பா.ம.க.வின் மாநிலத் துணைத் தலைவராக திருத்தணி முன்னாள் எம்.எல்.ஏ ரவி ராஜ் நியமனம்!
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை தலைவராக பாஜகவிற்கு சென்று மீண்டும் பாமகவுக்கு வந்த முன்னாள் எம்.எல்.ஏ. ரவி ராஜை ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பாமகவில் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் நீடித்து வருகிறது. ராமதாஸ், அன்புமணி இடையே சமாதானம் ஏற்படுத்தும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றனர்.
இதனிடையே பாமகவின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் பலரையும் ராமதாஸ் நீக்கியும் அவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகளையும் நியமித்து அறிவிப்பு வெளியிட்டு வருகிறார்.
இன்னொரு பக்கம், ராமதாஸ் நீக்கிய மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் தொடர்ந்தும் பதவியில் நீடிப்பர் என அன்புமணி ராமதாஸும் அறிக்கை வெளியிட்டு வருகிறார்.

பாமகவில் இருந்து நேற்றைய தினம் வரை 35 மாவட்ட செயலாளர்கள், 16 மாவட்டத் தலைவர்கள், மற்றும் பொருளாளர் ஒருவர் நீக்கப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில் இன்று (ஜூன் 10)-ம் தேதி திருவண்ணாமலை,திருவள்ளூர், நாமக்கல், திருச்சி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், ஈரோடு, மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்கள், மாவட்டத் தலைவர்களை ராமதாஸ் நியமித்துள்ளார்.
கடலூர் மாநகர செயலாளர்களையும் அறிவித்த ராமதாஸ், பாமகவின் மாநில துணைத்தலைவராக முன்னாள் எம்எல்ஏ ரவிராஜ் மற்றும் சமூக நீதிப் பேரவை தலைவராக இருந்து வந்த வழக்கறிஞர் பாலு அவர்களை நீக்கிவிட்டு, வழக்கறிஞர் கோபுவையும், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளராக பூபால கண்ணனையும் நியமித்துள்ளார்.
இன்றைய தினம் மட்டும் 11 மாவட்ட செயலாளர், மற்றும் 9 மாவட்ட தலைவர்களை ராமதாஸ் அறிவித்துள்ளார்.
தற்போது வரை 46 மாவட்ட செயலாளர்கள், 25 மாவட்ட தலைவர்களை மாற்றம் செய்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

*யார் இந்த ரவிராஜ்?*
2001- ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திருத்தணி சட்டமன்றத் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ரவிராஜ்.
2017- ஆம் ஆண்டு பாமகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பாஜகவின் செயற்குழு உறுப்பினராகவும் அவர் நியமிக்கப்பட்டார். பின்னர் 2022-ம் ஆண்டு மீண்டும் பாமகவுக்கே திரும்பினார் ரவிராஜ் தற்போது பாமகவின் மாநில துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.