’ஃபைவ் ஸ்டார்’ செந்திலை எச்சரித்த ஆர்.பி.செளத்ரி!
ஃபைவ் ஸ்டார் என்ற ஆடியோ கம்பெனியை ஆரம்பித்து தமிழ் சினிமாவுக்குள் எண்ட்ரியான செந்தில், பின்னர் அதே பெயரில் சினிமா வினியோக நிறுவனத்தையும் தொடங்கி, நூற்றுக்கணக்கான படங்களை வினியோகம் செய்தார், செய்தும் வருகிறார். இப்போது ‘ஸ்கை பிக்சர்ஸ்’ டாக்டர் என்.யோகேஷ்வரன் என்பவருடன் இணைந்து ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் மூலம் தயாரிப்புத்துறையிலும் இறங்கி, தனது அஜய் கார்த்திக்கை ஹீரோவாக்கும் பெரும் முயற்சியிலும் குதித்துள்ளார் செந்தில்.
பரத் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பெரிய வெற்றி பெற்ற ‘காளிதாஸ்’ படத்தின் முதல் பாகத்தைத் தொடர்ந்து இப்போது ‘காளிதாஸ்-2’வைத் தயாரித்து அதில் தனது மகன் அஜய் கார்த்திக்கை செகண்ட் ஹீரோவாக களம் இறக்குகிறார் செந்தில். முதல் பாகத்தை டைரக்ட் பண்ணிய ஸ்ரீசெந்தில் தான் இந்த இரண்டாம் பாகத்தின் டைரக்டர். வரும் ஏப்ரல்.10-ஆம் தேதி ரிலீசாகிறது ‘காளிதாஸ்-2’.

கோலிவுட்டில் தனது மகனை அறிமுகப்படுத்தவதால், அதற்கான புரமோஷனையும் சென்னையில் உள்ள ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் கோலாகலமாகவும் பிரம்மாண்டமாகவும் நடத்தினார் செந்தில். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் சினிமா புரொடியூஸர் கவுன்சிலின் தலைவர் ஜிகேஎம் தமிழ்க்குமரன் தலைமையிலான நிர்வாகிகள், சீனியர் தயாரிப்பாளர் சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி, கலைப்புலி தாணு, எஸ்.எஸ்.லலித்குமார், எஸ்.ஆர்.பிரபு, தனஞ்செயன், பிஎல்.தேனப்பன், டைரக்டர்கள் பா.இரஞ்சித், பாண்டிராஜ், கணேஷ் கே.பாபு, நடிகர்கள் கலையரசன், ஹரிஷ் கல்யாண், சாந்தனு என ஏகப்பட்ட பேர் மேடையேறி செந்திலையும் அவரது மகன் அஜய் கார்த்திக்கையும் வாழ்த்திப் பேசினார்கள்.
வாழ்த்திப் பேச வந்த ஆர்.பி.செளத்ரியிடம் தொகுப்பாளினியும் நடிகர் சாந்தனுவின் மனைவியுமான கீர்த்தி, “புதிதாக வந்திருக்கும் தயாரிப்பாளர் செந்திலுக்கு ஏதாவது அட்வைஸ் பண்ண விரும்புகிறீர்களா?” எனக் கேட்டதும், “என்னைக் கேட்ட யாரும் தயாரிப்பாளரா வரக்கூடாது. அப்படியே வந்தாலும் நிறைய கஷ்டங்களை எதிர்கொள்ளணும். ஆனால் ஃபைவ் ஸ்டார் செந்திலை எனக்கு இருபது வருடங்களாக தெரியும். அவரின் உழைப்பையும் நன்கு அறிவேன். எனவே அவர் வெற்றி பெறுவார் என வாழ்த்துகிறேன்” என்றார் செளத்ரி.
“இந்த நல்ல தொடக்கத்திற்காக ரொம்ப நாள் காத்திருந்தோம். நம்பிக்கையுடன் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கோம். பெரிய வெற்றி கிடைக்கும் என நம்புகிறோம்” என்றார் டாக்டர் என்.யோகேஷ்வரன்.
“எனது தயாரிப்புப் பயணத்திற்கு மீடியாக்கள் பக்கபலமாக இருக்க வேண்டும்” என வேண்டுகோள் வைத்தார் ஃபைவ் ஸ்டார் செந்தில்.
ஹீரோயின்கள் அபர்ணதி, பவானி ஸ்ரீ, சீனியர் நடிகை ‘பூவே உனக்காக’ சங்கீதா, மியூசிக் டைரக்டர் சாம் சி.எஸ் உட்பட படத்தில் பணியாற்றிய அனைவருமே ‘காளிதாஸ்-2’வின் சிறப்பு குறித்துப் பேசினார்கள்.

அஜய் கார்த்திக் பேசும் போது, “நான் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் சினிமாவைக் காதலிக்கும் ஒருவனாகத் தான் இந்த மேடையில் நிற்கிறேன். டைரக்டர் செந்தில் சார் மிகவும் திட்டமிட்டு தெளிவான கண்ணோட்டத்துடன் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார். என்னுடன் இணைந்து பணியாற்ற சம்மதித்த பரத் சாருக்கு நன்றி” என்றார்.
டைரக்டர் ஸ்ரீசெந்தில், “இந்தப் பயணம் சாதாரணமானதல்ல. நீண்டதொரு உணர்ச்சிமிகுந்த நம்பிக்கையோடும் போராட்டத்தோடும் வந்த பயணம். முதல் பாகத்தை முடித்ததும் பெரிய நடிகர்களுடன் படம் பண்ணும் வாய்ப்பு வந்து சூழல்களும் மாறின. பெரிய படம் என்பதைவிட நல்ல படம் பண்ணுவது தான் முக்கியம் என்ற முடிவுடன் இந்தப் படம் தொடங்கியது. இந்தப் பயணம் ஆரம்பிக்க துணையாக இருந்த பழனி அண்ணனுக்கும் நம்பிக்கையும் வலிமையும் கொடுத்த செந்தில் சாருக்கும் நன்றி. அதே போல் பரத் சாரின் உழைப்பும் ஒத்துழைப்பும் அபாரமாக இருந்து இப்படத்தை வெற்றிகரமாக முடிக்க உதவியது”.

ஹீரோ பரத், “டைரக்டர் ஸ்ரீசெந்தில் எனது வாழ்க்கையில் வந்தது எனக்குக் கிடைத்த ஆசீர்வாதம். மற்ற க்ரைம் த்ரில்லர் படங்களைவிட இது எல்லா வகையிலும் வித்தியாசமானது. சீனுக்கு சீன் ட்விஸ்ட் தான். கண்டிப்பாக ஜெயிக்கும். ஃபைவ்ஸ்டார் செந்தில் சாருக்கு மிகப் பெரிய லாபத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமேயில்லை”.
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.