மிரட்டும் காவல்துறை ! முதியவர் தீக்குளிப்பு !
மதுரையில் காவல்துறை மிரட்டலால் மனமுடைந்த முதியவர் காவல்நிலையத்திலேயே தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகன்களை ஒப்படைக்காவிட்டால் கஞ்சா வழக்கில் உள்ளே தள்ளுவோம் என போலீசார் மிரட்டியதாகக்கூறி உயிருக்குப் போராடும் அந்த முதியவர் அளித்துள்ள வீடியோ வாக்குமூலம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
மதுரை பைக்காரா பகுதியைச் சேர்ந்தவர் வயதான நாராயணன். இவருக்கும் இவரது தம்பி சிவமார்க்கண்டன் குடும்பத்திற்கும் இடையே நீண்ட காலமாக சொத்துத் தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த மார்ச்10-ஆம் தேதி கோவில் கழிவுநீர் வெளியேற்றம் தொடர்பான வாக்குவாதம் வன்முறையாக மாறியது. இந்த மோதலில் நாராயணனின் பற்கள் உடைக்கப்பட, பதிலுக்கு அவரது மகன் ராஜனும் சிவமார்க்கண்டனைத் தாக்கியுள்ளார்.

நாராயணன் அளித்த புகாரை போலீசார் கண்டுகொள்ளவில்லை எனத் தெரிகிறது. எதிர் தரப்பான சிவமார்க்கண்டன் அளித்த புகாரின் மீது மின்னல் வேகத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சட்டம் அனைவருக்கும் சமம் என்பது போய் இங்கே ஒரு தரப்பிற்கு ஆதரவாக காவல்துறை செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. படுகாயமடைந்த நாராயணனின் புகாரைப் புறக்கணித்த போலீசார் எதிர் தரப்பு புகாரை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு நாராயணனின் குடும்பத்தை டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது.
மருத்துவமனையில் மரணப் போராட்டத்திற்கு இடையே நாராயணன் அளித்துள்ள வீடியோ வாக்குமூலம் அதிர வைக்கிறது. உன் மகன்களை ஒப்படைக்கவில்லை என்றால் அவர்கள் மீது கஞ்சா வழக்கும், கொலை வழக்கும் போட்டு வாழ்க்கையையே சீரழித்து விடுவோம் என போலீசார் மிரட்டியதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
தொடர் மிரட்டலால் மன உளைச்சலுக்கு ஆளான நாராயணன் நீதி கிடைக்காத ஏக்கத்தில் காவல்நிலைய வளாகத்திலேயே தீக்குளித்துள்ளார். தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நாராயணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ள நிலையில் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையே மிரட்டல் விடுத்ததாக எழுந்துள்ள இந்தப் புகார் மதுரை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகாரில் உண்மை இருக்கிறதா? சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.