வழக்கறிஞர்களுக்கு எதிராக செயல்படும் போலீசார் ! பேரணி – சாலை மறியல் – தள்ளுமுள்ளு !
மதுரையில் வழக்கறிஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வரும் காவல்துறையினரை கண்டித்தும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றக் கோரியும் மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தினர் காவல் ஆணையர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மதுரை மாநகர் அண்ணாநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் நடைபெற்ற வாக்குவாத பிரச்சனை தொடர்பான வழக்கு ஒன்றில், வழக்கறிஞர் தமிழரசன் மீது அண்ணாநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ததை கண்டித்தும், வழக்கறிஞர் பகலவன் என்பவர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும்; வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றக் கோரியும்; மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் மதுரை மாவட்டத்திலுள்ள மூன்று நீதிமன்றங்களின் பணிகளை புறக்கணித்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து மதுரை மாநகர காவல் துறையை கண்டித்து மாநகர காவல் ஆணையர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்ட வழக்கறிஞர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்திய போது, காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து காவல்துறையினரை கண்டித்து மாவட்ட நீதிமன்றம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டனர். பின்னர் பேரணியாக, மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பாஸ்கர், செயலாளர் மோகன்குமார் தலைமையில் அழகர் கோவில் சாலையில் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகம் நோக்கி புறப்பட்டனர்.
அப்போது மாநகர காவல்துறை, மதுரை மாநகர நுண்ணறிவுப்பிரிவு உதவி ஆணையர், அண்ணாநகர் காவல் நிலைய உதவி ஆணையர் ஆகியோருக்கு எதிராகவும், தமிழக முழுவதிலும் நடைபெறும் வழக்கறிஞர் படுகொலையை தடுக்க வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர்.
அப்போது புறக்காவல் பகுதியில் காவல் துறையினர் பேரணியை தடுக்க முயன்றதால் மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் நோக்கி சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அசாதாரண சூழல் காரணமாக, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடைபெற்ற நிலையில், காவல் ஆணையர் அலுவலக வாயில் மூடப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட போது வழக்கறிஞர்களை கைது செய்வதாக கூறி காவல்துறை வாகனத்தில் ஏற்றினர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை கைது செய்யும் காவல்துறையினரின் நடவடிக்கைகளை கண்டித்து தொடர்ந்து காவல்துறையினரிடம் வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரை மணி நேரமாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளிடம் காவல் ஆணையர் லோகநாதன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து வழக்கறிஞர்கள் போராட்டத்தை கைவிட்டு புறப்பட்டு சென்றனர். வழக்கறிஞர்கள் பேரணியின் போது காவல்துறையினர் தடுத்ததால், ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதுகுறித்து பேசிய வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பாஸ்கரன், “மதுரை மாநகர காவல் துறை வழக்கறிஞர்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதை கண்டித்து பேரணியாக சென்று கமிஷனரை சந்தித்து, எங்களது கோரிக்கையை தெரிவித்திருக்கிறோம்.” என்றார்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.