அங்குசம் பார்வையில் ‘மெட்ராஸ் மேட்னி’
தயாரிப்பு : ‘மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ்’ கார்த்திகேயன் மணி, தேவ் ஆனந்த், & ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ எஸ்.ஆர்.பிரபு. டைரக்ஷன்: கார்த்திகேயன் மணி. ஆர்ட்டிஸ்ட் : காளிவெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரிப்ரியா, ஷெல்லி, விஷ்வா, கீதா கைலாசம், ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தோக், சுனில் சுகர்தா, மதுமிதா, சாம்ஸ். ஒளிப்பதிவு : ஜி.கே.ஆனந்த், இசை : கே.சி.பாலசாரங்கன், எடிடிட்ங் : சதீஷ்குமார் சமுஸ்கி. பி.ஆர்.ஓ. : யுவராஜ்.
திருமணமே செய்து கொள்ளாத, உறவினர்கள் யாருமே இல்லாத எழுத்தாளர் ஜோதி ராமையா,[ சத்யராஜ் ] முதியோர் இல்லம் ஒன்றில் தங்கியிருக்கிறார். இல்லத்தைப் பராமரிக்கும் இளம் பெண்ணிடம் அவ்வப்போது தான் எழுதிய கதைகளைச் சொல்கிறார். அப்படி அவர் சொல்லும் கதை தான் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கண்ணனின் [ காளிவெங்கட் ] கதை.
கண்ணனின் மனைவி கமலம் [ ஷெல்லி ], மகள் தீபிகா [ ரோஷினி ஹரிப்ரியா ], மகன் தினேஷ் [ விஷ்வா ]. மார்வாடியிடம் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி, கஷ்டப்பட்டு மகளை படிக்க வைக்கிறார் காளிவெங்கட், படித்து முடித்ததும் ரோஷினிக்கு பெங்களூருவில் வேலை கிடைக்கிறது. மகளின் திருமணத்திற்கு அதிக பணம் சேர்க்க வேண்டும் என்பதற்காக, அதே மார்வாடியின் பழைய அம்பாசிடர் காரை வாங்கி, ஜார்ஜ் மரியானிடம் டிரைவிங் கற்றுக் கொள்கிறார் கண்ணன்.
பெங்களூருவில் ஒரு பையனைக் காதலிக்கிறார் ரோஷினி. காபி ஷாப்பில் பையன், அவனின் அம்மா, சித்தி ஆகியோரைச் சந்திக்கும் போது, “நீங்க என்ன ஆளுக, உங்க அப்பா என்ன வேலை பார்க்கிறார்” என பையனின் சித்தி கேட்டுவிட்டு, தனது அப்பாவின் சாதி குறித்து கீழ்த்தரமாக பேசியதும் ‘போடா நீயும் உன்னோட லவ்வும்” என தூக்கியெறிந்துவிட்டு, சென்னைக்கு வருகிறார் ரோஷினி. சற்றே மனம் கலங்கினாலும் மகளுக்கு ஆதரவாக தோள் கொடுக்கின்றனர் காளிவெங்கட்டும் ஷெல்லியும்.
இப்படியே சத்யராஜின் வாய்ஸ் ஓவரிலேயே [ சில சீன்களில் ஸ்க்ரீனிலும்] படத்தின் க்ளைமாக்ஸ் வரை போவதால், ஏதோ கோவில் திருவிழாக்களில், மண்டபங்களில் கதாகலாட்சபம் கேட்பது போல ஆகிவிட்டது.
நடுத்தர வர்க்கத்தின் குடும்பத்தலைவனாக படும் அவதிகளை கண்முன்னே கொண்டு வருகிறார் காளிவெங்கட். மகளின் நிலையை நினைத்து குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து “நீ கவலைப்படாதடா.. அப்பா நான் இருக்கேண்டா” என கலங்கும் சீனில் காளிவெங்கட்ட்டின் நடிப்பு நிறைவு. அவர் மார்வாடியைச் சந்திக்கும் போதெல்லாம் லைட்வெயிட் காமெடி. நல்ல வடிவான பெண்ணாகத்தான் இருக்கிறார் காளியின் மனைவியாக வரும் ஷெல்லி. இனிமேல் இவரை தமிழ் சினிமாவில் நல்ல குணச்சித்திர அம்மாவாக தொடர்ந்து பார்க்கலாம்.
ஹீரோயின் என்ற அந்தஸ்து இந்தக் கதையில் இல்லாவிட்டாலும் நடுத்தர வர்க்கத்துக்கேயுரிய ரோஷத்துடன், காதலைத் தூக்கியெறிந்துவிட்டு, அம்மாவின் மடியில் தலைசாய்த்து அழும் சீனில் கதையின் கேரக்டருக்கு வலுசேர்த்துவிட்டார் ரோஷினி.
ஆனால் டைரக்டர் கார்த்திகேயன் மணியின் திரைக்கதையில் வலுவில்லாததால், அனேக சீன்கள் டி.வி.சீரியல் எஃபெக்ட் தான். அதிலும் காளிவெங்கட்டின் மகன், மின்சார வாரிய ஏ.இ.யை அடித்த பின் நடக்கும் சீன் இழுவையோ இழுவை… பச்சோந்தி பிரேமாவாக கீதா கைலாசம் தேவையில்லாத ஆணி.
மியூசிக் டைரக்டர் கே.சி.பாலசாரங்கன், இரண்டு பாடல்களிலும் பின்னணி இசையில் பழைய பேங்கோஸ் வாத்தியத்தை அவ்வப்போது இசைத்து ரசிக்க வைக்கிறார்.
‘மெட்ராஸ் மேட்னி’ கொஞ்சம் புழுக்கம் தான்.
— மதுரை மாறன்.