நியோமேக்ஸ் : தனி டி.ஆர்.ஓ. நியமிக்காத வரையில் வேகம் எடுக்காது !
தனி டி.ஆர்.ஓ. நியமிக்காத வரையில் வேகம் எடுக்காது !
நியோமேக்ஸ் வழக்கில், நிலங்களை மதிப்பீடு செய்வதற்கான கமிட்டி அமைத்து உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லாததால் சோர்வுற்றிருக்கிறார்கள் நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள். கோடை விடுமுறையை இழந்துவிடக்கூடாது, வழக்கின் போக்கையும் காலம் கடத்திவிடக்கூடாது என்று நீதிமன்றம் கருதியதால்தான், ஏப்ரல் மாதத்தில் அடுத்தடுத்து குறுகிய இடைவெளியில் 5 வாய்தாக்கள் போடப்பட்டு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவும் அதிருப்தி, பல்வேறு வகையிலான குழப்பங்கள் மற்றும் அச்சத்தை மூலதனமாக்கி சிலர் பெரும் வசூல் வேட்டையை நடத்தியிருக்கும் தகவல் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. வக்கீலை வைத்து இந்த செட்டில்மென்ட்டிலேயே புகாரை இணைத்து விடுகிறேன். சி.எஸ்.ஆர். அடித்து தருகிறேன் என்பதாக பேசி புரோக்கர்கள் சிலர் 20,000 முதல் 50,000 வரையில் வசூலித்திருக்கிறார்கள்.
5ஏ செட்டில்மெண்டுக்கு ஒத்துழைப்பதாக நியோமேக்ஸ் நிறுவனத்தின் தரப்பில் மட்டுமே டி.ஆர்.ஓ.விடம் விருப்பம் தெரிவித்திருக்கும் நிலையில் எந்த ஒரு தனிநபர் தரப்பிலிருந்தும் சங்கத்தின் தரப்பிலிருந்து அவ்வாறு தாங்களும் 5ஏ செட்டில்மெண்டுக்கு உடன்பட்டு வருகிறோம் என்பதாக இதுவரையில் யாரும் டி.ஆர்.ஓ.விடம் முறையிடவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. இதை செய்யாமலேதான், இதுவரை சங்கத்தின் சார்பில், வக்கீலை வைத்து 5ஏ செட்டில்மெண்ட் செய்யப்போகிறோம் என்பதாக முதலீட்டாளர்கள் மத்தியில் போலியான வாக்குறுதியை வழங்கினார்களா? என்ற சந்தேகத்தையும் எழுப்பியிருக்கிறது.

குறிப்பாக, இந்த விவகாரத்தில் சங்கத்தின் பாத்திரம் என்ன என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. இதுவரையில் 28-க்கும் அதிகமான சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. மாவட்டத்திற்கு இரண்டுக்கு மேற்பட்ட சங்கங்களும் பதிவாகியிருக்கின்றன. நீதிமன்றம் எங்கும், எப்போதும், இதுபோன்ற சங்கங்களை ஆதரித்தது இல்லை. பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களாகவே, அவர்களின் பிரதிநிதியாகவே அணுகியிருக்கிறது. அவரவர்களும் தனிநபர்களாகவே பொருளாதாரக்குற்றப்பிரிவு மற்றும் நீதிமன்றத்தை அணுகி எந்த விதத்திலும் தலையீடு செய்ய முடியும் என்ற நிலையில், சங்கத்தை முன்னிறுத்துவதன் நோக்கம் என்னவாக இருக்க முடியும்? வழக்கை இழுத்தடிப்பது அவர்களின் நோக்கமா? இல்லை, எரியும் வீட்டில் பிடுங்கியது வரை ஆதாயம் என்பதாக, பணம் பன்னுவது அவர்களது நோக்கமா? என்ற கேள்வி எழுகிறது.
நீதிமன்றத்தின் அணுகுமுறைகளையடுத்து, நியோமேக்ஸ் நிறுவனத்தை நம்பியோ அல்லது அவர்களது மிரட்டல்களுக்கு அஞ்சியோ இதுவரையில் புகார் கொடுக்காதவர்களும்கூட, தற்போது புகார் கொடுப்பதற்கு முன்வந்திருக்கிறார்கள். இப்போது கொடுத்தால், புகாரை ஏற்பார்களா? என்ற கேள்வியை எழுப்பியும் வருகிறார்கள். ஆனால், இவற்றுக்கு பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசு தரப்பில் தெளிவான பதில் இல்லாமல் இருக்கிறது. பொதுவில் இதுபோன்ற பெரிய அளவிலான மோசடி வழக்குகளில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த பிறகும்கூட புகார்களை பெற்ற சம்பவங்கள் உதாரணங்களாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி, 99% பேருக்கு செட்டில்மெண்ட் செய்த பிறகும்கூட, புகாரை பெற்ற வழக்குகளும் இருக்கின்றன.
இதுஒருபுறமிருக்க, தற்போதைய நிலவரங்கள் நியோமேக்ஸ் வழக்கை மட்டுமே கையாளுவதற்கென்று தனி டி.ஆர்.ஓ.வை நியமிக்க வேண்டுமென்ற தேவையை உணர்த்தியிருக்கின்றன. அதுபோலவே, நியோமேக்ஸ் தொடர்பான நீதிமன்ற வழக்குகள் அனைத்தையும் ஒரே நீதிமன்றமே விசாரிக்கும் வகையில் பொருத்தமான ஏற்பாட்டை செய்ய வேண்டும் என்பதையும்தான் கமிட்டி தொடர்பான நீதிமன்ற உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டதில் எழுந்த சிக்கல்கள் உணர்த்தியிருக்கின்றன.
— அங்குசம் புலனாய்வுக்குழு.