நியோமேக்ஸ் ஏலம் … ஒருவழியாக முடிவுக்கு வந்த நீதிமன்றம் !
நியோமேக்ஸ் ஏலம் – ஒருவழியாக முடிவுக்குவந்த நீதிமன்றம் !
நியோமேக்ஸ் மோசடி வழக்கு விவகாரத்தில், நீதியரசர் பரதசக்ரவர்த்தி முன்பாக நடைபெற்று வரும் வழக்கில், முதற்கட்டமாக நியோமேக்ஸ் தொடர்பான நிலங்களை ஏலம் விடுவது தொடர்பான பத்திரிகை அறிவிப்பை பிப்-28 அன்று வெளியிட முடிவு செய்திருக்கிறது. இதற்கான, இறுதி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை, பிப்-24 அன்று நடைபெறும் நீதிமன்ற விசாரணையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக, பிப்-20 அன்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், ஏலத்தை முன்னின்று நடத்தப்போகும் எம்.எஸ்.டி.சி. (Metal Scrap Trade Corporation Limited – MSTC) தரப்பில், சில கோரிக்கைகள் மற்றும் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கின் தகுதி வாய்ந்த அதிகாரியுடன் பொது ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்வது; இ.எம்.டி. கட்டணத்திலிருந்து விலக்கு பெறும் முதலீட்டாளர்களின் விவரங்களை பெறுவது; ஏலத்துக்குப்போகும் நிலம் தொடர்பான தரவுகளை பதிவேற்றம் செய்வது குறித்து சில முன்மொழிவுகள், எம்.எஸ்.டி.சி., நிறுவனத் தரப்பு வழக்கறிஞர் முன்வைத்தார்.

இதனை தொடர்ந்து, நியோமேக்ஸ் தரப்பு வழக்கறிஞர் பொருளாதாரக் குற்றப்பிபிரிவு போலீசாரும் இணைந்து இதுவரை 11,138 பிளாட்டுகளை சரிபார்த்திருக்கிறோம். இவையனைத்தையும் தற்போது முதற்கட்ட ஏல நடவடிக்கைக்கு எடுத்து செல்லலாம் என்று தெரிவித்தார். இதனை அரசு தரப்பில் ஆட்சேபணை எதுவும் தெரிவிக்கவில்லை. ஏற்றுக் கொண்டனர்.
அடுத்து, இந்த வழக்கில் தொடக்கம் முதலாகவே பயணித்துவரும் எம்.ஸ்டார். ரெரா ஏஜெண்ட்ஸ் அசோசியேஷன் (MSTAR RERA AGENTS WELFARE ASSOCIATION) தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை, நீதிமன்றத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. தங்களது சங்கத்தில் 3000 உறுப்பினர்கள் இருப்பதாகவும்; அவர்களின் தரப்பாக சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரை பொருளாதாராக்குற்றப்பிரிவு போலீசார் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் எனவே, இந்த ஏல நடைமுறையில் தங்களது உறுப்பினர்களின் பெயரையும் சேர்த்துக்கொள்ளுமாறு கோரிக்கையை முன்வைத்தார்கள்.
இதற்கு, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் ரஜினி, மற்றும் லாவண்யா ஆகியோம் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதுபோல் நிறைய பேர் காத்திருக்கிறார்கள். அவர்களையும் அனுமதிக்கும் நிலை வந்தால், நீதிமன்றத்தின் நோக்கம் சிதைந்துபோகும். அடுத்து, இவர்கள் தனிநபர்களின் பெயர்களில் அல்லாமல், ஒட்டுமொத்தமாக 3000 பேருக்கும் ஒரே புகாராக எப்படி பதிவு செய்வார்கள்? நீதிமன்றம் இதனை ஏற்கக்கூடாது என்று கடும் ஆட்சேபணை தெரிவித்தனர்.

நீதியரசர் பரதசக்ரவர்த்தியும், இத்தனை நாள் எங்கே போயிருந்தீர்கள்? என்ற கேள்வியை எழுப்பினார். இதனை தொடர்ந்து, “இவர்களது இணையதளத்தில் நியோமேக்ஸ் தொடர்பான நிலங்கள் பற்றிய தரவுகளை வெளியிட அனுமதிக்கக்கூடாது. அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் மட்டுமே வெளியாக வேண்டும். இதனை உத்தரவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார், வழக்கறிஞர் லாவண்யா.
அவரது கோரிக்கையை ஏற்ற நீதியரசர் பரதசக்ரவர்த்தி, பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரின் இணையதளம் மற்றும் எம.எஸ்.டி.சி.யின் இணையதளம் ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் மட்டுமே தரவுகள் வெளியாகும் என்பதை தனது தீர்ப்பில் பதிவு செய்தார்.
மேலும், பிப்-28 ஆம் தேதி அன்று கண்டிப்பாக தமிழகம் முழுவதும் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழில்களில் விளம்பரம் வெளியாக வேண்டுமென்றும்; அதற்கு முன்னதாக, பிப்-24 ஆம் தேதி அன்று, “எந்தெந்த தேதியில் எந்தெந்த பிராஜெக்ட் ஏலம் விடப்படுகிறது என்பதையும்; அதற்கு முன்னர் குறைந்தபட்சம் பத்து நாட்களாவது ஏலம் எடுக்கும் நிலம் தொடர்பான விவரங்களை ஏலத்தில் பங்கேற்போர் சரிபார்க்கும் வகையிலும் அவகாசம் வழங்கும் வகையில் தெளிவான ஒரு ஏலத்திட்டமிடலோடு” வருமாறு உத்தரவு பிறப்பித்து வழக்கை பிப்-24 அன்று ஏலம் தொடர்பான இறுதி உத்தரவுக்காக ஒத்தி வைத்திருக்கிறார்.
– அங்குசம் புலனாய்வுக்குழு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.