அமைச்சர் Vs எம்.எல்.ஏ
அதிமுக-திமுக-அதிமுக-திமுக என மாறிமாறி அரசியல் பயணம் மேற்கொண்ட சிவகங்கையைச் சேர்ந்த இராஜகண்ணப்பன் கடைசியாக திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதியில் நின்றார், வென்றார், போக்குவரத்துத்துறையின் அமைச்சருமானார்.
இராஜகண்ணப்பனுக்கு முதுகுளத் தூரை ஒதுக்கியதுமே அதே மாவட்டத்தைச் சேர்ந்த இராமநாதபுரம் தொகுதியில் நின்று வெற்றி பெற்ற திமுக மா.செ. காதர்பாட்சா முத்துராமலிங்கத்திற்கும் இராஜகண்ணப்பனுக்கும் இடையில் ஆரம்பமான பனிப்போர் இன்று வரை ஓய்ந்தபாடில்லை.
இந்நிலையில் போக்குவரத்துத்துறை யின் துணைஆணையர் நடராஜன் அலுவலகத்தில் நடந்த விஜிலென்ஸ் ரெய்டு, கட்டுக்கட்டாக அள்ளிய பணம், டிரான்ஸ்பர்களில் நடந்த பண விளையாட்டு இதெல்லாம் ராஜகண்ணப்பனுக்கு வினையாக வந்தது என்பதை ‘அங்குசம் செய்தி’ இதழில் விரிவாக எழுதியிருந்தோம்.
இதுவும் போக முதுகுளத்தூர் பி.டி.ஓ. ராஜேந்திரனை சாதிப் பேரைச் சொல்லித் திட்டியதாக ராஜகண்ணப்பன் மீது கடுப்பும் அதிருப்தியும் கிளம்பியதோடு, சம்பந்தப்பட்ட பி.டி.ஓ.வே மீடியாக்களுக்கு பேட்டியும் கொடுத்து டெரர் கிளப்பினார். பி.டி.ஓ.வின் இந்தப் பேட்டிக்கு பின்னணியில் இருந்து ஆபரேட் பண்ணியதே அதிமுக ஆதரவு நியூஸ் சேனல் ஒன்றின் மாவட்ட நிருபர்தானாம். இதனால் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம், அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகிய இருவருக்கிடையிலான உட்கட்சிப் பிரச்சனை நிறம் மாறி தேவேந்திரகுல மக்கள், யாதவ மக்களுக்கிடையிலான சாதிப்பிரச்சனையாக உருவெடுக்க ஆரம்பித்தது. இதனால் இராமநாதபுரம் மாவட்ட தேவேந்திரகுல கூட்டமைப்பு சார்பில் அமைதிக்கான வேண்டுகோளும் பிரச்சனையைப் பேசித்தீர்க்க அந்த சமூகத்தின் வக்கீல்களும் களமிறங்கினார்கள். பிரச்சனை தீவிரமாகப் போவதை உணர்ந்த கலெக்டர் சங்கர்லால் குமாவத், பி.டி.ஓ.ராஜேந்திரனை அழைத்து, “மீடியாவிடம் எதுவும் பேசக்கூடாது” என கண்டிப்புடன் கூறிவிட்டாராம். ‘பி.டி.ஓ.ராஜேந்திரனை ஆபரேட் பண்ணியதே மா.செ. முத்துராமலிங்கம் தான்’ என ராஜகண்ணப்பன் ஆட்கள் கொளுத்திப் போட ஆரம்பித்தார்கள். இது குறித்து விளக்கம் பெற முத்துராமலிங்கத்திடம் பேசினோம்.
“திருவாடானையிலிருந்த அந்த பி.டி.ஓவை முதுகுளத்தூருக்கு கொண்டு வந்ததே அமைச்சர் தான். அப்படி இருக்கும் போது நான் எப்படிண்ணே அவரைத்தூண்டிவிட முடியும். நீங்களே அந்த பி.டி.ஓ.விடம் கேட்டுப்பாருங்க, உண்மை தெரியும். கலெக்டரைப் பார்த்து மனு கொடுக்க வந்த மக்களை எம்.எல்.ஏ. என்ற முறையில் நானும் சந்திச்சு குறைகளைக் கேட்டதை முற்றுகை என்கிறார்கள். முதல்வரின் கட்டளைப்படி வாரத்தில் ஆறு நாட்கள் தொகுதியில் தான் இருக்கேன். கட்சித் தலைமையின் கட்டளைப்படி எல்லோரையும் அரவணைத்துத் தான் செல்கிறேன்” என்றார். பிரச்சனைக்குரிய பி.டி.ஓ.ராஜேந்திரனை பலமுறை முயற்சித்தும் போனை அட்டெண்ட் பண்ணவேயில்லை. ஒருவேளை கலெக்டரின் கண்டிப்பான உத்தரவை கறாராகப் பின்பற்றுகிறார் போல.