
பண மோசடி புகார்களுக்குள்ளான அறக்கட்டளை நடத்திய புத்தக வெளியீட்டு விழாவில் பிரபல ரெளடியுடன் ஒன்றாக பங்கேற்ற நடிகை நமீதா.
பண மோசடி புகார்களுக்குள்ளான அறக்கட்டளை நடத்திய புத்தக வெளியீட்டு விழாவில் பிரபல ரெளடியுடன் ஒன்றாக பங்கேற்ற நடிகை நமீதா.
அறக்கட்டளை + நடிகை நமீதா + பிரபல ரெளடி தொடர்புகள் குறித்து தீவிர விசாரணையில் உளவுத்துறை.
புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலையில் செயல்பட்டு வரும் சவரிமுத்து அருள்தாஸ் அறக்கட்டளையின்; நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன் என்பவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புத்தக வெளியிட்டு விழா திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுபட்டியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

தப்பாட்டம், பேண்டு வாத்தியம், குதிரை நடனம் என கண்கவர் நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை சார்பில் மணப்பாறை போலீசாரின் பாதுகாப்பு கேட்கப்பட்டிருந்தது.
ஆனால், போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட நடிகை நமீதா உள்பட சின்னத்திரை நட்சத்திரங்களும், திருச்சியை சேர்ந்த பிரபல ரெளடி பட்டறை சுரேஷ் உள்பட சினிமா நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை நடத்திய அறக்கட்டளை பொதுமக்களிடம் ஒரு லட்சம் கொடுத்தால் அதை ஒரு கோடியாக திருப்பி வழங்கப்படும் என்று கூறி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நூற்றுக்கணக்கான மக்களிடம் பல கோடி ரூபாய் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த புகாரின் பேரில் தனியார் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்ட சம்பவமும் நடந்தது.

இருப்பினும் இவரது அறக்கட்டளை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் பணம் வசூலித்து வந்ததாக கூறப்பட்டது. பொதுமக்கள் அறக்கட்டளையிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது நீங்கள் அறக்கட்டளைக்குத்தான் பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளீர்கள் என்று கூறி சமாளித்து வந்தது.
பணம் கொடுத்து சில ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் கொடுத்த பணத்தையாவது திருப்பி கொடுங்கள் என்று பணம் கொடுத்தவர்கள் கேட்டும் அறக்கட்டளை நிர்வாகிகள் அதை பற்றி சற்றும் கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில் தான் புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட திருச்சி கே.கே. நகரைச் சேர்ந்த ஹாஜிரா என்ற பெண் மேடையில் ஏறி தான் 16 லட்சம் கொடுத்துள்ளாதாகவும் சில ஆண்டுகள் கடந்தும் பணம் கொடுக்காத நிலையில் என்னுடைய பணத்தை கொடுத்து விட்டு செல்லுங்கள் என்று ஆவேசமாக கூறி திடீரென எழுந்து நின்று உரத்த குரலில் சத்தம்போட்டார்.
அதன்பின்னர் மேடையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன் பின்னர் தனக்கு பணம் வழங்கினால் மட்டுமே இந்த இடத்தை விட்டு செல்வேன் என்று கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்வதறியாது திகைத்தனர்.
இதனைக்கண்ட அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் ரவிசந்திரன் பணம் கேட்ட பெண்ணை பார்த்து மிரட்டும் தொணியில் பேசியதால் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களிடையே அச்சஉணர்வு ஏற்பட்டது.
இதனையடுத்து அப்பெண்ணை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பெரும்பாடு பட்டு ஒரு ஓரமாக அவரை அமர வைத்து நிம்மதிபெருமூச்சுவிட்டனர்.
இதனைப்பார்த்து கொண்டிருந்த பணம் கொடுத்து ஏமாந்த பலரும் கோவத்தை வெளிப்படுத்தி சப்தம் போடவே அங்கிருந்த போலீசாரின் துணையுடன் ரவிச்சந்திரனை வெளியே அழைத்து வந்து போலீசார் பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பிவைத்தனர்.
இத்தோடு, நிகழ்ச்சியில் திருச்சி பொன்மலைப்பட்டியை சேர்ந்த பிரபல ரெளடி பட்டறை சுரேஷ், நடிகை நமீதா, சின்னத்திரை நட்சத்திரங்கள் பலர் நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்றது போலீசாரின் கழுகு பார்வையில் பட்டு, தற்போது அறக்கட்டளை நிர்வாகிகளுடன் பட்டறை சுரேஷ், நடிகை நமீதா உள்பட சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரின் தொடர்புகள் குறித்து உளவுத் துறை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிகழ்ச்சிக்கு ஒரு நாள் முன்னதாகவே நடிகைகள் பலரும் திருச்சிக்கு வந்துள்ளனரா, யார், யாரை சந்தித்தார்கள் என விசாரணை நீண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலந்து கொண்டது பட்டரைசுரேஷ் தரப்பில் இருந்து… நான் தற்போது… திருந்தி முழுநேரமா அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். அருள்தாஸ் அறக்கட்டளையில் நானும் பணம் கொடுத்துள்ளேன். பணத்தை திரும்ப தருவதாக சொன்னதால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்று விளக்கம் கொடுத்தார்..