைகளில் கவனம் செலுத்துவதை காட்டிலும் நிர்வாக மாறுதல்களை கொள்கை முடிவாக எடுத்து மிக தைரியமாக செய்து வருகிறார்கள்.
கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்திற்கு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிந்த பட்டதாரி ஆசிரியர் ஒருவர் நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியராக அலகு விட்டு அலகு நிர்வாக மாறுதல் பெற்று பணியில் சேர்ந்து இருக்கிறார்.
முந்தைய ஆட்சிக் காலத்தில் நடைபெறவில்லையா? என்று கேட்பார்கள்!. எல்லா ஆட்சி காலத்திலும் நடைபெற்று தான் உள்ளது. ஆனால் ஒரு எல்லைக்கோட்டில் தான் நின்று இருக்கிறார்கள். மூத்த இயக்குனர்களின் காலத்தில் அமைச்சர்கள் அளவில் பரிந்துரை வருமேயானால்.. தொடர்ந்து நாம் நிர்வாக மாறுதல்களை அளித்தால் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் என்று இயக்குனர்களே!.. அமைச்சர்களுக்கு தெரியப்படுத்தக் கூடிய தைரியம் இருந்தது. இன்று அவரவர் இடங்களை இயக்குனர்கள் தக்கவைத்துக் கொள்வதில் தான் முனைப்பு காட்டுகிறார்கள்.

இணை இயக்குனர் (நிர்வாகம்), இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி), இணை இயக்குனர் (மேல்நிலைக் கல்வி) என்ற பொறுப்புகள் எல்லாம் நிர்வாக மாறுதல்கள் அளிப்பதற்காகவே தற்போது செயல்பட்டு வருகிறது.
தலைவர் கலைஞர் காலம் தொடங்கி முந்தைய ஆட்சியாளர்கள் காலத்திலும் பெற்ற பணப் பயன்கள் எல்லாம் விதிகளை சரியாக படித்துப் பார்க்காமல், தெரிந்து கொள்ளாமல் பிடித்தம் செய்வதில் அக்கறை காட்டுகின்ற இயக்குனர்களை கல்வித்துறையில் காண முடிகிறது.
இதர பாடங்களில் பட்டம் பெற்ற 766 ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு அனுமதி ஆணை யார் வழங்கினார்களோ?.. அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கச் சொல்லி தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.
இந்த நிர்வாக மாறுதலில் கையொப்பம் இடப்பட்டு அன்றாடம் பேரத்துடன் மாறுதல் ஆணைகள் வெளிவருகின்றதே? அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்?
இதெல்லாம் தெரிந்து கொள்வது மட்டுமல்ல; அமைச்சர்கள் எந்த வகையிலும் அவர்களை அவர்களே பாதுகாத்துக் கொள்வார்கள். ஆனால் இந்த மாறுதல் ஆணைகளில் கையொப்பம் இடுபவர்கள் தான் ஒருநாள் பெருத்த பாதிப்பிற்கு ஆளாக நேரிடும் என்பதை உணர வேண்டாமா?
அரசாணை 243 க்கு திருத்திய அரசாணை வெளியிடும் வரை மாறுதல் கலந்தாய்வு நடைபெறுமேயானால் பெருத்த பாதிப்பு.. குறிப்பாக பெண் ஆசிரியர்களுக்கு ஏற்படும், என்பதை கடுமையாக பதிவு செய்கிறோம். உச்ச உச்சநீதிமன்ற தீர்ப்பு பதவி உயர்வு தொடர்பாக வெளிவராத வரையில் நடைபெறுகின்ற மாறுதல் கலந்தாய்வினால் ஆசிரியர்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.
இதுவரையில் வெளிவந்துள்ள நிர்வாக மாறுதல்களை மாவட்ட வாரியாக பட்டியலினை தயாரித்து வருகிறோம்!. அந்த மாறுதல்களை எவர் மூலம் எப்படி பெற்றார்கள் என்பதையும் சேகரித்து வருகிறோம்!..
பட்டியலினை வெளியிட வேண்டிய நெருக்கடியை தொடக்கக் கல்வி துறையோ? பள்ளி கல்வித்துறையோ? ஏற்படுத்துமேயானால் செய்தியாளர்களை அழைத்து எங்களை போன்ற இயக்கத்தின் மூத்த தலைவர்கள் ஆட்சியின் மீது அக்கறை கொண்டவர்கள் வெளியிட தயாராக உள்ளோம் என்பதை வெளிப்படை தன்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்!..
முதலில் நிர்வாக மாறுதல்களை நிறுத்துங்கள் நிறுத்துங்கள்!..
அரசாணை 243 க்கு திருத்திய அரசாணையினை வெளியிடுங்கள்!..
ஊழல் வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்று வந்த ஒரு அமைச்சரை முந்தைய ஆட்சி காலத்தில் நண்பர்கள் என்ற முறையில் நாங்கள் சந்தித்தபோது… அவர் சொன்ன இரண்டு இயக்குனர்களின் பெயரினை சொல்லியே அவர்கள் இதை செய்ய வேண்டாம் என்று எனக்கு சொன்னார்கள். ஆனால் சில இயக்குனர்கள் நீங்கள் கவலைப்பட வேண்டாம் செய்யுங்கள்!. என்று சொன்ன காரணத்தில்தான் இன்று சிறைக்கு செல்லக்கூடிய நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளேன் என்று வருத்தத்துடன் பதிவு செய்தார்கள்!..
உணர வேண்டும்!.. உணர்ந்து நிர்வாக மாறுதல் நிறுத்தப்பட வேண்டும்!. நிர்வாக மாறுதல் மூலமாக இந்த ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட வேண்டுமா?
பொதுத் தேர்தலுக்கு முன்னர் நடைபெறுகின்ற கடைசி மாறுதல் கலந்தாய்வு இதுதானே!… இந்த பொது மாறுதல் கலந்தாய்வினை நாம் நேர்மையாக.. வெளிப்படைத் தன்மையுடன்… நடத்த வேண்டாமா?..
எச்சரிக்கை உணர்வு அல்ல; ஆட்சியின் மீதுள்ள அக்கறை உணர்வோடு வலியுறுத்துகிறோம்!…
நிர்வாக மாறுதலில் கையொப்பம் இடக்கூடியவர்கள்… உங்கள் மேசையின் மீது இருக்கக்கூடிய காந்தியடிகளின் படத்தினை பாருங்கள்!.. சத்திய சோதனை உங்கள் நெஞ்சத்தை தொடட்டும்!…
முந்தைய ஆட்சியாளர்களைப் பார்த்து நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 3 வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துவார்கள்!.. அந்த மூன்று வார்த்தைகளும் தற்போது நடைபெற்று வரும் நிர்வாக மாறுதல்களில் இரண்டற கலந்துள்ளது… என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனிவான பார்வைக்கு கொண்டு வருகிறோம்.. தீர்வு காண முன்வருவார்களா?.. தீர்வு காண வேண்டுகிறோம்! என தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பாக வா.அண்ணாமலை, ஐபெட்டோ அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.