நம்மாழ்வார் பெயரில் பல்கலை !
(6-2-26), தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்தோம். இயற்கை விவசாயத்தை முன்னெடுத்த நம்மாழ்வாருக்குத் தோள் கொடுத்த மூத்தவர்களான குமார் (வானகம்) மகேஷ் மெல்வின் (Bio Dynamic Association), ராமசுப்பிரமணியன் (நம்மாழ்வார் மல்டிவர்சிட்டி) சுந்தரமூர்த்தி (தாய் அறக்கட்டளை) மற்றும் அறச்சலூர் செல்வம் ஆகியோரும், நல்ல முன்னெடுப்புகளையும் முன் முயற்சிகளையும் மேற்கொண்டு வரும் பெண் உழவர்களான சரோஜா (பள்ளப்பட்டி), சாந்தி (செம்புலம் இயற்கை உழவர்கள் கூட்டமைப்பு). ஆகியோர் குழுவாக சென்றிருந்தோம். “தமிழகத்தின் இயற்கை வழி விவசாயம் தனித்துவமானது, தமிழைப் போலவே” என்ற படங்களுடன் கூடிய அறிக்கையை அளித்தோம்.
நம்மாழ்வார் வடிவமைத்து வளர்த்த தமிழகத்தின் இயற்கை விவசாயம் எத்தகைய தன்மையை, சமூக வளர்ச்சிக்கான அடிப்படையை அடித்தளமாகக் கொண்டது, எப்படியெல்லாம் நம்மாழ்வார் இதற்காக பாடுபட்டார் உள்ளிட்ட விவரங்களைக் கொண்ட சிறு அறிக்கையது.
நம்மாழ்வார் ஊரக மறுமலர்ச்சி பல்கலைக் கழகம் என்ற பல்கலைக் கழகம் உருவாக்குவது. இதன் மூலம் இயற்கை விவசாயம் மட்டுமின்றி, ஒட்டு மொத்த ஊரக மக்களின் வாழ்வும், இயற்கை வள ஆதாரங்களும் மேம்படுவதற்கான ஒன்றாக இது அமைய வேண்டும். இதன் துணைவேந்தர் ஒரு உழவராக இருக்க வேண்டும்.
இயற்கை வேளாண்மையை தீவிரமாகவும் தனித்த கவனத்துடன் முன்னெடுக்கவும் தனித்த இயக்குனரகம் அமைக்க வேண்டும்.
மாநிலப் பட்டியலில் உள்ள வேளாண்மை மாநில அரசின் அதிகாரத்தை எடுக்கும் வகையில் உள்ள புதிய விதைச் சட்டம் 2025ஐ தமிழக அரசு ஏற்கக் கூடாது. என்பது உள்ளிட்ட கோரிக்கைகளோடு,
“தங்களது 2.0 அரசில் நடக்கும் முதல் நிகழ்வாக இயற்கை விவசாயிகள் மற்றும் பெண் உழவர்கள் நிகழ்வாக இருக்க வேண்டும்,’ எனக் கேட்டுக் கொண்ட போது சிரித்துக் கொண்டே ஆகட்டும் என்றார்.
— இராமசாமி செல்வம்








Comments are closed, but trackbacks and pingbacks are open.