*‘பரமசிவன் பாத்திமா’ மதவாத படமா?*
லட்சுமி கிரியேசன்ஸ் பேனரில் சேரன் நடித்த ‘தமிழ்க்குடிமகன்’ படத்தையடுத்து இசக்கி கார்வண்ணன், தயாரித்து இயக்கி இருக்கும் படம் ‘பரமசிவன் பாத்திமா’. இதில் விமல் நாயகனாக நடிக்க, அவருடன் சாயாதேவி, எம். எஸ். பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீ ரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், சேஷ்விதா ராஜு, கூல் சுரேஷ், காதல் சுகுமார், வீரசமர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
வரும் ஜூன் 06-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதையொட்டி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மே.26- ஆம் தேதி இரவு நடந்தது. நிகழ்ச்சியில் பேசிய சிலர்….
*பாடலாசிரியர் ஏகாதசி*
“இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள். ஐந்தையும் நான் தான் எழுதியுள்ளேன். ஐந்து பாடல்களும் வெவ்வேறு வகையிலானவை. இப்படத்தின் குழுவினர் மிகவும் நேர்மையுடன் கடினமாக உழைத்துள்ளனர். பாடல்கள் சிறப்பாக வர வேண்டும் என இசையமைப்பாளர் தீபன் சக்கரவர்த்தியும் இயக்குநர் இசக்கி கார்வண்ணனும் தனிக்கவனம் செலுத்தினர். இந்தப் படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சி”.
*ஒளிப்பதிவாளர் சுகுமார்*
“இப்படத்தில் எனக்கு நடிக்கவும் வாய்ப்பு கொடுத்த இயக்குநர் இசக்கி கார்வண்ணனுக்கு நன்றி. இப் படத்திற்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் கோருகிறேன்”.
*இசையமைப்பாளர் தீபன் சக்கரவர்த்தி*
“இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் என்னை விட சீனியர்கள். அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். பாடலாசிரியர் ஏகாதசி சொன்னது போல இந்த படத்தில் உள்ள ஐந்து பாடல்களும் வெவ்வேறு வகையிலானவை. அனைத்துப் பாடல்களும் மிகவும் சிறப்பாக வந்துள்ளன. இயக்குநர் இசக்கி கார்வண்ணன் மிகவும் தெளிவாக அவருக்கு தேவையான பாடல்களை வாங்கி விடுவார். இந்த மேடையில் நான் பேச காரணமான எனது தாயாருக்கும், வாய்ப்பளித்த இயக்குநருக்கும், இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் மிக்க நன்றி”.
இயக்குநரும் எழுத்தாளருமான *சுகா*,
“இயக்குநர் இசக்கி கார்வண்ணன் எங்கள் நண்பர்கள் குழுவில் ஒருவர். அவரது ஊரில் அவர் பார்த்த சம்பவங்களை கதையாக்கி படமாக்கி இருக்கிறார். அதற்காக அவருக்கு வாழ்த்துகள். இப்படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்”.
தயாரிப்பாளர் *பிஎல் தேனப்பன்* “இயக்குநர் இசக்கி கார்வண்ணன் சினிமாவை காதலிப்பவர். ஒரு வலுவான கதையுடன் தற்போது ‘பரமசிவன் பாத்திமா’ மூலம் வந்துள்ளார். நாயகன் விமலுக்கு வாழ்த்துகள். நடிகராக அறிமுகமாகும் ஒளிப்பதிவாளர் சுகுமாருக்கும் வாழ்த்துகள். படம் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்”.

*நாயகி சாயாதேவி*
“இயக்குநர் இசக்கி கார்வண்ணனுடனும் நடிகர் விமலுடனும் பணியாற்றியது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள். இந்த விழாவின் நாயகனான இசையமைப்பாளர் தீபன் சக்ரவர்த்திக்கு வாழ்த்துகள்”.
*இயக்குநர் பிரசாத் முருகேசன்*
“இயக்குநர் இசக்கி கார்வண்ணன் சினிமா மீது காதல் கொண்டவர். இப்படம் வெற்றியடைய அவருக்கும் அவரது குழுவினருக்கும் வாழ்த்துகிறேன்”.
*இயக்குநர் மனோஜ் குமார்*
“இசக்கி கார்வண்ணன் ஒவ்வொன்றையும் திட்டமிட்டு செய்பவர். ஒரு குடும்பம் போல் குழுவினரை வழி நடத்தி செல்வார். இப்படத்தை மிகவும் சிறப்பாக உருவாக்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் சுகுமார் பிரமாதமாக தனது பணியை செய்துள்ளார். விமலுக்கு இது ஒரு மைல்கல் படமாக அமையும். இப்படத்தின் வெற்றி விழாவில் மீண்டும் சந்திப்போம்”.
*எம்.எஸ். பாஸ்கர்*
“புரட்சிகரமான ஃபாதர் பாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளேன். படக்குழுவினரும் படப்பிடிப்பு நடந்த ஊர் மக்களும் உறவினர் போல பழகினோம். இப்படத்தை வெற்றி படமாக்க வேண்டும்”.
*நாயகன் விமல்*,
“இயக்குநர் இசக்கி கார்வண்ணன், ஒளிப்பதிவாளர் சுகுமார், இசையமைப்பாளர் தீபன் சக்ரவர்த்தி, ஹீரோயின் சாயா தேவி, எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இப்படம் வெற்றியடைய உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை”.
தயாரிப்பாளர்& இயக்குநர் *இசக்கி கார்வண்ணன்*
“இது நம்ம வாழ்வியல் சம்பந்தப்பட்ட கதை. என்னைச் சுற்றி வாழ்ந்த மக்களின் கதை. இது மதவாத படமல்ல, மனிதம் பேசும் படம். இசையமைப்பாளர் தீபன் சக்ரவர்த்தியும், பாடலாசிரியர் ஏகாதசியும் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கி யுள்ளார்கள். ஒளிப்பதிவாளர் சுகுமார் மிகவும் திறமை வாய்ந்த கலைஞர். இப்படம் அதற்கு மற்றுமொரு சான்று. விமல் ஒரு கடின உழைப்பாளி. சாயா தேவியும் சுகுமாரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். எம் எஸ் பாஸ்கர் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். எடிட்டர் புவன் படத்தொகுப்பு அருமை. இப்படி அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர் “.
*நாதக சீமான்*
“இப்படத்தில் நடித்துள்ள விமல் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். மொழிப்பற்றும் இனப்பற்றும் தான் என்னையும் இயக்குநர் இசக்கி கார்வண்ணனையும் இணைக்கிறது. இந்த ‘பரமசிவன் பாத்திமா’ படம் சிறப்பாக உருவாகியுள்ளது. மிகவும் முக்கியமான ஒரு பிரச்சனையை துணிச்சலாக கையாண்டுள்ளார் இசக்கி . அவரது போர்க்குணம் தான் இந்தக் கதையை படமாக எடுக்க காரணம். அவருக்கும் அவரது குழுவினருக்கும் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்”.
— மதுரை மாறன்.