(மாம்)பழம் நழுவிப் பா(ல்)ஜகவில் விழுந்தது எப்படி? பரபரப்பு தகவல்

கூட்டணி இல்லையென்றால் வழக்குப் பதிவு செய்யப்படும்............மிரட்டிய பா.ஜ.க. அதிர்ந்த பா.ம.க

0

பாஜக – பாமக கூட்டணி உடன்பாடு

(மாம்)பழம் நழுவிப் பா(ல்)ஜகவில் விழுந்தது எப்படி? பரபரப்பு தகவல்

ரோஸ்மில்

தமிழ்நாடு மக்களவை தேர்தல் கூட்டணி அமைக்கும் முயற்சியில் பாஜகவும் அதிமுகவும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. பாமகவோடு கூட்டணி அமைக்க முதலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.அண்ணாமலை திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசுவைச் சந்தித்துக் கூட்டணி குறித்துப் பேசினார். பாமக சார்பில் 8 மக்களவைத் தொகுதியும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் அதிமுகவிடம் கோரப்பட்டது. இது குறித்து அதிமுக – பாமக இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. அதே நேரத்தில் பாஜகவோடும் கூட்டணி குறித்தும் பேசி வந்தது. இதைப் பாமகவின் ஊடகவியல் பேச்சாளர்கள் உறுதி செய்தனர். ஒரு கட்டத்தில் அதிமுக “நாங்கள் பாமகவோடு கூட்டணி பேசுவதை நிறுத்திக் கொண்டோம்” என்று அறிவித்தனர்.

பாமக நிறுவனர் இராமதாசு அதிமுகவோடு கூட்டணி அமைக்கவேண்டும் என்று விரும்பினார். பாமக தலைவர் அன்புமணி இராமதாசு பாஜகவோடு கூட்டணி சேரவேண்டும் என்று விரும்பினார். இதனால் கட்சி நிர்வாகிகள் இடையே குழப்பம் நிலவி வந்தது. தொடர்ச்சியாக யாரும் கூட்டணி குறித்து எந்தக் கருத்தும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டணி யாரோடு என்பதை உறுதி செய்யத் தைலாபுரத்தில் 18.03.2024ஆம் நாள் பாமகவின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்று வந்தது. பொதுக்குழுவில் பேசிய மருத்துவர் இராமதாசு,“நான் சந்திக்கும் கடைசி தேர்தலாக இருக்கும் என்று எண்ணுகிறேன். உடல் நலம் இடம் கொடுக்காது என்று எண்ணுகிறேன். இந்தத் தேர்தலில் பாமக சார்பில் 4 வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டும் என்று விரும்பியே அதிமுகவோடு கூட்டணி அமைய வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று தழுதழுக்கப் பேசினார்.

- Advertisement -

- Advertisement -

தொடர்ந்து பேசிய தலைவர் அன்புமணி,“பாமக கட்சியின் நிறுவனர் மற்றும் அல்ல, எனக்குத் தந்தையும்கூட, உங்களின் எண்ணத்தை எதிர்க்கவேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை. நீங்கள் இன்னும் 100 ஆண்டுகள் வாழவேண்டும். உங்கள் எண்ணப்படி அதிமுகவோடு கூட்டணி என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்” என்று கண்ணீர் வழியப் பேசினார்.

 

4 bismi svs

கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது, டெல்லியிலிருந்து வீடியோ காலில் அலைபேசியில் அழைப்பு வந்தது. டெல்லியிலிருந்து பேசிய மோடிக்கு நெருக்கமான ஒன்றிய அமைச்சர்,“டாக்டர் இராமதாசுவிடம் பேச விரும்புகிறோம்” என்று கூறப்பட்டது. பின்னர் வீடியோ காலில் டாக்டர் இராமதாசு பேசினார். அப்போது டெல்லியிலிருந்து பேசியவர்,“பாஜக உங்களோடு கூட்டணி அமைத்துக்கொள்ள விரும்புகிறோம். மோடிஜி உங்களிடம் பேசப் பணித்துள்ளார்” என்றவுடன் மருத்துவர் இராமதாசு “நாங்கள் அதிமுகவோடு கூட்டணி என்று முடிவு செய்துள்ளோம்” என்றவுடன், டெல்லியிலிருந்து,“உங்கள் மகன் அன்புமணி 2004-09 ஆண்டுகளில் ஒன்றியத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது மருத்துவக் கல்லூரிகளுக்கு விதிகளை மீறிச் சலுகை காட்டினார் என்பதற்கான சி.பி.ஐ. விசாரணையின் தொடர்ச்சியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது அப்படியே இருக்கிறது. கூட்டணி இல்லையென்றால் வழக்குப் பதிவு செய்யப்படும்” என்பதைக் கேட்ட மருத்துவர் இராமதாசு அதிர்ந்து,“பாஜக கூட்டணிக்கு ஒத்துக்கொள்கிறோம்” என்று வீடியோ காலில் கூறி முடித்தார்.

மீண்டும் பொதுக்குழுக் கூட்டத்திற்கு வந்த மருத்துவர் இராமதாசு,“இந்திய நாட்டின் நலன் கருதியும், மோடியின் நல்லாட்சி தொடரவும் பாமக, பாஜகவோடு கூட்டணி அமைக்கிறது” என்ற அறிவிப்பை வெளியிட்டார். இரவு சுமார் 7.45 மணியளவில் பொதுக்குழுக் கூட்டத்திலிருந்து வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன்,“பாஜக – பாமக கூட்டணி என்பது பொதுக்குழுவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான உடன்பாடு  19.03.24 காலை 6.00 மணிக்குப் பாமக நிறுவனர் மருத்துவர் ஐயாவோடு நடைபெறும்” என்று அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, காலை 6.00 மணிக்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் தைலாபுரத்திற்குச் சென்று மருத்துவர் இராமதாசோடு கூட்டணியை உறுதி செய்து உடன்பாடுகளில் கையெழுத்திடப்பட்டது. உடன்பாட்டில்,“2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், பாமக 10 தொகுதிகளில் போட்டியிடுவது என்றும், 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக – பாமக கூட்டணி தொடரும் என்றும், பாஜகவுக்கு முதல் அமைச்சர் பதவியும், பாமக அன்புமணிக்குத் துணை முதல் அமைச்சர் பதவியும் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து சேலத்தில் நடைபெற்ற பாஜக மாநாட்டில் மருத்துவர் இராமதாசு மற்றும் அன்புமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பின்வரும் 10 தொகுதிகளைப் பாஜகவிடம் பாமக கோரியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1. மத்தியச் சென்னை, 2. அரக்கோணம், 3. ஸ்ரீபெரும்புதூர், 4. சேலம், 5. தர்மபுரி, 6. கிருஷ்ணகிரி, 7. விழுப்புரம்(தனி), 8. சிதம்பரம்(தனி), 9. கடலூர் 10. கள்ளக்குறிச்சி என்பதாகும்.

பாமக தொண்டர்கள் பாஜகவோடு ஏற்படுத்திக்கொண்டுள்ள கூட்டணியை ஏற்றுக்கொள்ளவில்லை என்று சமூக ஊடகங்களில் பதிவுகள் இடப்பட்டு வருகின்றன. அதிமுக பாமக இப்படிக் கூட்டணி பேசிவிட்டு வெளியேறும் என்று எதிர்பார்க்கவில்லை. பாமக அதிமுகவோடு கூட்டணி அமைத்திருந்தால் ஒன்றிரண்டு தொகுதிகளை வெல்ல வாய்ப்புள்ளது. பாஜகவோடு இணைந்து போட்டியிடுவது கள எதார்த்தமாக இல்லை என்றே அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தேர்தலில் மக்கள் எடுக்கும் முடிவு என்ன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆதவன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.