“ஐ.டி.ன்னா என்ன?,” எனக் கேட்ட அமைச்சர்!
முதல்வர் வெளிநாடு சென்றுள்ள நேரத்தில் தமிழகத்தில் ஐ.டி.ரெய்டு நடப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ஐ.டி.ன்னா என்ன?” என மழுப்பலாகக் கூறிவிட்டு அவ்விடத்திலிருந்து நழுவினார் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.
மின்சாரம் மற்றும ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் வருமானவரித் துறையினர் கடந்த சில நாட்களாக அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தஞ்சாவூரில் அரசு மீன் குஞ்சு உற்பத்தி மையத்தைப் பார்வையிட்டு அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் மீன் குஞ்சுகள் தேவைக்கு இன்னமும் ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களை நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும், தமிழகத்தில் உள்ள மீன் குஞ்சு பண்ணைகளை மேம்படுத்தி உற்பத்திi அதிகரித்து மக்களுக்கு வழங்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
அப்போது, முதல்வர் வெளிநாடு சென்றுள்ள நேரத்தில் தமிழகத்தில் ஐ.டி.ரெய்டு நடைபெற்று வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ஐ.டி.ன்னா என்ன?” என மழுப்பலாகக் கேட்டுவிட்டு அவ்விடத்திலிருந்து நழுவினார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.
