சங்பரிவார் அமைப்பை கண்டிக்கும் அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் சங்கம்!
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஜூலை 2-ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
இதற்காக கடந்த 16-ம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு, கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், கோயில் உதவி அர்ச்சகர் கோமதி விநாயகம் (30), கும்பாபிஷேக பணிக்கு வந்துள்ள வினோத், கணேசன் ஆகியோர் அர்ச்சகர்களுடன் சேர்ந்து வீட்டில் ஆடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது.
பெரிய மாரியம்மன் கோயில் வளாகத்தில் வைத்து அர்ச்சகர்கள் மது அருந்துவதாகவும், அர்ச்சகர் கோமதி விநாயகம் அவருடைய வீட்டில் மது அருந்து ஆபாசமாக ஆட்டம் போட்டார்கள். கோயிலுக்கு வரும் சில பெண்களிடம் திருநீரை மொத்தமாக அவர்களது மூகத்தில் அள்ளிப் போடுவது எனவும் அத்துமீறி நடந்து கொள்வது என வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பக்தர்கள் மத்தியில் முகம் சுளிக்கும் வகையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து பெரிய மாரியம்மன் கோவில் அர்ச்சகர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேற்கண்ட அர்ச்சகர்களின் செயல் கடும் கண்டனம் மற்றும் நடவடிக்கைக்குரியது . ஆனால், இப்பிரச்சனையை மடைமாற்றும் விதமாக, இந்து முன்னணி, பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்பைச் சார்ந்தவர்கள் சமூக வளைதளங்களில், குற்றம் செய்த அர்ச்சகர்கள், அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தில், திமுக அரசால் நியமிக்கப்பட்டவர்கள் என்ற அப்பட்டமான பொய்யை திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர்.
உண்மையில், சம்மந்தப்பட்ட அர்ச்சகர்கள், ஆர் எஸ் எஸ் – பா ஜ க – இந்து முன்னணி வலியுறுத்தும், பாரம்பரிய வழக்கப்படி, நியமிக்கப்பட்ட பிராமணர்கள். மூவரும், அரசு அர்ச்சகர் பள்ளியில் படிக்கவில்லை. பிராமணர்கள் நடத்தும் அர்ச்சகர் பள்ளியில் படித்தவர்கள்.
உண்மை இவ்வாறிருக்க, அனைத்து சாதி இந்துக்களும் அர்ச்சகர் ஆகக் கூடாதெனப் பிரச்சாரம் செய்யும், இந்து முன்னணியினர், பொய் செய்தியைப் பரப்பி வருகின்றனர்.
முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல் பேச கூடாதென உத்தரவு பெற்றது அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம்-தமிழ்நாடு .இதனாலும், அனைத்து சாதி அர்ச்சக மாணவர்களை இழிவுபடுத்த பொய்யைப் பரப்புகின்றனர்.
இந்து மதத்தைக் காக்கப் பேசும், இந்து முன்னணி, காஞ்சி மட சங்கராச்சாரியார் மீது எழுத்தாளர் அனுராதா ரமணன் பாலியல் புகார் கொடுத்தபோது, கொலை வழக்கில் சங்கராச்சாரியார் கைதானபோது எங்கே போனார்கள்? ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தில், சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் நட்சத்திர விடுதியாக மாற்றினார்கள், காஞ்சிபுரத்தில் கருவறையில் தேவநாதன் செய்த பாலியல் லீலை, கோயில் உண்டியலில் திருடும் பார்ப்பன அர்ச்சர்கள், குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமை, மர்ம மரணங்கள், ரகசிய தகன மேடைக்கு கேள்வி எழுப்பினார்களா? எனவே, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் மீது திராவிட அரசின் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தும் சங்பரிவார் அமைப்புகளை வன்மையாக கண்டிக்கிறோம்.
பொய் செய்திகளை சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் இவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவா்கள் சங்க தலைவர் வா.ரங்கநாதன் கேட்டுக்கொண்டுள்ளர்.
தமிழக மக்களே!
அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்குவோம்!
ஆலயத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம்!
இந்து சமய அறநிலைத்துறைக்கு அரணாக நிற்போம்!
ஆரியத்திற்கு எதிராக போர் செய்வோம்!