அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

நியோமேக்ஸ் : புகார் கொடுக்கலாமா, வேண்டாமா ? நிறுவன தரப்பு அறிவிப்பும் சிவகாசி ராமமூர்த்தி விளக்கமும் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

நியோமேக்ஸ் மோசடி தொடர்பாக  மதுரை கிளை உயர்நீதிமன்றக்கிளை நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி முன்பாக நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில், பொருத்தமான முடிவை எட்டுவதற்கு உதவிடும் வகையில் சில வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்தளிக்கப்பட்டிருக்கிறது. மிக முக்கியமாக, நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் குறித்த தரவுகளில், நியோமேக்ஸ் நிறுவனம் சமர்ப்பித்திருக்கும் தகவலுக்கும் வழக்கை விசாரித்துவரும் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்திருக்கும் தகவலுக்கும் பெருத்த வேறுபாடு இருப்பதை கருத்திற் கொண்டுதான், இதுவரை புகார் அளிக்காதவர்களுக்கும் நவம்பர் – 15 ஆம் தேதி வரையில் புகார் அளிப்பதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கிறது, நீதிமன்றம்.

நியோமேக்ஸை நம்பி பணத்தை போட்டு ஏமாந்து நிற்கும் முதலீட்டாளர்கள் ஒவ்வொருவரின் கையைப் பிடித்து இழுத்து வந்து புகார் கொடுக்க வைத்தே ஆக வேண்டும் என்பது, பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரின் வேலையல்ல. அது அவர்களுக்கு அவசியமும் அல்ல. அழுகிற பிள்ளை பால் குடிக்கும் என்ற பழமொழிக்கு இணங்க, சட்ட ரீதியான தீர்வை எதிர்நோக்குபவர்கள் தாராளமாக புகார் அளிக்கலாம்.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இல்லை, நியோமேக்ஸ் நிறுவனத்தின் வாக்குறுதியை நம்பி புகாருக்கே செல்லாமல், தனிப்பட்ட முறையில் செட்டில்மென்ட்டை பார்த்துக் கொள்கிறேன் என்று துணிச்சலாக முடிவெடுப்பது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. அதனால் ஏற்படப்போகும் சாதக – பாதகங்களுக்கு தனிப்பட்ட முதலீட்டாளர்களே, பொறுப்பாளி.

நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும்கூட, நியோமேக்ஸ் நிறுவனத்தை நம்பி இதுவரை புகாருக்கு செல்லாமல் காத்திருப்பவர்களுக்கு இதுவரை எந்த ஒரு தீர்வையும் அந்நிறுவனம் வழங்கியதாக தெரியவில்லை. ஒன்று நீதிமன்ற வழக்குகளை காரணம் காட்டி, இழுத்தடிக்கிறது.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

அடுத்து, ”நீ அவல் கொண்டுவா, நான் உமி கொண்டு வருகிறேன்” என்ற கதையாக, ”மூன்று இலட்ச ரூபாய்க்கு பாண்டு உன்னிடம் இருந்தால், மேலும் மூன்று இலட்சத்தை என்னிடம் கொடு. நான் உனக்கு ஆறு இலட்சம் மதிப்பிலான இடத்தை எழுதிதருகிறேன்.” என்பதாக, டீலிங் பேசி வருகிறது. இது ஒரு வகையில், நாய் வாலை வெட்டி நாய்க்கே சூப் வைத்துக் கொடுக்கும் தந்திரம்தான் என்பதை, ஏமாளி முதலீட்டாளர்களும் அறிந்தே இருக்கிறார்கள்.

இந்நிலையில்தான், நைச்சியமான முறையில் நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் புகாருக்கு செல்லாமல் தடுக்கும் வகையில் பூசி மெழுகும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது, நியோமேக்ஸ் நிறுவனம். அதில், ஏதோ தாம் செட்டில்மென்டுக்கு தயாராக இருப்பதை போலவும், பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரும் நீதிமன்றமும்தான் செட்டில்மென்டுக்கு தடையாக நிற்பதைப்போலவும் சித்தரித்திருக்கிறார்கள்.

நியோமேக்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பையும், அந்த அறிவிப்புக்கு சிவகாசி ராமமூர்த்தி அளித்திருக்கும் விளக்கத்தையும், நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் முன் வைக்கிறோம். முடிவு உங்களுடையது.

முதலில் நியோமேக்ஸ் தரப்பு விளக்கம் :

“அன்புள்ள வாடிக்கையாளர்களே!

வழக்கு சம்பந்தமான சில விபரங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அதாவது தூத்துக்குடியைச் சேர்ந்த திரு.நடராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில்  தொடர்ந்த வழக்கில் நடந்த விசாரணைகளில் கடந்த 14, 16, 19-ந் தேதி நடந்த சில நிகழ்வுகள்:

  1. நிறுவனம் (முந்தைய) வழக்கின் ஆரம்பத்திலிருந்தே நிலமாகவோ அல்லது பணமாகவோ ஒரு குறிப்பிட்ட காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு செட்டில்மெண்ட் செய்ய தயார் என்று கூறி வந்தது. தற்போதும் 6 – மாதங்களில் செட்டில்மெண்ட் செய்யத் தயார் என்றும் அதற்கான வாய்ப்பைத் தருமாறு (மாண்புமிகு நீதிபதி பரதச் சக்கரவர்த்தியிடம்) நீதிமன்றத்தை கோருகிறது.
  2. 2456 ஏக்கர் (10,82,90,160 ச.அடி) அதாவது சுமார் 11 கோடி மதிப்பிலான சொத்து, 563 செட்டில்மெண்ட் ஆன ஆவணம் மேலும் நிறுவன டைரக்டர்களிடமுள்ள விபரப்படி 13500 வாடிக்கையாளர்கள் பட்டியல் அட்வகேட் ஜெனரலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
  3. முதலீடு / டெபாசிட் தாரர்களின் அவசரத் தேவைகளான திருமணம், கல்வி, மருத்துவச் செலவுகளைக் கருத்தில் கொண்டு மாண்புமிகு நீதிபதி பரதச் சக்கரவர்த்தி அவர்களின் அமர்வு விரைவாக தீர்வு கொடுக்க முயற்சிக்கிறது.
  4. அதன் படி விரைவாக செயல்பட கூடுதல் (3) இன்ஸ்பெக்டர்கள், கூடுதல் DRO க்கள், தேவையானடெக்னிக்கல், கிளெரிக்கல் ,ஆடிட்டிங் பணியாளர்களை நியமிக்க அரசை கேட்டுள்ளது.
  5. இதன்படி 23.10.24 -ல் ஆங்கில ஹிந்து, தமிழில் தினத்தந்தி அல்லது தின மணியில் Application Format உடன் விளம்பரம் கொடுக்கப்பட்டு 30.10.2024, 5 மணிடன் புகார் வாங்குவது நிறைவு பெறும். 19-11-2024 க்குள் விசாரணை முடிக்கப்பட்டு 26-11-2024 -ல், EOW வெப்சைட்டில் பதிவேற்றம் செய்து, அந்த அறிக்கை 2-12-2024 ல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவேண்டும். 3-ந்தேதி மீண்டும் விசாரணை / விவாதம் நடந்து நீதிமன்றத்தால் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்.
  6. நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட சொத்து மற்றும் முடக்கப்பட்டுள்ள வங்கி இருப்புத்தொகை புகார்தாரர்களுக்கு கொடுக்கவேண்டிய செட்டில்மெண்ட் தொகையை விட கூடுதலாக போதுமானதாக இருப்பதாலும் ஏலத்திற்கு சென்றால் முழு செட்டில்மெண்ட் கொடுக்க முடியாமல் (குறைந்த விலைக்கே ஏலம் போகும்) Propotionate குறைந்த தொகையே வழங்க இயலும் ஆதலால் நிறுவனமே மார்க்கெட் விலைக்கு விற்று வாடிக்கையாளர்களின் முழு செட்டில்மெண்டை பணமாகவோ அல்லது நிலமாகவோ அல்லது இரண்டும் கலந்தோ கொடுக்க முடியும் என்ற வாதம் நிறுவனத் தரப்பில் வைக்கப்பட்டது. அதனை நீதிமன்றமும் ஆமோதித்தது.
  7. மேற்கண்ட 3 விதமான செட்டில்மெண்டை தேனி வாடிக்கையாளர் நலச் சங்கத்தின் வழக்கறிஞர் VOL அழகர்சாமியும் ஏற்றுக் கொண்டார்.
  8. மேற்கண்ட அனைத்தும் நல்ல சமிக்ஞையாக வே தெரிகின்றது. அவ்வாறே நடைபெற்று வாடிக்கையாளர்களுக்கு விரைவான செட்டில்மெண்ட் (தீர்வு) கிடைக்க பிரார்த்திப்போம்.

எனினும் சில ஐயம் எழுகிறது.

  1. ஏறத்தாழ 16- மாதங்கள் கடந்தும் நிறுவனம் முதல் நாளில் இருந்தே செட்டில்மெண்ட் தயார் என்று கூறியும் நீதிமன்றம் ஒரு வாய்ப்பு அளிக்கவில்லை.
  2. நீதியரசர் தண்டபாணி அவர்கள் செட்டில்மெண்ட் செய்ய தயார் என ஆரம்பமுதலே உறுதி கூறி வரும் நியோமேக்ஸ் நிறுவனத்தையும், அவ்வாறு உறுதி கூறாத 555 நிறுவனத்தை ஒன்றாகக்கருதி ஒரே (பொது வான) ஆர்டர் பிறப்பித்தார். (அது நியாயமாக தெரியவில்லை)
  3. மேலும் தொடர்ந்து வழக்கிற்கு மேல் வழக்கு தொடுக்கப்படுவதை பார்க்கும் போது, வழக்கை இழுத்தடித்து தாமதப்படுத்தி, வாடிக்கையாளர்கள் மத்தியில் (ஊடகங்கள், செய்தித்தான்கள் மூலம்) பீதி ஏற்படுத்தி புகார்களை அதிகரிக்கச் செய்து, பின் நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கி, நிறுவன செயல்பாட்டை தடுத்து நிறுவன சொத்துக்களை பொது ஏலத்திற்கு வரச் செய்து அடிமாட்டு விலைக்கு வாங்கி கொள்ளை இலாபம் பெற முயற்சிக்கும், சதி செய்யும், திட்டமிடும் கும்பல் பின்னனியில் செயல்படுகிறதோ என்ற ஐயம் பலமாக உள்ளது.
  4. இவ்வாறு கொள்ளை இலாபம் பெற முயற்சிக்கும் கும்பலின் முயற்சியால் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் முதலீட்டுத்தொகை கிடைத்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் செயல்படுபவர்களாகவே தோன்றுகிறது.
  5. நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு (திருமணம் / கல்வி / மருத்துவ) எவ்வாறு அவசர தேவைகள் இருக்குமோ அதே போன்ற தேவைகள் ஏனைய 555 நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களுக்கும் இருக்கும். அந்நிறுவனங்கள் குறித்து அரசோ, நீதிமன்றமோ, EOW, ஊடகங்கள் கவலை பட்டதாக தெரியவில்லை. ஆனால் 555 நிறுவப்பட்டியலோடு 556 வது நிறுவனமாக நியோமேக்ஸ் நிறுவனத்தையும் முடக்கி வாடிக்கையாளர்களுக்கு 555 நிறுவனங்களைப் போல் செட்டில்மெண்ட் செய்ய விட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அரசு அமைப்புகள், வழக்கு தொடர்ந்தவர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்களோ என்ற ஐயம் பலமாக உள்ளது.

எனினும் நீதித் துறை மீது நம்பிக்கை வைத்து கஷ்டப்படும் வாடிக்கையாளர்கள் நலன் நாடும் நல்ல உத்தரவை /தீர்ப்பை எதிர்பார்த்திருப்போமாக!

பின் குறிப்பு: ஒரு திரைப்படத்தில் கூறுவது போல வரும்ம்ம் ஆனா வராது என்பது போல நல்ல உத்தரவை / தீர்ப்பை எதிர்நோக்கும் போதும் மேற்கண்டவாறு நடக்கலாம். நீதிமன்றத்தில் உயிருள்ள போது வழக்கு தொடர்ந்தால் செத்த பின்பு தீர்ப்பு வரும் நிகழ்வுகளும் (இந்திய நீதித் துறையில்) உண்டு. உரிய நேரத்தில் நீதி வழங்கப்பட வேண்டும். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியே!

எனவே வழக்கு ஒரு புறம் நடந்து கொண்டிருக்கட்டும். ஆதலால்  VG Fedaration மூலம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் 37 Project களில் Plot களை விற்று வாடிக்கையாளர்களுக்கு செட்டில் மெண்ட் செய்யும் முயற்சியில் ஒன்றிணைந்து செயல் படுவோம். நன்றி!” என்பதாக, நியோமேக்ஸ் தரப்பில் தங்களது தரப்பு கருத்தாக முன்வைத்திருக்கிறார்கள்.

இந்த விளக்கத்திற்கு, பதிலாக சிவகாசி ராமமூர்த்தி முன்வைத்திருக்கும் கருத்து :

”சொத்துக்களை ஏலம் விடுவதற்கு என்று ஒரு வரைமுறை இருக்கிறது. இ – ஏலம் மூலமாகத் தான் வெளிப்படையாக ஏலம் விடப்படும். இந்தியா முழுவதிலும் இருந்து ஏலம் எடுக்க பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் போட்டி போடும். பத்திரிகைகளில் இது சம்பந்தமாக செய்தி வெளியிடுவார்கள். அதனால் யார் யார் ஏலத்தில் கலந்து கொள்வார்கள் எனத் தெரியாது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

நல்ல சொத்துக்கள் ஒவ்வொன்றும் பல நூறு கோடிகளுக்கு ஏலம் போகும். அதை வாங்கும் திறன் நியோமேக்ஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருக்கிறதா என்பதை பற்றி ஆலோசித்து பார்க்க வேண்டும். பிளாட்டுகள் தனித்தனியாக ஏலம் போட்டால் அதை வாங்குவதற்காக அந்தந்த ஊர்களில் உள்ளவர்கள் மட்டுமே ஆர்வம் காட்டுவார்கள்.

அப்படி செய்வது ஏலம் விடும் அதிகாரிகளுக்கு அதிக வேலை பளுவை தான் தரும். அதனால், அப்படி செய்ய மாட்டார்கள். ஒரு புராஜெக்ட்டிற்கு ஒரு ஏலம் என்றால் கூட, அது பல கோடிகளை தாண்டும். அதனால், வழக்கு மூலமாக சொத்துக்களை முடக்கி ஏலம் எடுத்து பலன் அடைய விரும்புகிறார்கள் என்று கூறுவதை அறிவுள்ளவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

உரிய நேரத்தில் தீர்வு வழங்க வேண்டும் என்றால் அது பணமாக முதிர்வு தொகையுடன் கொடுக்க வேண்டும். இல்லை என்றால், அது ஏமாற்றி மோசடி செய்ய நினைக்கும் தீர்வாகத்தான் கருதப்படும். VG federation என்பது நூதன முறையில் நிலம் விற்பனை செய்யும் உத்தி / அமைப்பு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

டெபாசிட் ஆக முதலீட்டாளர்கள் பணம் கொடுத்து ஏமாந்து விட்டதற்காக நிறுவனம் கூறும் இரட்டிப்பு விலைக்கு யாரும் நிலமாக தீர்வு பெற்றுக் கொள்ள தயாராக இல்லை. புகார் கொடுத்தவர்கள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். புகார் கொடுக்காதவர்களுக்கு ஏன் அப்படி வாங்கி கொள்ள தயாராக இருக்கிறார்கள்.

அவர்கள் எப்படிப்பட்ட பிரச்சினைகளை சந்தித்தார் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஆராய வேண்டும். அவர்கள் யாரிடமிருந்து தீர்வை எப்படி பெற இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள இயலவில்லை.

புகார் கொடுத்தால், பெரும்பாலோர் பணமாக கொடுத்தோம் பணமாக திரும்ப வேண்டும் என்று கேட்கிறோம். பணமாக கேட்பவர்களுக்கு  எப்படி தீர்வு ஏற்படுத்திக் கொடுக்க இருக்கிறார்கள் என்று தெளிவாக கூறி விட்டால் அதை ஏற்றுக் கொள்வதா? இல்லை எதிர்த்து செயல்படுவதா? என தீர்மானிக்க இயலும்.

நிலமாக மட்டுமே தீர்வு ஏற்படுத்திக் கொடுப்போம் என நிறுவனம் அடம் பிடிப்பதால் தான் பிரச்சினை நீடித்துக் கொண்டே செல்கிறது. நிலமாக பாரபட்சம் இல்லாமல் நிச்சயமாக தீர்வு ஏற்படுத்திக் கொடுக்க இயலாது. வாடிக்கையாளர்களுக்கு  நஷ்டம் இல்லாத தீர்வு வேண்டும் என்று கேட்கிறோம்.

ஆனால், நிறுவனம் கொடுக்க இருக்கும் தீர்வு அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் செயல்களாகவே இருக்கிறது. அதனால் அதை ஏற்றுக் கொள்ள மறுப்பு தெரிவிக்கிறோம். நீங்கள் குறிப்பிட்டபடி நீதிபதி மாண்புமிகு பரத சக்கரவர்த்தி அவர்களின் இடைக்கால உத்தரவில் குறிப்பிடப்படவில்லை. Either land or money என்று குறிப்பிடப்பட்டுள்ளது பல விதமான விவாதங்களுக்கு வழி வகுத்திருக்கிறது. பொடி வைத்து அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நிறுவனத்தின் நோக்கம் நிலமாக மட்டுமே தீர்வு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பது. அவர்கள் அதை நோக்கி தான் பயனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

விரைவான தீர்வு என்றால் அது நிலமாக மட்டுமே என்ற திட்டத்தை செயல்படுத்த வற்புறுத்துகிறார்கள். இதுவரை நிறுவனம் வாங்கிய மற்றும் விற்ற சொத்துக்கள் அனைத்தும் அரசு வழி காட்டி மதிப்பில் இருப்பதால் நிறுவனம் அதையே செயல்படுத்த வேண்டும். இல்லை என்றால், நிறுவனம் அரசிற்கு வரி ஏய்ப்பு செய்து ஏமாற்றி மோசடி செய்துள்ளது என்று நாங்கள் வழக்கு தொடுக்க தயாராக இருக்கிறோம். அதற்கு போதுமான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது.

நிலமாக என்றால் அரசு வழிகாட்டி மதிப்பு. இல்லை என்றால் வரி ஏய்ப்பு வழக்கை சந்திக்க நிறுவனம் தயாராக இருக்க வேண்டும். பினாமி சட்டத்தின் அடிப்படையில் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வழக்குகள் தாக்கல் செய்ய நேரிடும்.

பணமாக தீர்வு வேண்டும் என்று கேட்பவர்களுக்கு தீர்வு ஏற்படுத்திக் கொடுக்காமல் நிலமாக தீர்வு ஏற்படுத்திக் கொடுப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டோம். அதற்காக எந்த நீதி மன்றத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டாலும் அதற்கு தயாராக இருக்கிறோம்.” என்பதாக விளக்கம் அளித்திருக்கிறார், சிவகாசி ராமமூர்த்தி.

இரு தரப்பு கருத்துக்களையும் உங்கள் முன்பாக வைத்திருக்கிறோம். இதிலிருந்து புகாருக்கு செல்வதா? இல்லை, நியோமேக்ஸ் நிறுவனத்தை நம்பி புகாருக்கு செல்லாமல் இருப்பதா? என்பது, முதலீட்டாளர்களின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது.

வீட்டிலிருந்தபடியே புகார் அளிக்கலாம் !

தபால் மூலமாக புகார் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி :

மதுரை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம்,

க.எண் 4/425-A, சங்கரபாண்டியன் நகர்,

பார்க் டவுன் தபால்தந்தி நகர் விரிவாக்கம், மதுரை-17.

 

தொடர்புடைய செய்திகளை படிக்க :

நீதிமன்றத்தில் பச்சையாக புளுகிய நியோமேக்ஸ் ! கொக்கி போட்ட நீதிமன்றம் !  

நியோமேக்ஸ் : மதுரைக்கு போக செலவில்லை ! வீட்டில் இருந்தபடியே அஞ்சலில் புகார் அளிக்கலாம் !  

 

மேலும் விரிவான தகவலுக்கு வீடியோவை காண:

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.