உச்சநீதிமன்ற நீதிபதிகளால் மட்டுமே நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் ! – டாக்டர் சரவணன்
மதுரையில் அதிமுக மருத்துவரணி இணை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சரவணன் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அவர் கூறுகையில்..
நீட் தேர்வு ரத்து தொடர்பாக திமுக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி மக்களிடம் நாடகமாடி உள்ளது. 2010 ஆம் ஆண்டு திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போராடி நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற்றார்.

எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் 1,650 மாணவர்கள் ஆண்டுதோறும் மருத்துவர் கல்வி பயிலக் கூடிய வாய்ப்பை பெற்றுள்ளனர். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் எனும் வாக்குறுதியை கொடுத்து திமுக ஆட்சி பொறுப்பிற்கு வந்தது இன்னும் 9 மாதங்களில் தேர்தல் நெருங்குவதால் முதலமைச்சர் நீட் தேர்வு தொடர்பாக நாடகத்தை நடத்துகிறார்கள்.
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக பொதுமக்களிடம் 50 லட்சம் கையெழுத்து பெற்றது அதன் நிலை என்னவென்று தெரியவில்லை.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
உச்சநீதிமன்றத்தில் 11 நீதிபதிகள் கொண்ட அமர்வில் மட்டுமே நீட் தேர்வை ரத்து செய்ய முடியும். திமுகவால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. நீட் தேர்வு அரக்கனை அதிமுக நிச்சயம் எதிர்கொள்ளும். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் திமுக போல பொய்யான வாக்குறுதிகளை தரமாட்டோம்.
ஒருபுறம் நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம். அதே நேரத்தில் நீட் தேர்விற்காக மாணவர்களை சிறப்பு பயிற்சிகள் மூலம் தயார்படுத்துவோம். நீட் தேர்வை எதிர்கொள்வதற்காக மாணவர்களை தயார்படுத்தும் முயற்சியிலிருந்து திமுக அரசு விலகி விட்டது என கூறினார்.
— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.