எடப்பாடிக்குச் சாதகமான தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் நிலைக்குமா ?  

“பன்னீர் அதே ஜூலை 11இல் ஏன் போட்டிப் பொதுக்குழுவைக் கூட்டவில்லை. பன்னீர் (குறைந்த எண்ணிக்கை உறுப்பினர்களை வைத்து) பொதுக்குழுவைக் கூட்டியிருந்தால்,

0

எடப்பாடிக்குச் சாதகமான தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் நிலைக்குமா ?  

கடந்த ஜூலை 11ஆம் நாள் அதிமுகவின் தலைமை நிலையச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லாது என்றும் ஜுன் 23க்கு முந்தைய நிலையே நீடிக்கும் என்றும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பொதுக்குழுவைக் கூட்டலாம் என்றும் இதில் பிரச்சனை ஏற்பட்டால், நீதிமன்றத்தை அணுகி சட்ட ஆணையரை நியமித்துக் கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கினார். இந்தத் தீர்ப்பு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்குச் சாதகமான தீர்ப்பாக அமைந்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் இருவர் அடங்கிய அமர்வுக்கு மேல்முறையீடு செய்தார். பன்னீர், எடப்பாடி – இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு 02.09.2022ஆம் நாள் காலை 10.30 மணிக்கு “ஜூலை 11ஆம் நாள் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய பொதுக்குழு செல்லும்” என்று ஒரு நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது. செய்தி ஊடகங்களில் பரபரப்பு செய்தி வெளியிடப்பட்டது. முற்பகல் 11.00 மணிக்கு எடப்பாடி தன் டூவிட்டர் கணக்கில் இடைக்காலப் பொதுச்செயலாளர் என்ற பொறுப்பைப் பதிந்துகொண்டார். எடப்பாடி தரப்பில் தமிழ்நாடு முழுவதும் இனிப்புகள் வழங்கப்பட்டன. வெடிகள் வெடித்து தொண்டர்கள் நீதிமன்றத் தீர்ப்பைக் கொண்டாடினர்.

ADMK_A
ADMK_A

- Advertisement -

ஆனால், அரசியல் அரங்கில் இந்தத் தீர்ப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தவில்லை. காரணம், யார் தோல்வியடைந்தாலும் உச்சநீதிமன்றம் செல்லப் போகிறார்கள். அங்கேதான் இறுதி தீர்ப்பு வழங்கப்படும். அதுவரையில் அதிமுகவில் நடைபெறும் இந்த நாடகத்தில் பல்வேறு இடைவேளைகள் வரும் அவ்வளவுதான். அதுமட்டுமல்ல, யார் உண்மையான அதிமுக என்பதை இந்திய தேர்தல் ஆணையம் வேறு உறுதி செய்து ஆணை பிறப்பிக்கும். தொடர்ந்து சட்டப் போராட்டத்தை பன்னீரும் எடப்பாடியும் தொடர்ந்து கொண்டிருப்பார்கள்.

2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள்தான் அதிமுக பன்னீருக்கா, எடப்பாடிக்கா என்பதை உறுதி செய்யும் என்பதால் அதிமுகவில் எடப்பாடி அணியினர்கூட வெற்றியை முழுமையாகக் கொண்டாடவில்லை என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜூலை 11 எடப்பாடி நடத்திய பொதுக்குழுவை தனிநீதிபதி ஜெயச்சந்திரன் ஒவ்வொன்றையும் நுட்பமாக ஆராய்ந்து தீர்ப்பில் வெளிப்படுத்தியிருந்தார். அவை,

  • ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு காலாவதியாகவில்லை 2026ஆம் ஆண்டு வரை உள்ளது.

  •   ஒருங்கிணைப்பாளர் கையொப்பம் இல்லாமல் இணை ஒருங்கிணைப்பாளர் பொதுக்குழுவைக் கூட்டியது சட்டப்படி செல்லத்தக்கது அல்ல.
  • 2000த்திற்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பொதுக்குழுவைக் கூட்டுவதற்கு அதிகாரம் இல்லாத அவைத்தலைவரிடம் மனு கொடுத்தது செல்லாது.
  • ஜூலை 11ஆம் நாள் பொதுக்குழு நடக்கும் என்று அவைத்தலைவர் அறிவிக்க விதிகளில் இடமில்லை. பொதுக்குழுவிற்குத் தலைமை தாங்குவது மட்டுமே அவரின் பணி.

 

  • ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பொதுக்குழுவைக் கூட்டலாம். தனியாக யாரும் கூட்டக்கூடாது. இதில் பிரச்சனை எழுந்தால் நீதிமன்றத்தை அணுகினால் ‘சட்ட ஆணையரை நியமிப்போம்’. அவர் மூலமாக பொதுக்குழுவைக் கூட்டுவது, கூட்டுத் தலைமையா? ஒற்றைத் தலைமையா? என்பதை முடிவு செய்துகொள்ளலாம்.

 

  • ஜுன் 23ஆம் தேதிக்கு முன்னர் இருந்த நிலையே நீடிக்கவேண்டும் என்பதாகும்

சென்னை உயர்நீதிமன்ற துரைசாமி, சுந்தர்மோகன் என இருவர் அடங்கிய அமர்வு தனி நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய நுட்பமான விதிமீறல்களை, சட்டத்திற்குப் புறம்பான செயல்பாடுகளைக் கணக்கில் கொள்ளவில்லை. மாறாக, எடப்பாடி மேல்முறையீட்டில் முன்வைத்த வேண்டுகோளான, “பன்னீர்செல்வத்தோடு இணைந்து செயல்பட முடியாது என்பதும், கட்சியின் செயல்பாடுகள் முடங்கிப்போயுள்ளன என்றும் தான் நடத்திய பொதுக்குழு உயர்நீதிமன்ற உத்தரவின்படிதான் நடந்தது என்பதால் அது செல்லத்தக்கது என்று அறிவிக்கவேண்டும்” என்பதை மட்டும் இருவர் அடங்கிய அமர்வு எடுத்துக் கொண்டு தீர்ப்பை வழங்கியுள்ளது என்றே எண்ணிடத் தோன்றுகின்றது. கட்சியில் உயர்அதிகாரம் படைத்தது பொதுக்குழு என்பதை பன்னீரும், எடப்பாடியும் ஒத்துக்கொள்கிறார்கள்.

எங்கே பன்னீர் வேறுபடுகிறார்கள் என்றால் பொதுச்செயலாளர் என்ற ஒற்றைத் தலைமையை முடிவு செய்யவேண்டியது ஒன்றரை கோடி அதிமுக உறுப்பினர்கள்தான். கட்சியின் விதிகளில் இடைக்கால பொதுச்செயலாளர் என்பது இல்லை என்பதில்தான். “இருவர் அடங்கிய நீதிமன்ற அமர்வு, கட்சியின் உயர்அதிகாரம் படைத்த பொதுக்குழுவை பழனிசாமி கூட்டியுள்ளார். அதில் 90% உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். அதனால் இந்தப் பொதுக்குழு செல்லும் என்ற முடிவுக்கு வந்துள்ளது” என்று குறிப்பிடும் சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து பேசிய ஓய்வுப் பெற்ற பேராசிரியர் ஒருவர், “பன்னீர் அதே ஜூலை 11இல் ஏன் போட்டிப் பொதுக்குழுவைக் கூட்டவில்லை. பன்னீர் (குறைந்த எண்ணிக்கை உறுப்பினர்களை வைத்து) பொதுக்குழுவைக் கூட்டியிருந்தால், யார் கூட்டிய பொதுக்குழு செல்லும் என்ற வழக்கு நடைபெற்றிருக்கும். அப்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற உயர்அதிகாரம் படைத்த பன்னீர் கூட்டிய பொதுக்குழு குறைந்த எண்ணிக்கை கொண்டதாக இருந்தாலும் அந்தப் பொதுக்குழுவே செல்லத்தக்கது என்ற தீர்ப்பு வந்திருக்கும். போட்டி பொதுக்குழுவைக் கூட்டாமல் பன்னீர் பின்வாங்கியதுதான், எடப்பாடி கூட்டிய பொதுக்குழு செல்லும் என்று நீதிபதிகளைச் சொல்லவைத்துள்ளது என்பதை உணரவேண்டும்” என்று குறிப்பிட்டார்.

4 bismi svs

மேலும், “பன்னீர் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்று தடை கோருவார். தடை கிடைப்பது எளிதான காரியம் அல்ல என்றாலும் தில்லி பாஜக உச்சநீதிமன்றத்திற்கு நெருக்கடி கொடுத்தால் தடை கிடைக்கும் வாய்ப்பு உண்டு. பன்னீரைத் தற்போது ஆட்டுவித்துக்கொண்டு இருப்பது பாஜக என்பது உள்ளங்கை நெல்லிக்கனியான உண்மையே. என்றாலும் எடப்பாடியை பாஜக ஒருபோதும் பகைத்துக்கொள்ளாது. 2024இல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை 25 மக்களவை தொகுதிகளில் போட்டியிடுவோம் என்று கூறுவதன் இரகசியம் இதுதான் என்பதைப் புரிந்துகொண்டால், அதிமுகவின் தற்போதைய இக்கட்டான நிலைக்கு பாஜகவே என்பது தெளிவாகிவிடும்” என்று முடித்துக் கொண்டார்.

அதிமுக என்ற அரசியல் இயக்கத்தின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு மேலாக கவனித்து வரும் பத்திரிக்கையாளர் எஸ்.பி.இலட்சுமணன் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பு குறித்து ஊடகங்களில் பேசும்போது,“தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பின் நுட்பங்களை இரு நீதிபதிகளின் அமர்வு கணக்கில் கொள்ளாமல் மேலோட்டமாகவே தீர்ப்பை வழங்கியுள்ளது. இது மேல்முறையீட்டுக்கு உகந்த தீர்ப்புதான் என்பதில் ஐயமில்லை. தனி நீதிபதி தீர்ப்புகளுக்குத் தடை வழங்கும் உச்சநீதிமன்றம் ஒன்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகளைக் கொண்ட அமர்வு வழங்கும் தீர்ப்புகளுக்குத் தடை கொடுப்பது அரிதினும் அரிது என்று சட்ட வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

தற்போது வழங்கப்பட்ட தீர்ப்பு என்பது கட்சியின் செயல்பாடுகள் முடங்கிவிடக்கூடாது என்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை ஒத்துக்கொண்டால், தனி நீதிபதி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயல்படுவதில் சிக்கல் இருக்கிறது என்று எடப்பாடி நீதிமன்றத்தை அணுகி ‘சட்ட ஆணையரை’ ஏன் அமைத்துக்கொள்ளவில்லை என்ற கேள்வியை முன்வைத்து, பன்னீர் தரப்பு தற்போதைய தீர்ப்புக்குத் தடைகோரும்போது தடை கிடைக்க வாய்ப்பு உண்டு. அப்படி தடை கிடைத்தால், தனி நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பு நடைமுறைக்கு வந்துவிடும். அதிமுகவில் தொடர்ந்து குழப்பம் நீடித்துக் கொண்டிருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பன்னீர் தரப்பு ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி, “தற்போதைய அமர்வின் தீர்ப்பு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதா? என்பதை  சிவில் சூட் வழங்கும் தீர்ப்பின் மூலம் தெரிந்துகொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் பன்னீர்செல்வம் தற்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவே தொடர்கிறார் என்ற உண்மையைப் புரிந்துகொள்ளாமல் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பன்னீர் உள்ளிட்ட பன்னீர் ஆதரவாளர்களைக் கட்சியிலிருந்து நீக்கியது செல்லும் என்று கூறுவது சிறுபிள்ளைத்தனம்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “தற்போது வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தடைக் கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வோம்.

பாஜகவின் ஆசியோடுதான் தடை கிடைக்கும் என்று பலரும் ஆரூடம் சொல்கிறார்கள். அது உண்மை அல்ல. தடை கிடைப்பதற்கு நிறைய அடிப்படை முகாந்தரங்கள் உள்ளன. அதன் அடிப்படையில் தடை பெறுவோம். புரட்சித்தலைவர் உருவாக்கிய இந்த இயக்கத்தை புரட்சித் தலைவி அம்மா கட்டிக்காத்த இந்த இயக்கத்தைச் சுயநலமிக்க எடப்பாடியிடமிருந்து காப்பாற்றுவோம்” என்று ஊடகங்களில் குறிப்பிட்டார்.

அதிமுக என்ற கட்சியில் அதிகாரம் என்ற ரங்கராட்டினம் தற்போது சுற்றிக் கொண்டிருக்கிறது. மேலே இருப்பவர் கீழே வருகிறார். கீழே இருப்பவர் மேலே போகிறார் என்ற நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு மட்டுமே முற்றுப்புள்ளி வைக்கமுடியும். அதுவரை அதிமுகவில் குழப்பங்கள் தொடர்வது தொடர்கதையாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை காத்திருப்போம்.

-ஆதவன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.