கவிஞர் தமிழ்ஒளி மீது தீராத காதல் கொண்ட தமிழ் உணர்வாளர்களின் சங்கமம் !

பாவேந்தர் பாரதிதாசனார் மரபில் வளர்ந்த கவிஞர்களுள் முதன்மையானவராகத்  திகழ்பவர் கவிஞர் தமிழ்ஒளி ...

0

கவிஞர் தமிழ்ஒளி மீது தீராத காதல் கொண்ட தமிழ் உணர்வாளர்களின் சங்கமம் !

விஞர் தமிழ்ஒளி அவர்களின் 60-ஆவது நினைவுநாளில் தஞ்சாவூர் தமிழ்ச் சொந்தங்கள் இணைந்து கவிஞர் தமிழ்ஒளி திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தஞ்சாவூரில் அமைந்துள்ளத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மொழிப்புல அவையத்தில் கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் மார்பளவுச்  சிலையை தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை நிறுவி உள்ளது.

புதுச்சேரி சாமிப்பிள்ளைத் தோட்டத்தை பூர்வீகமாகக் கொண்டு, தமிழ்நாடு மாநிலத்தில் குறிஞ்சிப்பாடி அடுத்த ஆடுர் எனும் கிராமத்தில் பிறந்து, தமிழை முறைப்படிப் படிக்கும் ஆர்வம் கொண்டு தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்த விசயரங்கன் அவர்கள்  “தமிழ்ஒளி’ யாக  பரிணமித்து தமிழுலகம் போற்றும் மகத்தான கவிஞராக திகழ்ந்தார்.

- Advertisement -

பாவேந்தர் பாரதிதாசனார் மரபில் வளர்ந்த கவிஞர்களுள் முதன்மையானவராகத்  திகழ்பவர் கவிஞர் தமிழ்ஒளி என்று சமகால அறிஞர்களால் விழிக்கப்பட்டு மாபெரும் தமிழ் இலக்கிய ஆளுமையாக திகழ்ந்த கவிஞர் தமிழ்ஒளி நாற்பதாண்டுகள் மட்டுமே இவ்வுலகில் வாழ்ந்தார்.‌

இந்திய விடுதலைப் போராட்டத்தில் இளைஞர்களை ஈர்த்த மாவீரன் பகத்சிங் தனது மரணத்திற்கு சில நாட்களுக்கு முன் தனது இயக்கத் தோழர்களுக்கு அரசியல் இலக்கைக் காட்ட எழுதிய கடிதத்தைப் போன்றே கவிஞர் தமிழ்ஒளி தனது நண்பர் பாவலர் பாலசுந்தரம் அவர்களுக்கு எழுதியக் கடிதத்தில் தமிழ் அறிஞர்களாக திகழும் இளைஞர்களுக்கான  அரசியல்  இலக்கைக் காட்டினார்.

நண்பர் பாலுவிற்கு எழுதப்பட்ட கடிதம் கவிஞர் தமிழ்ஒளியின் அரசியல் – சமுதாயத் தத்துவத்தை உணர்த்தும்.

கரந்தை வந்து தமிழை முழுமையாகக் கற்றுணர முற்பட்ட  கவிஞர் தமிழ்ஒளி மறைந்த 60வது நினைவு நாளில் கரந்தை தமிழ்ச் சொந்தங்கள், தஞ்சாவூர் தமிழ் உறவுகள் ஒன்றுகூடி 29.03.2024 அன்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள கவிஞர் தமிழ்ஒளி திருவுருவச் சிலைக்கு மலர்தூவி சிறப்புடன்  புகழஞ்சலி செலுத்தியது நெஞ்சத்தை நெகிழ வைத்தது.

துணை வேந்தர் மாலை அணிவிக்கிறார் உடன் பேராசிரியர் சீமான் இளையராஜா.

29.03.2024 அன்று காலை 9 மணிக்கு தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமை துணை வேந்தர் பேராசிரியர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார்.

அவரைத் தொடர்ந்து பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், முதுகலைப் பட்டப் படிப்பு மாணவர்கள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழவேள் உமா மகேசுவரனார் கரந்தை கலைக் கல்லூரியின் முதல்வரும், நாவலர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் திருவருட் கல்லூரி நிறுவனரும், சென்னை பல்கலைக்கழகத்தின் இலட்சினையில் ‘கற்றனைத்தூறும் அறிவும் ஆற்றலும்’ என்ற தமிழ்த்தொடரை இடம்பெறச் செய்தவருமான தமிழறிஞர் பி. விருத்தாசலனாரின் புதல்வர் பேராசிரியர் முனைவர் வி. பாரி அவர்கள், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் பேராசிரியரும் பல்வேறு ஆய்வு நூல்களை வெளியிட்டவருமான தமிழாய்வறிஞர் முனைவர் உ. பிரபாகரன் அவர்கள், பகுத்தறிவாளர் கழகத்தின் திருமிகு கோபு பழனிவேல் உள்ளிட்ட அமைப்பின் தலைவர் மற்றும் நிர்வாகிகள், இலக்கிய ஆர்வலரும் தஞ்சைத் தமிழ் அமைப்புகளுக்குப் புரவலராகத் திகழும் திரு. இராம. சந்திரசேகரன் அவர்கள், வலங்கைமான் விடையல் கருப்பூர் திரு. ப. தியாகராசன் அவர்கள், கவிஞர் வல்லம் தாஜ்பால் அவர்கள், விவசாயிகள் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான பொதுவுடமை இயக்கத் தோழர் பி. செந்தில்குமார் அவர்கள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில தலைவர்களில் ஒருவரான எழுத்தாளர் களபிரன் அவர்கள், தமுஎகச மாவட்டச் செயலாளர் எழுத்தாளர் ஆர். விஜயகுமார் அவர்கள், பொருளாளர் எழுத்தாளர் பி. சத்தியநாதன் உள்ளிட்ட  பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கலைப்புல முதன்மையர் பேராசிரியர் முனைவர் பெ. இளையாப்பிள்ளை அவர்கள் முன்னின்று நினைவுநாள் நிகழ்வை வழிநடத்தினார். மக்கள் தொடர்பு அலுவலர் பேராசிரியர் முனைவர் முருகன் அவர்கள் நிகழ்வு சிறப்புடன் நடக்க பெரும் உதவியாக இருந்தார். நாட்டுப்புறவியல் பேராசிரியர் முனைவர் சீமான் இளையராஜா அவர்கள் நினைவுநாள் நிகழ்வினை சிறப்புடன் ஒருங்கிணைத்தார்.

4 bismi svs

கவிஞர் தமிழ்ஒளி நினைவுநாள் கருத்தரங்கம்:

29.03.3024 அரசு விடுமுறை நாள் என்பதால் அதற்கு முன்னாள் (28.03.2024) கவிஞர் தமிழ்ஒளி 60-வது நினைவுநாள் கருத்தரங்கை சிறப்புடன் ஒருங்கிணைத்து நடத்தினார் நாட்டுப்புறவியல் பேராசிரியர் முனைவர் சீமான் இளையராஜா அவர்கள்.

தேர்தல் நேரத்தில் உள்ள வழிகாட்டுதலை முறைப்படி பின்பற்றி மிகவும் கவனத்துடன் கருத்தரங்கைச் சிறப்புடன் நடத்திய பேராசிரியர் முனைவர் சீமான் இளையராஜா அவர்கள் பெரும் பாராட்டிற்குரியவர்.

தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமை துணை வேந்தர் பேரசிரியர் வி. திருவள்ளுவன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கவிஞர் தமிழ்ஒளி 60வது நினைவுநாள் கருத்தரங்கில் மதிப்புயர் பதிவாளர் சி. தியாகராஜன்‌ அவர்கள்,  மொழிப்புலத்தலைவர் பேராசிரியர் ச.கவிதா அவர்கள் முன்னிலை வகித்தனர். நாட்டுப்புறவியல் தலைவர் பேராசிரியர் இரா. காமராசு அவர்கள் சிறப்புரை ஆற்றினார். கருத்தரங்க ஒருங்கினைப்பாளர் பேராசிரியர் முனைவர் சீ. இளையராஜா அவர்கள் வரவேற்புரையும், முனைவர் மா. இரமேஷ்குமார் அவர்கள் நன்றியுரையும் வழங்கினர்.

கவிஞர் தமிழ்ஒளி 60வது நினைவுநாள் நிகழ்வுகள் சிறப்புடன் நடைபெற அனைத்து வகையிலும் பெரும் பங்காற்றிய தமிழ் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணை வேந்தர், மதிப்புயர் பதிவாளர், மக்கள் தொடர்பு அலுவலர், புல முதன்மையர், துறைத் தலைவர், பேராசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட தமிழ்ப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த அனைவருக்கும் தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள் சார்பாக வாழ்த்துகளையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கவிஞர் தமிழ்ஒளி மீது தீராத காதல் கொண்ட தமிழ் உணர்வாளர்களின் சங்கமமாக கவிஞர் தமிழ்ஒளி நினைவு நாள் கூடுகை அமைந்தது மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தந்தது.

“புதுமை கண்டு வாழ இன்று

போர் செயுந் தமிழ்நாடு – மறப்

போர் செயுந் தமிழ்நாடு – மிக

முதுமை கொண்ட மடமை வீழ

மோதிடும் தமிழ்நாடு”

என்று தமிழ்நாட்டின் பெருமையைப் பறைசாற்றிய கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் 60-வது நினைவுநாள் மடமையை வீழ்த்தி சமத்துவம் மலரச் செய்ய பெரும் ஊக்கத்தை அளித்தது.

தஞ்சாவூர் கூடுகைத் தந்த மகிழ்ச்சியான நினைவுகளுடன்,

பிரின்ஸ் கஜேந்திர பாபு
பிரின்ஸ் கஜேந்திர பாபு

பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு,
பொதுச் செயலாளர்,
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.