நள்ளிரவில் திருச்சி கலெக்டர் – எஸ்.பி. நடத்திய கள்ளச்சாராய வேட்டை !
திருச்சி துறையூர் பச்சைமலையில் கள்ளச்சாராய வேட்டை ! அதிரடி காட்டிய ஆட்சியர் – எஸ்.பி. ! கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தை உலுக்கிவரும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலியின் எண்ணிக்கை 50-ஐ கடந்திருக்கிறது. சட்டசபை கூட்டத்தொடரிலும் இந்த விவகாரம் எதிரொலித்திருக்கிறது. உயிரிழந்த குடும்பத்திற்கான நிவாரணத்தொகை முதற்கட்டமாக நபருக்கு பத்து இலட்சம் என்பதாக அறிவித்த நிலையில், மேலும் மூன்று இலட்சம் ரூபாய் அதிகரித்தும் பெற்றோரை இழந்துவாடும் பிள்ளைகளின் கல்விச்செலவை அரசே ஏற்பதாகவும் மாதந்தோறும் பராமரிப்பு தொகை 5000 அரசே வழங்கும் என்றும் அறிவித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம்; மாவட்ட எஸ்.பி. உள்ளிட்டு பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். வழக்கும் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டிருக்கிறது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொண்டு, இது நிகழ்ந்ததற்கான அனைத்துக் காரணிகளைக் கண்டறியவும், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிடவும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பி.கோகுல்தாஸ் அவர்கள் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்தும் உத்தரவு பிறப்பித்திருக்கிறார் முதல்வர்.

இது ஒருபுறமிருக்க, தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்கப்படுவது தொடர்பாக திடீர் சோதனை நடத்துமாறு மதுவிலக்கு அமலாக்க பிரிவு அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும், சாராயம் விற்பவர்கள் பற்றிய பட்டியல் தயாரித்து தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தொடர்புடையவர்கள் மீது உடனடியாக வழக்குப்பதிந்து கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் டி.ஜி.பி. அறிவுறுத்தியிருக்கிறார்.
இந்நிலையில், திருச்சிராப்பள்ளி மாவட்டம், உப்பிலியபுரம் காவல் நிலைய நெட்டவேலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சாராயம் ஊரல் போட்டதாக மாவட்ட காவல் உதவி எண் (Help Line) 9487464651 மூலம் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.வீ.வருண்குமார், இ.கா.ப., உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு மேற்படி கிராமங்களை தனிப்படையினர் ரகசியமாக கண்காணித்ததில், நெட்டவேலம்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த முத்துச்சாமி என்ற சாராய வியாபாரி சிக்கியிருக்கிறார்.
கடந்த ஜூன்-19 அன்று திருச்சி மாவட்ட போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், சட்டவிரோதமாக காய்ச்சிய 250 லிட்டர் சாராயம் ஊரல் மற்றும் 06 லிட்டர் சாராயம் ஆகியவற்றை கைப்பற்றி முசிறி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக, ஜூன்-21 அன்று மாலை திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் மற்றும் மாவட்ட எஸ்.பி. வருண்குமார் ஆகியோர் தலைமையில் அணிவகுத்துச் சென்ற போலீசார் மற்றும் அதிகாரிகள் துறையூர் பச்சைமலை பகுதிகளில் அதிரடி ஆய்வை நடத்தியிருக்கின்றனர்.

இந்த அதிரடி ரெய்டு நடவடிக்கையில் பச்சைமலை அருகில் உள்ள நெசக்குளம் மலைப் பகுதியில் இருந்த 250 லிட்டர் கள்ளச்சாராயத்தை கீழே ஊற்றிஅழித்தனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களை அழைத்து கள்ளச்சாராயத்தின் தீமைகளை எடுத்து கூறியதை தொடர்ந்து அக்கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் மாவட்ட ஆட்சியர் முன்பாக மது போதைக்கு எதிராக இனி ஒருபோதும் எங்கள் கிராமத்தில் கள்ளச்சாராய உற்பத்தி நடக்காது அதனை அனுமதிக்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் ஏராளமான காவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதுபோன்ற,கள்ளச்சாராயம் காய்ச்சுவது உள்ளிட்ட குற்ற நிகழ்வுகள் பற்றிய தகவல்களை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உதவி எண் 9487464651 (Help Line) எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் எஸ்.பி.வருண்குமார். குறிப்பாக, இதுபோன்ற தகவல் தெரிவிப்பவர்களின் அடையாளம் இரகசியம் காக்கப்படும். மேலும், நல்ல தகவல் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்பதாகவும் அறிவித்திருக்கிறார்.
– ஆதிரன்.