நியோமேக்ஸ் நீதிமன்ற வழக்கு ! மறுபடியும் முதல்ல இருந்தா !
“மதுரையில் நான் இருந்தபோது விசாரித்து வந்த, நியோமேக்ஸ் வழக்கை விரைந்து முடிக்க ஏதுவாகத்தான் சென்னைக்கு மாற்றியிருக்கிறார்கள். தமிழகம் முழுவதிலும் பெரும்பாலோனோர் இதில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நீங்கள் இவ்வளவு அக்கறையின்றி இருக்கிறீர்களே?” என்று வழக்கை விசாரித்த நீதியரசர் பரதசக்ரவர்த்தியே கோபம் கொள்ளத்தக்க வகையில்தான் அமைந்தது, மார்ச்-02 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணை.
வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைக்குச் சென்று நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னணி நிர்வாகிகள் மற்றும் முக்கிய ஏஜெண்டுகளின் பிணையை ரத்து செய்யக்கோரியது தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் பரதசக்ரவர்த்தி முன்பாக, விசாரணையில் இருந்து வருகிறது.

மதுரையில் இருந்தபடி அவர் விசாரித்து வந்த நிலையில், நிர்வாக ரீதியான காரணங்களால் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், நியோமேக்ஸ் பிணை ரத்து தொடர்பான வழக்குகளை நீதியரசர் பரதசக்ரவர்த்தியே தொடர்ந்து விசாரிப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்பதாக, கடந்த டிச-18, 2024 அன்று உத்தரவு பிறப்பித்திருந்தார் நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ்.
இந்நிலையில், மேற்படி வழக்குகள் நீதியரசர் பரதசக்ரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வருவதற்கே ஏறத்தாழ மூன்று மாதங்கள் ஆனது. ஒருவழியாக, கடந்த மார்ச்-25 அன்று நீதியரசர் பரதசக்ரவர்த்தி முன்பாக வழக்குகள் பட்டியலிடப்பட்டது. முதல்நாள் இரவு பட்டியலிடப்பட்டு மறுநாளே வழக்கு விசாரணையில் பங்கேற்பது சாத்தியமில்லை என்றும் போதிய அவகாசம் வேண்டும் என்றும் அனைத்து தரப்பு வழக்கறிஞர்களும் கேட்டுக் கொண்டதற்கிணங்க மேற்படி வழக்கானது, ஏப்ரல்-02 அன்று ஒத்திவைக்கப்பட்டது. மேலும், அன்றைய விசாரணையின் போது இந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தார், நீதியரசர் பரதசக்ரவர்த்தி.

அதன்படி, ஏப்ரல்-02 அன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முன்னரே அவர் சொன்னதுபோல வழக்கின் தற்போதைய நிலை குறித்த அறிக்கை தாக்கல் செய்யாததற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார், நீதியரசர். இது தொடர்பாக, அரசு வழக்கறிஞர் கருணாநிதி அளித்த விளக்கத்தையும் அவர் ஏற்கவில்லை.
டிச-18 அன்றே சமர்ப்பித்திருக்க வேண்டிய அறிக்கையை, இவ்வளவுநாள் அவகாசம் இருந்தும் ஏன் சமர்ப்பிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
நாளையே மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அப்போது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் அவகாசம் கேட்டதையடுத்து, ஏப்ரல்-07 அன்று வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்திருக்கிறார்.

ஏப்ரல்-07 அன்று இந்த வழக்கின் விசாரணை அதிகாரி மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு டி.எஸ்.பி. மனிஷா, வழக்கின் தகுதிவாய்ந்த அதிகாரி மாவட்ட வருவாய் அலுவலர், அரசு தலைமை வழக்கறிஞர் ஹசன் முகம்மது ஜின்னா ஆகிய மூவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். அப்போது இந்த வழக்கின் அனைத்து விவரங்களும் கைவசம் இருக்க வேண்டும் என்ற கண்டிப்புடன் உத்தரவை பிறப்பித்திருக்கிறார், நீதியரசர் பரதசக்ரவர்த்தி.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஏப்ரல்-02 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் நடைபெற்ற விவாதங்கள் மற்றும் நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் மற்றும் புகார்தாரர்கள் பற்றிய தகவல்களில் உள்ள முரண்பாடுகள், அரசு தரப்பு வழக்கறிஞர் முரணாக தெரிவித்த புள்ளிவிவரப்பிழைகள் குறித்து அலசுகிறது, இந்த காணொளிப்பதிவு.
விரிவான காணொளியைக் காண
நியோமேக்ஸ் நீதிமன்ற வழக்கு ! மறுபடியும் முதல்ல இருந்தா !
— அங்குசம் புலனாய்வுக்குழு.