இலக்கியச் செல்வர் குமரி அனந்தனுக்கு நினைவஞ்சலி கூட்டம்
மறைந்த இலக்கியச் செல்வர் குமரி அனந்தனுக்கு திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் 22.04.2025ஆம் நாள் நினைவஞ்சலி கூட்டம் திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கத்தின் குளிர்மை அரங்கில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கத்தின் சிறப்புத் தலைவர் சௌமா இராஜரெத்தினம் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் செயலாளர் யோகா விஜயக்குமார் வரவேற்புரையாற்றினார். கூட்டத்திற்கு முனைவர் சங்கரி சந்தானம், பி.முகமது சபி, திருமதி தனலெட்சுமி பாஸ்கரன், பேராசிரியர் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மறைந்த குமரி அனந்தன் குறித்து நினைவஞ்சலி உரையை, பத்மஸ்ரீ மா.சுப்புராமன், தமிழ்ச் சங்க அமைச்சர் பெ.உதயக்குமார், தமிழ்ச்செம்மல் வி.கோவிந்தசாமி, எழுத்தாளர் சங்கத் தலைவர் த.இந்திரஜித், பத்திரிக்கையாளர வை.ஜவகர் ஆறுமுகம், திருக்குறள் சு.முருகானந்தம், மருத்துவர் எம்.ஏ. அலீம், ஜி.சிவகுருநாதன், இந்திய கலாச்சார நட்புறவு கழகம் எம்.பாலசுப்ரமணியன், கவி செல்வா, கல்வியாளர் ஜெயலெட்சுமி ஆகியோர் உரையாற்றினர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட சி.பா.ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் தி.நெடுஞ்செழியன் உரையாற்றும்போது,“காங்கிரஸ் இயக்கத்தில் மறைந்த இலக்கியச் செல்வர் தனித்துவமானவர். காங்கிரஸ் இயக்கத்தினர் மும்மொழியைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது தமிழுக்கு மட்டுமே முன்னுரிமைக் கொடுக்கவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார். நாடாளுமன்றத்தில் முதன்முதலில் தமிழில் உரையாற்றிய பெருமைக்குரியவர் குமரி அனந்தன் என்பது மிகையில்லா உண்மையாகும். ஜனதா கட்சியிலிருந்து விலகி காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி நடத்தினார். அப்போது கட்சிக்காக ‘மலர்ந்த ரோஜா’ என்னும் நாளிதழை நடத்தினார். அந்த இதழில் நல்ல தமிழில், தூயத் தமிழில் இதழை நடத்திய ஒரு பத்திரிக்கை என்னும் பெருமையும் குமரி அனந்தனுக்கு உண்டு.
காங்கிரஸ் கட்சியினர் ஈழத்தமிழர் பிரச்சனையைப் புரிந்துகொள்ளலாமல் தேவையற்ற விமர்சனங்களை செய்து வந்த நிலையில், 1983ஆம் ஆண்டு, ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்தியா தலையிட்டு தமிழர்களுக்கான உரிமையப் பெற்றுத் தரவேண்டும் என்று இந்திராகாந்தியின் படத்தை எரித்தவர் குமரி அனந்தன். 1990களில் இலங்கையிலிருந்து இந்திய அமைதிப்படை திரும்பியபோது, அமைதிப்படையை முதல்வர் பொறுப்பிலிருந்த கலைஞர் வரவேற்கவில்லை.
இது குறித்து இந்தியா டு டே இதழில் குமரி அனந்த எழுதிய ஒருபக்கக் கட்டுரையில்,“இந்தியா இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தலையீட வேண்டும் என்று கலைஞர் வலியுறுத்தி வந்தார். அங்கே அமைதியை ஏற்படுத்த சென்ற இந்தியப் படையினர் விடுதலைப்புலிகளால் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 5ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உடல் உறுப்புகளை இழந்துள்ள நிலையில் அமைதியைப் படை கலைஞர் வரவேற்கமாட்டேன் என்று கூறியுள்ளது அவரது இரட்டை நிலையைத் தெரிவிக்கின்றது” என்று குறிப்பிட்டிருந்தார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதற்கு இந்தியா டு டே இதழுக்கு நான் எழுதிய எதிர்வினையில்,“ஈழப் பிரச்சனையில் கலைஞர் இரட்டை நிலை எடுக்கிறார் என்று குற்றம் சாட்டும் குமரி அனந்தன் ஈழப் பிரச்சனைக்காகவே இந்திரா காந்தியின் படைத்தை எரித்தது விட்டு, இப்போது மத்திய அரசுக்கு ஆதரவாக கட்டுரை எழுதுவது இரட்டை நிலை இல்லையா?” என்று எழுதியிருந்தேன். ஈழப்பிரச்சனையில் அக்கறையோடு இருந்தவர் குமரி அனந்தன். தபால் நிலையம், வங்கி, இரயில் நிலையங்களில் விண்ணப்பப் படிவங்கள் தமிழில் வெளிவர குமரி அனந்தன் தொடர்ந்து குரல் கொடுத்து, அதைத் தமிழ்நாட்டில் நிலைப்படுத்த ஓயாது உழைத்த தகைசால் தமிழர் குமரி அனந்தனுக்குப் புகழ் அஞ்சலியும் வீரவணக்கமும் செலுத்துகிறேன்” என்று குறிப்பிட்டார்.
திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கத்தின் துணைத்தலைவர் சூர்யா வெ.சுப்ரமணியன் நன்றி கூறினார். கவிஞர் ஆங்கரை பைரவி நிகழ்ச்சியை நெறியாளுகை செய்தார். இந் நிகழ்வில் கவிஞர் கோ.கலியமூர்த்தி, பொறியாளர் சுப்பையா பாண்டியன், மருத்துவர் சுப்பையா பாண்டியன் உட்பட ஏராளமான எழுத்தாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
— ஆதவன்.