தமிழ்நாட்டின் 14ஆவது சட்டமன்றத் தேர்தல் 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் நாள் நடைபெற்றது. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்றது. முதல்முறையாக திமுக எதிர்க்கட்சி என்ற தகுதியை இழந்தது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் புதிய எதிர்க்கட்சி தலைவரானார்.
2006 -11 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற திமுக ஆட்சியில் பல ஊழல்கள் நடைபெற்றதாக அதிமுகவின் ஜெயலலிதா குற்றம்சாட்டி பரப்புரை செய்தார். திமுகவின் ஆ.இராசா, கனிமொழி மீது 2G ஊழல் வழக்கு தொடரப்பட்டது. எதிர்க்கட்சிகளின் அழுத்தம் காரணமாக, கூட்டணி கட்சி என்று கூட பாராமல் திமுகவிற்கு சொந்தமான தொலைக்காட்சி / தொலைத்தொடர்பு சார்ந்த நிறுவனங்களில் அமலாக்கத்துறை வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. இதனால் திமுகவின் மீதான எதிர்ப்பு மனநிலையில் மக்கள் இருந்தனர். அதிமுக திமுகவுக்கு எதிராக பலமான கூட்டணியை கட்டமைத்திருந்தது. இலங்கையில் பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்கள் உட்பட ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு, ஆட்சிப் பொறுப்பில் இருந்த திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற பழியையும் திமுக சுமந்தது.
2011 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிடம் காங்கிரசுக்கு 90 தொகுதிகளை கேட்ட நிலையில், அதற்கு மறுத்து திமுக தனித்தே போட்டியிடும் என்றவுடன் இறுதியாக, “63 நாயன்மார்கள் எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சிக்குத் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது” என்று இலக்கிய நயத்தோடு அறிவிப்பை வெளியிட்டார் கலைஞர். ஈழ விவகாரத்தில் அதிருப்தி எழுந்த நிலையிலும், காங்கிரசுக்கு இத்தனை இடங்களை ஒதுக்கியதும் திமுகவுக்கு பாதமாக அமைந்தது.
அதிமுக தலைமையிலான கூட்டணியில், புதியதாக இணைந்த தேமுதிகவுக்கு முக்கியத்துவம் வழங்கி தங்களுக்கு குறைவான இடங்களை ஒதுக்கியதற்காக, எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க., ம.தி.முக. ஆகிய கட்சிகள் அதிமுக கூட்டணியிலிருந்து விலகினர். பா.ம.க. திமுக கூட்டணியில் இணைந்தது. வரிபுலி வரிசையே வருக என்று முரசொலியில் தலையங்கம் எழுதியும் வை.கோ. கறாராக மறுத்துவிட ம.தி.மு.க. தேர்தலை புறக்கணித்தது. திமுக கூட்டணி யில், காங்கிரஸ், பாமக, விசிக, கொங்குநாடு முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன.
அதிமுக கூட்டணியில், தேமுதிக, இந்திய பொதுவுடமைக் கட்சி (சிபிஐ) இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) (சிபிஎம்), மனிதநேய மக்கள் கட்சி, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி, மூவேந்தர் முன்னேற்ற முன்னணி, ஃபார்வார்டு ப்ளாக், இந்திய குடியரசு கட்சி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை போன்ற கட்சிகள் இடம் பெற்றிருந்தன.
அதிமுக 146 ; தேமுதிக 29 உள்ளிட்ட இடங்களுடன் அதிமுக கூட்டணி – 203 தொகுதிகளை கைப்பற்றியது. திமுக – 23; காங்கிரஸ் -5 உள்ளிட்ட இடங்களுடன் திமுக கூட்டணி 31 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக + ஜனதா கட்சி இணைந்தும், பகுஜன் சமாஜ் கட்சி தனித்து 234 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. மீண்டும் ஜெயலலிதா முதல் அமைச்சர் ஆனார். அதிமுக கூட்டணியில் 29 தொகுதிகளில் வெற்றி பெற்ற தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார். திமுக 23 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றதால், எதிர்க்கட்சிக்கான தகுதியை இழந்தது.
ஜெயலலிதா தென்மாவட்டங்களை விட்டு முதல்முறையாக திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சென்னையில் அதிக முறை வெற்றி பெற்ற கலைஞர் முதல்முறையாக தான் பிறந்த திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதிமுக ஆட்சி 2016ஆம் ஆண்டு வரை இருந்த நிலையில், 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் நாள், ஜெயலலிதா மீது தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா 4 ஆண்டுகள் சிறை தண்டனை என அறிவித்ததையடுத்து, முதல் அமைச்சர் பொறுப்பில் இருந்து சிறை தண்டனை பெற்ற முதல் அமைச்சர் என்ற புதிய வரலாறும் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அதிமுக பொருளாளரும் போடி சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் 2ஆவது முறையாக முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 2011ஆம் ஆண்டு அமைந்த அதிமுக அமைச் சரவையில், ஓ.பன்னீர்செல்வம், கே. ஏ. செங்கோட் டையன், எடப்பாடி கே. பழனிசாமி, செந்தில் பாலாஜி உள்ளிட்டோருடன், ஆர்.பி.உதயகுமார் மற்றும் வைகைச் செல்வன் போன்ற இளைய தலைவர்கள் அமைச்சரவையில் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
— ஆதவன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.