இப்படியே போனால், ஆவினுக்கே பால் ஊற்றி விடுவார்கள் !
என்னதான் ஆயிரம் புதிய நிறுவனங்கள் வந்தாலும், தமிழக மக்களின் நம்பிக்கையை பெற்ற நிறுவனமாக இன்றளவும் ஆவின் தனக்கான இடத்தை தக்கவைத்திருக்கிறது. சந்தையில் எப்போதுமே, ஆவின் பாலுக்கு கிராக்கி இருந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில், இந்த சூழலை மேலும் மோசமாக்கும் வகையில், “முகவர்களாகிய எங்களுக்கு தினந்தோறும் வினியோகிக்கும் பாலின் அளவை வெகுவாக குறைத்துவிட்டார்கள். குறைந்தபட்சமாக 100 லிட்டரில் தொடங்கி அதிகபட்சமாக 300 லிட்டர் வரையில் குறைத்துவிட்டார்கள். திருச்சி மாவட்டத்தில் உற்பத்தியாகும் பாலில் பெருமளவு தலைநகர் சென்னைக்கு அனுப்பி வைப்பதால் இந்த தட்டுப்பாடு என்கிறார்கள். இதன் காரணமாக, முகவர்கள் அவர்களின் தகுதிக்கேற்ப குறைந்தபட்சம் ரூ3000-த்திலிருந்து ரூ.10,000 வரையில் நட்டமடைந்து வருவதாக” திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயாளிடம் முறையிட்டிருக்கிறார்கள் ஆவின் பால் வியாபாரிகள் முன்னேற்ற நல சங்கத்தினர்.
குறிப்பிட்ட கால இடைவெளியில் காஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், ரேஷன் பொருட்கள் பெறுவது தொடர்பான குறைதீர்க்கும் கூட்டம் போன்று மாதந்தோறும் ஆவின் பால் நுகர்வோர் குறைதீர் கூட்டமும் நடத்த வேண்டுமென்ற கோரிக்கையையும் முன்வைத்திருக்கிறார்கள்.
“தனியார் பால் நிறுவனங்கள் தாங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கு தற்போது ஆவினை விட லிட்டருக்கு ரூ.5 வரை கூடுதலாக கொடுத்து பால் கொள்முதல் செய்கிறார்கள். மாட்டுத்தீவனம், தவிடு உள்ளிட்ட பொருட்களில் விலையேற்றம் கண்டுள்ள நிலையில், கொள்முதல் விலையை இன்னும் ஆவின் உயர்த்தாமல் இருப்பதன் காரணமாக பலரும் தனியார் பால் நிறுவனங்களிடமே பால் ஊற்றி வருகிறார்கள். இதே நிலை நீடித்தால், ஆவினுக்கே பால் ஊற்றும் நிலை வரலாம்.” என்பதாக வேதனையோடு தெரிவிக்கிறார்கள், பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர்.
— கி.விஜயசங்கரன்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.