கடமை தவறாத கொள்கைப் பேனா !
வெற்றியிலும் தோல்வியிலும் மனதை சமநிலையில் வைத்திருப்பது அத்தனை எளிதல்ல. ஆனால், அத்தகைய மனநிலையைப் பெற்றவர்களே எந்தத் தருணத்திலும் தன் வலிமையை இழக்காதவர்களாக இருப்பார்கள். 1962 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வினர் 50 பேர் வெற்றி பெற்று சட்டமன்றம் சென்ற நிலையில், கட்சியின் நிறுவனரான பேரறிஞர் அண்ணா அவருடைய காஞ்சிபுரம் தொகுதியில் வெற்றிவாய்ப்பை இழந்தார். அந்த நிலையில் அவருடைய மனநிலை எப்படி இருந்தது, அதை எப்படி சமநிலைக்கு கொண்டு வந்தார் என்பதை திராவிட நாடு இதழில் அவர் எழுதிய ‘அறுவடையும் அணிவகுப்பும்’ என்ற கடிதத்தில் காண முடியும்.
ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டு, அந்தப் பழியைத் தூக்கி தி.மு.க .மீது அபாண்டமாக போடப்பட்ட 1991 தேர்தல் களத்தில், வெற்றிக்கான வாய்ப்பே இல்லை என்ற நிலையிலும் கலைஞர் சோர்ந்துவிடவில்லை. ஊர் ஊராக பரப்புரைப் பயணம் மேற்கொண்டு, தி.மு.க என்கிற வெளிப்படைத் தன்மை கொண்ட ஜனநாயக இயக்கம் தேர்தல் களத்தில்தான் அரசியல் எதிரிகளுடன் மோதுமே தவிர, ஒரு போதும் இப்படிப்பட்ட கொலை பாதக செயலில் ஈடுபடாது” என்பதை விளக்கினார்.
அண்ணாவும் கலைஞரும் அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, பத்திரிகையாளர்கள். மக்களின் மனநிலை, களநிலவரம், பலம்-பலவீனம் எல்லாவற்றையும் அறிந்துகொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள். வெற்றி-தோல்வியைக் கடந்த சமநிலை மனது அவர்களுக்கு உண்டு. அரசியல் இயக்கங்களை சார்ந்த பத்திரிகையாளர்களுக்கு இந்த மனநிலை மிகவும் முக்கியமானது.
அண்ணாவை அறிந்தவரும் கலைஞரால் வளர்க்கப்பட்டவருமான முரசொலி செல்வம் சாரிடம் மனதின் சமநிலையை நேரில் பார்த்திருக்கிறேன். 1991 ஜனவரியில் தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்ட இரவில், கலைஞரும் மாறனும் முரசொலி அலுவலகத்திற்கு வர இயலாத நிலையில், முரசொலி செல்வம்தான், ஆட்சிக்கலைப்பின் பின்னணியில் நடந்த அரசியல் சதிகளைத் தொகுத்து எழுதி, ஜனநாயகப் படுகொலை என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டார்.
அதே ஆண்டு மே மாதத்தில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட இரவில், முரசொலி அலுவலகம் சூறையாடப்பட்டு, தீவைத்து எரிக்கப்பட்ட நிலையிலும், மறுநாள் காலையில் முரசொலி இதழ் உடன்பிறப்புகளின் கைகளில் போய்ச் சேர்ந்தது. செல்வம் சார்தான் அத்தனை பணிகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து, வெற்றிகரமாக முடித்தார்.
1991 தேர்தலில் தி.மு.க ஒரேயொரு எம்.எல்.ஏ.வைப் பெற்ற நிலையில், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி இல்லாத நிலையில், அந்தப் பணியை செய்தது முரசொலிதான். அதற்காக முரசொலி செல்வம் மீது உரிமை மீறல் பிரச்சினையைக் கொண்டு வந்து அவரை சட்டமன்றத்தில் கூண்டில் ஏற்றி விசாரித்தது ஜெயலலிதா அரசு. இந்திய ஜனநாயகத்தில் சட்டமன்றத்தில் விசாரணைக் கூண்டு கொண்டு வரப்பட்ட அவலம் அப்போதுதான் நிகழ்ந்தது. கூண்டிலேறிய செல்வம், ஒரு பத்திரிகையாளராக தன்னுடைய பணியை செய்ததை துணிவுடன் பதிவு செய்தார்.
அ.தி.மு.க.வினரும் பிற எதிர்க்கட்சிகளும் உருட்டுகின்ற சர்க்காரியா கமிஷன் என்பது என்ன, அதன் விசாரணை எப்படி நடைபெற்றது, அதில் எம்.ஜி.ஆர். அடித்த பல்டி எப்படிப்பட்டது, கமிஷன் விசரணையில் எங்குமே குறிப்பிடப்படாத ‘விஞ்ஞான ஊழல்‘ என்ற வார்த்தையை அரசியல் மனப்பிறழ்வாளர்கள் தொடர்ந்து பயன்படுத்தும் அயோக்கியத்தனம் அனைத்தையும் விளக்கி ஒரு புத்தகமாக எழுதியவர் முரசொலி செல்வம்.
அவருடைய எழுத்தில் உருவான மற்றொரு புத்தகமான, ‘முரசொலி-சில நினைவுகள்‘ அரை நூற்றாண்டுகால அரசியல் வரலாற்றையும் அதில் முரசொலி எதிர்கொண்ட சவால்களையும் விளக்கும் வரலாற்று ஆவணம்.
‘சிலந்தி’ என்ற பெயரில் முரசொலியில் வெளியான ஆணித்தரமான கட்டுரைகளை எழுதியவர் முரசொலி செல்வம்தான் என்பதை தி.மு.க நிர்வாகிகள் பலரே அவரது இறப்புக்குப் பிறகுதான் அறிந்து கொண்டனர்.
தன்னை முன்னிலைப்படுத்தி விளம்பரப்படுத்திக் கொள்வதில் முனைப்பு காட்டாமல், இயக்கத்தின் வலிமைக்குத் துணை நிற்பதே இயக்கப் பத்திரிகையாளரின் கடமை. அந்தக் கடமை தவறாத கொள்கை வீரர் முரசொலி செல்வம்.
(அக்டோபர் 10- முரசொலி செல்வம் நினைவு நாள்)
— கோவி லெனின், மூத்த பத்திரிகையாளர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.