நடந்தாய் வாழி காவிரி ! ❤️

ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

0

காவிரி ஆறென நீர் விளையாட.. கன்னி மலர்கள் தேன் மழையாக…” என்று ஒரு திரைப்படத்தின் காதல் காட்சிக்கான பாடலில் கவியரசு கண்ணதாசன் தமிழ் மழை பொழிந்திருப்பார். தான் உற்பத்தியாகும் இடத்திலிருந்து வங்கக் கடலில் வந்து கலக்கும் வரைக்குமாக ஒரு மாபெரும் நீர் விளையாட்டினை ஆடித் தீர்த்து விடுகிறாள் காவிரி.

கர்நாடகாவில் மேற்குத்தொடர்ச்சி மலையின் குடகு மலை உச்சியில் இருந்து, கள்ளங் கபடமற்ற குழந்தையின் குதூகலத்துடன் குதித்தோடி வருகிறாள். மலைக்குன்றுகளிலும் பாறைகளிலும் அதன் அடர்ந்த அத்தனைப் பசுமைப் பிரதேசங்களிலும் அவள் ஓடி வரும் பேரழகே தனி. ஆண்டுதோறும் புதுப்புனல் பொங்கி வரும் பொன்னி நதியான காவிரி, தான் பரவிப் பாய்கின்ற பரப்பு முழுவதுமாக “பச்சை வண்ணச்சேலை கட்டிக் கொண்ட பூமி”யாக பசுமைவண்ணம்பூசிப்பூசிசெழுமைப்படுத்திக் கொண்டே இருக்கிறாள்.

https://businesstrichy.com/the-royal-mahal/

காவிரி பிறந்த இடமானகர்நாடகாவையும், புகுந்த இடமான தமிழகத்தையும் நீர் வளம் பெருக்கி வந்து, நில வளம் காத்து வருகிறாள். நில வளம் மட்டுமா காக்கிறாள்? வாழும் மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் பறவைகளுக்கும் குடிநீர். வளரும் பயிர்களுக்கு உயிர் நீர்.

ஆங்காங்குதொழிற்சாலைகள்தொடர்ந்து இயங்கிட தொய்வின்றி நீர். அணைகளின் மதகுகள் வழியாக ஆர்ப்பரித்துக் கொட்டுகின்ற நீரின் விசைதனில் உற்பத்தியாகும் நீர் மின்சாரம் என அடுக்கிக் கொண்டே போக லாம். அதனால்தான் அவளை “நடந்தாய் வாழி காவிரி” என்று போற்றிப் புகழ்ந்து கொண்டாடுகிறோம்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

“இந்தியாவுல ஓடி வர்ற ஏழு முக்கிய நதிகள்ல ஒன்னு காவிரி. கர்நாடகா குடகு மாவட்டம் தலைக்காவேரிங்கற இடத்துல உற்பத்தியாகுது. கடல் மட்டத்துலேந்து சுமார் நாலாயிரத்து நானூறு அடி உயரத்துலேந்து தன்னை வெளிப்படுத்துது. கர்நாடகாவுல குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, சாம்ராஜ் நகர் மாவட்டங்கள் மற்றும் பெங்களூரு ரூரல் பகுதிகள் எனப் பரவிப் பாய்ந்து வருகிறது. கபினி ஆறு கேரளாவின் ஒரு பகுதியில் உற்பத்தியாகி வெளியேறி காவிரியில் வந்து கலக்கிறது.

தமிழகத்தின் தருமபுரி, சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்கள் மட்டுமல்லாது புதுவையின் காரைக்கால் பகுதியிலும் ஓடி வருகிறாள் காவிரி. இதனால் தான் காவிரி நதிநீர்ப் பங்கீடுங்கறது கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரின்னு நான்கு மாநிலப் பிரச்னையாப் பேசப்படுது. பொதுவா ஒரு நதியோட நீர்ப்பங்கீடு பாசன நீர்த்தேவை மற்றும் குடிநீர்த் தேவை இதுகளை வெச்சுத்தான் பிரிக்கப்படுது.

போதிய மழை பெய்யாத காலங்கள்ல குடிநீருக்கு முக்கியத்துவம் தரப்படுது. காவிரியின் மொத்த நீளம் எண்ணூறு கிலோ மீட்டர் தூரம் ஆகும். இதுல கர்நாடகாவுல முந்நூற்றி இருபது கி.மீ. தூரம். அர்க்காவதி ஆறு காவிரியில வந்து சேர்ற இடத்துலேந்து காவிரியின் இடது கரை தமிழ்நாடு, வலது கரை கர்நாடகா இதன் நீளம் அறுபத்திநாலு கி.மீ. தூரம். அதன் பின்னர் தமிழ்நாட்டு எல்லையில் இருந்து ஒகேனேக்கல், மேட்டூர் வழியாக பூம்புகார் சென்று அங்கு வங்கக் கடல்ல கலக்குற வரைக்கும் நானூற்றி பதினாறு கி.மீ.னு மொத்தம் எண்ணூறு கி.மீ. தூரம்.

காவிரியில் இரண்டு நீர்வீழ்ச்சிகள் முக்கிய மானது. ஒன்று கர்நாடகாவின் சிவசமுத்திரம். இன்னொன்று தமிழ்நாட்டின் ஒகேனேக்கல். சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி அருகே அதன் வலதுபுறமான ககனசுகி அருவியில் 1902ல் நீர் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு கோலார் தங்க வயலுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. இது ஆசியாவின் முதல் நீர் மின் உற்பத்தி நிலையம்ங்கற பெருமையும் உண்டு.” என்கிறார் தமிழகப் பொதுப்பணித்துறையில் பணியாற்றி ஒய்வு பெற்றுள்ள முன்னாள் செயற்பொறியாளர் ஒருவர்.


ஒகேனக்கல் வரை குதித்தோடி சீறிப் பாய்ந்து ஆர்ப்பரித்து வருகிறாள் காவிரி. அதன் பின்னர் மேட்டூர் அணையில் இருந்து விடுபட்டு தாழ்நில சமவெளிப் பகுதிகளில் அன்ன நடை போட்டு பரவிப் பாய்ந்து, தமிழக காவிரி டெல்டா பாசனப் பகுதியின் நிரந்தர அன்னபூரணியாகவே அமைந்திருக்கிறாள்.

“கர்நாடகாவின் கிருஷ்ணராஜசாகர் அணை 1931ல் கட்டி முடிக்கப்பட்டது. தமிழகத்தின் மேட்டூர் அணை 1934ல்கட்டி முடிக்கப்பட்டது. மேட்டூர் அணைக்குள் நூற்றியிருபது அடி உயரத்துக்கு தண்ணீர் தேக்கி வெச்சுக்கலாம். இந்த வருஷம் சமீபத்துல கடந்த நாப்பது நாட்களா அதனோட முழுக் கொள்ளளவு 120 அடி உயரத்துக்கு தண்ணீர் தொடர்ந்து தேங்கி இருந்துச்சு.

மேட்டூர் அணையின் மதகுகள் அருகே ரெண்டு இடங்கள்ல சுரங்க வழி நீர் மின் நிலையம் அமைக்கப்பட்டிருக்கு. கோடை காலங்கள் தவிர இதர நாட்களில் அந்த நிலையங்கள்ல மின்சாரம் உற்பத்தி செய்யப்படுது. மேட்டூர் அணைக்குக் கீழேயும் சில இடங்கள்ல நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுது. தருமபுரி, சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல் மாவட்டப் பகுதிகளுக்கு கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மூலமா ஆற்றின் உள்ளே ஆழ்குழாய்க் கிணறுகள் அமைத்து மேற்கண்ட மாவட்டப் பகுதி மக்களுக்குக் குடிநீர் தரப்படுது.

நெல், கரும்பு, வாழை பயிரிடப்படுது. ஈரோடு மாவட்டத்துல தோட்டக்கலைப் பயிர்கள் காவிரி நீர் வளத்தை வெச்சு நல்லாவேப் பயிரிடப்படுது. குறிப்பா மஞ்சள் இங்கே அதிகமா பயிரிடப்படுது. தமிழ்நாட்ல ஈரோடு ஏரியாவுல தான் மஞ்சள் அதிகமா சாகுபடி செய்யப்படுது. மார்க்கெட்ல ஈரோட்டு மஞ்சளுக்கு தனி மவுசே உண்டு.” என்கிறார்

மஞ்சள் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஈரோடு தெய்வசிகாமணி.

மேட்டூருக்குக் கீழே பவானி ஆறு ஆனது, பவானி நகரில் காவிரியில் வந்து ஒன்றாகக் கலக்கிறது. அது கலக்கும் இடம் பவானி கூடுதுறை எனப்படுகிறது. சங்கமேஸ்வரர் கோயில் அங்கு அமைந்துள்ளது. பவானி கூடுதுறை ஒருவித ரசிக மனோபாவத்துடன் ரசித்துப் பார்க்க வேண்டிய இடம் ஆகும். இரு வேறு நதிகள் சங்கமிக்கும் இடத்தில் சங்கமேஸ்வரர் எழுந்தருளி திருக்கோயில் கொண்டுள்ளார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஆடிப்பெருக்கு அன்று பெண்கள் ஆண்கள், சிறுவர், சிறுமியர் கூட்டம் அலைமோதும். “கொடுமுடிக்கு முன்பாக நொய்யல்ங்கற ஊர்ல காவிரியில் நொய்யல் ஆறு வந்து கலக்குது. அந்த நொய்யல் ஆற்றை வாய் கூசாம “பாவப்பட்ட ஆறு”னு சத்தமாவே சொல்லலாம். கழிவு நீர்த் தேக்கமா மாறிப்போன அந்த நொய்யல் ஆற்றோட “ஒரத்துப்பாளையம் அணை”யே அதுக்கு நேரடி சாட்சி.
திருப்பூர், கோவை மாவட்டங்கள்ல உள்ள பல்லாயிரக்கணக்கான சாயப்பட்டறை மற்றும் பிளீச்சிங் தொழிற்சாலைகளோட கழிவு நீர் பூராவுமே நொய்யல் ஆத்துல தான் அங்கங்கே கலக்குது. அதையும் மீறி கொடுமுடியிலக் காவிரி ஒரு நளினமான அழகோட ஓடி வந்துகிட்டு தான் இருக்கு. அந்த அழகை நீங்க கொடுமுடி காவிரிப் படித்துறையில நின்னு பாத்தா ரசிச்சு கிட்டே இருக்கலாம்.

கொடுமுடிக்குக் கீழே கரூர்ல அமராவதி ஆறு வந்து காவிரியில கலக்குது. மோகனூர்ல திருமணிமுத்தாறு வந்து காவிரியிலக் கலக்குது. நெல், கரும்பு இங்கே கணிசமாப் பயிரிட்டாலும் வாழை சாகுபடி தான் இங்கே அதிகம். மோகனூர், காட்டுப்புத்தூர், தொட்டி யம் சுற்று வட்டாரப் பகுதிகள்ல வாழை சாகுபடி ரொம்ப ரொம்ப அதிகம்.

நல்லாவெளைஞ்சதுனா இந்த வாழை எங்களை நல்லாவே வாழ வைக்கும். சுழட்டியடிச்சி பலமா நாலு காத்து வீசுனாபோதும். வாழை விவசாயிகளை பஞ்சாப் பறக்கவும் வெச்சுடும்.” என்று வெளிப்படையாகப் பேசுகிறார் தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அஜிதன்.

‘கரூருக்குக் கீழே மாயனூர் எனுமிடத்தில் காவிரியில் மாயனூர் கட்டளைக் கதவணை 2006லகட்டத் தொடங்கி 2014ல் முடிக்கப்பட்டது. 98 கதவுகள் கொண்டது. முக்கால் டிஎம்சி தண்ணி தேக்கி வெச்சுக்கலாம். காவிரியின் இந்தக் கதவணை ஒன்னேகால் கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இந்த இடத்துலேந்து ஒரு கரையில குளித்தலை மறுகரையில முசிறி வழியா மேலணைங்கற முக்கொம்பைச் சென்று சேருது. மாயனூர்லேந்து முக்கொம்பு வரைக்குமா ஓடி வர்ற காவிரிய “அகண்ட காவிரி”னு சொல்லுவாங்க. மாயனூர் காவிரியில ஆழ்குழாய்க் கிணறுகள் அமைக்கப்பட்டு கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலமா மதுரை அப்புறம் திண்டுக்கல்பகுதிகளுக்குக்காவிரி நீர் கொண்டு போகப் படுது.

முக்கொம்புலேந்து ரெண்டாப் பிரியுது காவிரி. ஒன்னு காவிரி. இன்னொன்னு கொள்ளிடம். இதனை வட காவிரி, தென் காவிரின்னும் சொல்லுவாங்க. வட காவிரி தான் கொள்ளிடம். திருச்சி ஸ்ரீரங்கம் இடையில ஓடி வர்றது தென் காவிரி. கல்லணையில அந்தக் கொள்ளிடம் ஒன்னாக் கலந்து அங்கேர்ந்து கொள்ளிடமாத் தனியா பிரிஞ்சு போவுது.

முக்கொம்புலேந்து கல்லணை வரைக்குமாகக் காவிரியில நெறையக் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மூலமா ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர் உட்பட நெறைய மாவட்டங்களுக்குக் குடிநீர்கொண்டு போகப்படுது. கரூர், திருச்சி மாவட்டங்கள்ல நெல், கரும்பு, வாழைஅமோகமாப் பயிரிடப்படுது. லாலாப்பேட்டை, கருப்பத்தூர், குளித்தலை,கொடியாலம், பகுதிகள்ல வெற்றிலை அமோகமா விளையுது.” எனச் சொல்கிறார் தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நலச்சங்கத்தின் தலைவர் மகாதானபுரம் ராஜாராம்.

தலைக்காவிரியில் இருந்து கிளம்பி வருகிற காவிரி, மூன்று இடங்களில் தீவு நகரங்களை உருவாக்கி விட்டு ஓடி வருகிறாள். கர்நாடகா வில் ஸ்ரீரெங்கப்பட்டிணம், சிவசமுத்திரம். தமிழகத்தில் ஸ்ரீரங்கம். இந்த மூன்று தீவுகளில் ஸ்ரீரெங்கப்பட்டிணம் தீவானது பெரியது. இம்மூன்று தீவுகளிலும் உலகளந்த பெருமாளுக்குத் திருக்கோயில்கள் அமைந்துள்ளன. அரங்கநாத சுவாமிக்கு அப்படியரு மகத்துவம். ஸ்ரீரெங்கப்பட்டிணத்தில் உள்ள அரங்கன், ஆதிரங்கன். சிவசமுத்திரத்தில் உள்ள அரங்கன் மத்தியரங்கன். ஸ்ரீரங்கத்தில் உள்ள அரங்கன், அந்தரங்கன். ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் ஆடிப்பதினெட்டுஅன்று கூடுகின்ற கூட்டம், காவிரிக் கரையோர நகரங்களிலேயே மிக அதிகமாகக் கூடுகின்ற கூட்டம் ஆகும்.

புதுமணத்தம்பதிகள் குடும்பம் குடும்பமாக வந்து காவிரி அன்னையிடம் பிரார்த்தனை செய்வார்கள். ஸ்ரீரங்கம் பெருமாள் மட்டும் லேசுப்பட்டவரா என்ன? காவிரித் தாயினைத்தன் சகோதரியாகப் பாவித்து, ஆடிப் பதினெட்டு அன்று சீர்வரிசை கொண்டு வந்து மரியாதை செலுத்துகிறார்.


“காவிரியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களில் ஒன்று, கல்லணை.

இரண்டாயிரம்ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுச் சாதனை அது. கரிகால் பெருவளத்தான் பாறைக் கற்களை மட்டுமே கொண்டு வந்து குவித்து ஆற்று மணலில் அடுக்கி வைத்து தண்ணீர் தேக்கி, அதனை நான்கு பிரிவுகளாக மடை மாற்றி, அதன் பாசனப் பகுதிகளை சோழ வளநாடாகக் கட்டமைத்துத் தந்தவன். கல்லணையில் இருந்து புது ஆறு எனப்படும் கல்லணைக் கால்வாய், வெண்ணாறு, காவிரி, கொள்ளிடம் என நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிகிறது. அரசலாறு, வெண்ணாறு, வெட்டாறு, புது ஆறு, மன்னியாறு என்றும் அவைகளில் இருந்து வாய்க்கால்களும் கிளை வாய்க்கால்களும் பல்கிப் பெருகி தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டப் பகுதிகளில் பாய்ந்தோடி வருகிறாள் காவிரி. இறுதியாக நாகை மாவட்டத்தின் பூம்புகாரில் வங்கக் கடலில் கலந்து விடுகிறாள். கல்லணைக்குக் கீழேயான காவிரிப் பாசனப் பகுதிகளில் நெல்தான்இருபோக மற்றும் முப்போக சாகுபடியாக அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. நெற்களஞ்சியம் என்றும் வர்ணிக்கப்படுகிறது.

திருவையாறு காவிரியும், மயிலாடுதுறை காவிரியும் மகத்துவமானது. அந்தத் திருவையாறு காவிரி ஆற்று மணலில் அமர்ந்து தான் தியாகராஜ ஸ்வாமிகள் கர்நாடக இசையின் ராக ஆலாபனைகளை ஸ்வரங்களை நேர்த்தியாகத் தொகுத்து உருவாக்கித் தந்துள்ளார்.

அதன் நன்றியறிதலாக ஆண்டுதோறும் திருவையாறு காவிரிக் கரையில் தியாகராஜ ஸ்வாமிகள் ஆராதனைவிழா நடத்தப்பட்டு வருகிறது. எழிலானமாட கூடங்களுடன் அமைக்கப்பட்டிருக்கும். மயிலாடுதுறை காவிரியில் துலாக் கட்டம் அமைந்துள்ளது,. தீர்த்தவாரிகளும், மகாபுஷ்கரமும், ஆடிப் பதினெட்டும் இங்கு குறிப்பிடத்தக்கது. தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களின் வேளாண் விளைநிலங்கள். இயல்பாகவேஇயற்கைஅளித்திருக்கும் கொடை அது.

சுமார் 20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் செந்நெல் விளைவித்து செழுமையாக்கிக் கொண்டே இருக்கிறாள் காவிரி என்றால் அது மிகையல்ல.” எனக் குறிப்பிடுகிறார் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க தஞ்சை மாவட்டத் துணைத்தலைவர் வெ. ஜீவகுமார்.

– ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.