ஏழைகளின் வாழ்க்கையை ஜாய்ஃபுல்லாக்கிய ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை!
இந்தியாவின் தென்மாநிலங்கள் மற்றும் அரபு நாடுகளில் தங்க நகைகள் விற்பனையில் கொடிகட்டிப் பறக்கும் நிறுவனம் ‘ஜோய் ஆலுக்காஸ்’. இதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஜோய் ஆலுக்காஸின் நேரடிக் கண்காணிப்பில் ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை கேரளாவில் மருத்துவ சேவைகளை வழங்கி வருவதுடன், அங்குள்ள ஏழைகளை இனம் கண்டு அவர்களுக்கு வீடுகளையும் இலவசமாக கட்டிக் கொடுத்துள்ளது. கேரளாவைத் தொடர்ந்து கர்நாடகத்திலும் இதே சேவைகளை ஆற்றி வரும் இந்த அறக்கட்டளை இப்போது தமிழ்நாட்டில் விளிம்புநிலையில் இருக்கும் 50 குடும்பங்களைக் கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைக் கனவான வீடு கொடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது.
‘ஜோய் ஹோம்ஸ்’ திட்டத்தின் கீழ் 500 சதுர அடியில் 7 லட்சம் செலவில் வீடுகளைக் கட்டி அதன் சாவியை அந்தக் குடும்பங்களிடம் ஒப்படைக்கும் மகிழ்ச்சிப் பெருவிழாவை மார்ச்.16-ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தியது ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை. இதன் நிர்வாக இயக்குனர் ஜோய் ஆலுக்காஸ் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் நடிகர்கள் தியாகராஜன், பிரசாந்த், தொழிலதிபர் நல்லி குப்புசாமி, பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர், நடிகை தேவயானி, டைரக்டர் சரண் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் ஜோய் ஆலுக்காஸ் நகைக் கடைகள் இயங்கி வரும் பகுதிகளான மதுரை, திருச்சி, ஈரோடு மற்றும் பல நகரங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழைக் குடும்பங்களிடம் வீடுகளுக்கான சாவியை பிரபலங்கள் அனைவரும் இணைந்து வழங்க, அவர்களின் வாழ்க்கையை ஜாய்ஃபுல்லாக்கியுள்ளது ஜோய் ஆலுக்காஸ்.
கேரளா, கர்நாடகா, தமிழ்நாட்டில் மொத்தம் 600 வீடுகளைக் கட்டி ஏழை எளியோரின் வாழ்வில் ஒளியேற்றிய ஜோய் ஆலுக்காஸ், அடுத்து ஆந்திரா, தெலுங்கானாவிலும் இந்தியாவின் வடமாநிலங்களிலும் ஜோய் ஹோம்ஸ் திட்டத்தை விரிவுபடுத்தவுள்ளதாம்.
விழாவில் பேசிய ஜோய் ஆலுக்காஸ், இரண்டே நிமிடங்களில் தனது உரையை முடித்து ஆச்சர்யப்படுத்தினார். இந்த அறக்கட்டளையின் பணிகளை பத்து நிமிடங்கள் பேசி ஆச்சர்யப்படுத்தினார் பாரதி பாஸ்கர்.
நடிகர் பிரசாந்த் பேசும் போது,
“ ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் தொடங்கி பதினெட்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தமிழ்நாட்டில் 50 ஏழைக்குடும்பங்களின் வாழ்க்கையில் ஒளியேற்றியதற்கு நன்றி. ஒவ்வொருவருக்கும் வீடு என்பது உரிமை. அதிலும் ஏழைகளுக்கு அது கனவாகவே கடந்து போய்விடுகிறது. ஆனால் ஜோய் ஆலுக்காஸ் அந்த உரிமையைக் கொடுத்து கனவை நனவாக்கியுள்ளது மிகவும் பாராட்டுக்குரியது. பிரம்மாண்ட கட்டிடங்களுக்குச் சொந்தக்காரர் என்றாலும் ஜோய் ஆலுக்காஸின் எளிமையும் பணிவும் தான் அவரின் மிகப்பிரம்மாண்டமான சொத்து” என்றார்.
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.