“இளைஞர்களே வாய்ப்புகளை தவறவிடாதீர்கள்”– ‘ரெட்ரோ’ விழாவில் சூர்யா பேச்சு!
சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள ‘ரெட்ரோ’ மே.01- ஆம் தேதி உலகெங்கும் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. இதையொட்டி படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி இரவு சூர்யாவின் ரசிகர்கள் பட்டாளம் கலந்து கொள்ள பிரம்மாண்டமாக நடந்தது.
இந்நிகழ்வில் பேசிய சிலரின் சுருக்கமான பேச்சு…
தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன்
“சூர்யாவின் அன்பான ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம். நாம் நினைத்தது நடந்துவிடும்.
‘ரெட்ரோ’ திரைப்படம் மறக்க முடியாத அனுபவத்தை தரும். 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் 15 வது படைப்பு இது. சூர்யாவுடனான பயணம் இனிமையானது. இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு வருகை தந்திருக்கும் படக்குழுவினர் அனைவரும் தங்களின் முழுமையான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள். அதற்காகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தை பற்றி நிறைய சொல்ல வேண்டும் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் என் இனிய நண்பர். மூன்றாண்டுகளுக்கு முன் சந்தித்து இந்த கூட்டணியை உருவாக்கி மார்ச் 2024 ஆம் ஆண்டில் உறுதி செய்து ஜூன் மாதம் படப்பிடிப்புக்கு சென்றோம். கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து பணியாற்றிய அனுபவமும் மறக்க முடியாதது. குறிப்பாக அந்தமானில் 36 நாட்கள் இடைவிடாது படப்பிடிப்பு நடத்தினார். இதற்கு அவரது குழுவினரின் திட்டமிடல் தான் காரணம்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் எங்களுடைய தயாரிப்பில் உருவான ’36 வயதினிலே’ படத்திற்கு இசையமைத்தார். அதன் பிறகு இந்த படத்தில் மீண்டும் அவருடன் இணைந்திருக்கிறோம். இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனுக்கும் என்னுடைய நன்றிகள்”.
தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம்
“படத்தைப் பற்றி நாம் அதிகம் பேசக்கூடாது. படம் தான் பேச வேண்டும் என கார்த்திக் சுப்புராஜ் சொல்வார். அதனால் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்கிறேன் சிறப்பான- தரமான -அழகான- அன்பான – சம்பவம் இந்தப் படத்தில் இருக்கிறது”.

பாடலாசிரியர் விவேக்
“சூர்யாவுடன் இணைந்து பயணித்ததில் பெரு மகிழ்ச்சி. சந்தோஷ் நாராயணன் தமிழ் சினிமாவின் ஜீனியஸ். ‘ கனிமா ..’ படத்தின் பாடல் வெளியீட்டிற்கு முதல் நாள் தற்போது நீங்கள் கேட்கும் வரிகள் இல்லை. இசையும் இல்லை. கதாபாத்திரத்தின் நடன அசைவுகளுக்கு ஏற்ப இசையை மாற்றி.. பாடல் வரிகளையும் மாற்றி அமைத்தார். அந்த அளவிற்கு நுட்பமாகவும் நுணுக்கமாக பணியாற்றுபவர் தான் இந்த ஜீனியஸ்”.
இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்
“ரெட்ரோ படத்தில் அனைத்து அம்சங்களும் மிகச் சிறப்பாக இருக்கிறது”.
நடிகர் ஜோஜு ஜார்ஜ்
“மலையாளத்தில் மம்முட்டியுடன் நடித்த ஒரு படம் மூலம் தான் எனக்கு பிரேக் கிடைத்தது. அப்போது அவரிடம் இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு எனக்கு இரண்டு ஆண்டுகள் வரை வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்குமா? என கேட்டேன். வெற்றியை எப்படி கையாளுகிறாயோ… அதைப் பொறுத்து தான் வாய்ப்பு தொடரும் என்றார். இதற்கு நான் நேரில் பார்த்த மிக சிறந்த உதாரணம் சூர்யா சார். இத்தனை வெற்றிகளுக்கு பிறகும் அவரிடம் இருக்கும் எளிமை.. எனக்கு மிகவும் பிடிக்கும். ஐ லவ் யூ சார். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஹீரோயின் பூஜா ஹெக்டே,
“நான் கலந்து கொள்ளும் இரண்டாவது இசை வெளியீட்டு விழா நிகழ்வு. இதனை சிறப்பானதாக மாற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் சினிமாவில் தான் முதலில் அறிமுகமானேன்.
இந்த வாய்ப்பினை வழங்கிய தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் தமிழில் பின்னணி பேசி இருக்கிறேன். இதற்கு உதவிய இயக்குநர் குழுவினருக்கும் நன்றி. இந்த திரைப்படத்தில் ருக்மணி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் இத்தகைய கேரக்டரை வடிவமைத்ததற்காகவும் அதில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பளித்ததற்காகவும் இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பூஜா ஹெக்டே
சூர்யாவுடன் இணைந்து நடித்த அனுபவம் மறக்க முடியாதது. எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார். அவருடைய எக்ஸ்பிரஸிவ்வான கண்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
‘ கனிமா ‘பாடலை ரீல்சாக உருவாக்கி பதிவிட்ட அனைவருக்கும் நன்றி”.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்
“பீட்சா படத்திலிருந்து கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன். நம்மிடம் இருக்கும் பைத்தியக்காரத்தனத்தை வெளியில் கொண்டு வந்து, அதனை கலை வடிவமாக மாற்றும் திறமைக்காரர் கார்த்திக் சுப்புராஜ். அவருடன் பணியாற்றும்போது கிடைக்கும் அனுபவம் வித்தியாசமானது. தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. இந்த படத்தில் மிகவும் அன்பான நடிகர் சூர்யாவுடன் பணியாற்றியது பறக்க முடியாதது.
இந்தப் படத்திற்காக கடினமாக உழைத்து இருக்கிறோம். இது ரசிகர்களுடன் மாயாஜால தொடர்பை ஏற்படுத்தி வெற்றி பெறச் செய்யும் என நம்புகிறேன்”.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்
“நான் எழுதும் எழுத்துகளுக்கு ஒரு ஆன்மா இருக்கும் என்று உறுதியாக நம்புபவன். கதைகள் நாம் சந்திக்கும் நபர்களிடமிருந்து கிடைக்கிறது.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை நிறைவு செய்த பிறகு நானும் சூர்யா சாரும் சந்தித்தோம். நான் சூர்யா சாரின் ரசிகன். அவருடைய நடிப்பில் வெளியான ‘மௌனம் பேசியதே’ என்னுடைய ஃபேவரைட்டான படம். அதன் பிறகு ‘நந்தா’, ‘காக்க காக்க’ படத்தை பார்த்த பிறகு சிறந்த நடிகர் என்பதை புரிந்து கொண்டேன். இவருடன் எப்படியாவது இணைந்து பணியாற்ற வேண்டும் என கனவு கண்டேன். ‘ரெட்ரோ’ படத்தில் இணைந்தோம். இந்தப்படம் ஏதோ ஒரு வகையில் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.
படத்தின் படப்பிடிப்பை 90 நாட்கள் நடத்த திட்டமிட்டோம். ஆனால் 82 நாட்களில் தொடர்ச்சியாக பணியாற்றி நிறைவு செய்தோம். இதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி”.
ஹீரோ சூர்யா
“இந்த விழாவில் மிக குறைவாக பேசலாம். வேறொரு விழாவில் நிறைய பேசலாம் என்று நினைத்தேன். தமிழகத்தின் அனைத்து பகுதியிலிருந்தும் வந்திருக்கும் என் அன்பான ரசிகர்களுக்கு முதலில் நன்றி. நன்றி.
‘ரெட்ரோ’ என்பது ஒரு காலத்தை குறிக்கிறது. நாம் கடந்து வந்த காலத்தை குறிப்பது. சினிமாவுக்கு வந்து 28 வருஷம் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். அந்த காலத்தை என்னால் மறக்க முடியாது. இந்த அழகான நினைவுகளை கொடுத்த உங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி.
இன்று நடிகர் ஜெயராமை தவற விடுகிறோம். நாசர், ஜோஜு ஜார்ஜ் போன்றவர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து தங்களுடைய உழைப்பை உற்சாகத்துடன் வழங்குவதை பார்க்கும் போது வியப்பாக இருக்கும். நான் வெற்றி பெற வேண்டும் என உண்மையாக விரும்பும் நாசர் சாருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி.
ருக்மணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பூஜா ஹெக்டேவிற்கும் நன்றி.
இந்தப் படத்தின் தொடக்கப்புள்ளி ராஜசேகரும் , கார்த்திகேயனும் தான். அந்தமானில் ஆயிரம் பேருடன் சென்று படப்பிடிப்பு நடத்தினோம். இது மறக்க முடியாது.

கார்த்திக்கும், கேமராமேன்ஸ்ரேயாசும் இணைந்து ஒரு காட்சியை மேஜிக் போல் உருவாக்குவார்கள். இவர்களின் திட்டமிடலால்தான் நான்கு மாதத்தில் ஒரு படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்ய முடிந்தது. நான் மணி சாரிடமும் பணியாற்றி இருக்கிறேன். ஹரி சாரிடமும் பணியாற்றி இருக்கிறேன். இவர்கள் இரண்டு பேரும் கலந்த கலவை தான் கார்த்திக் சுப்புராஜ். இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகளுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு படம் உருவாக வேண்டும் என்றால் சகோதரத்துவம் இருக்க வேண்டும் என நினைப்பேன். இந்தத் திரைப்படத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அற்புதமான இசையை வழங்கி இருக்கிறார். எங்களுடைய 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் லோகோவிற்கும், ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் லோகோவிற்கும் இசையமைத்தது சந்தோஷ் நாராயணன் தான். மனதை வருடுவது என்பது மிகவும் அரிதாகத்தான் நடைபெறும். இந்த திரைப்படத்தின் பாடல்கள் நீண்ட நாள் கழித்து ஆல்பமாக ஹிட் ஆகியிருக்கிறது. இதில் மனதை வருடும் பாடல்களும் இருக்கிறது.
இதுவரை மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை சந்தித்திருப்பேன். அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டேன். இது நான் பிறந்த நாளில் சொன்ன வாக்குறுதி. நீங்கள் அனைவரும் உங்களைக் கடந்து மற்றவர்களுக்காக… நீங்கள் செய்த ஒரு காரியத்திற்காக … உங்களுடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொண்டேன். அந்த சமயத்தில் என்னிடம், ‘நீங்கள் நல்லா இருக்கீங்கல்லே.. ‘என உரிமையுடன் நலம் விசாரித்திருக்கிறீர்கள். அந்த அன்பு மட்டும்தான் என்னை தொடர்ந்து இயங்க செய்து கொண்டிருக்கிறது. இங்கு வருகை தந்திருக்கும் நீங்கள் அனைவரும் 20 வயதில் இருக்கிறீர்கள். என் மீது நீங்கள் அளவு கடந்த அன்பை வைத்திருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் இந்த நாளை…. இந்த தருணத்தை… கொண்டாட வேண்டும் என்று இங்கு வருகை தந்திருக்கிறீர்கள். இந்த அன்பு ஒன்றே போதும்.. நான் எப்போதும் நன்றாகவே இருப்பேன். இங்கிருக்கும் தம்பிகளுக்கும் , தங்கைகளுக்கும் சொல்லும் ஒரே விசயம் இதுதான். அப்பா இந்த மேடையில் சொன்னது தான்.
நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஒரு சப்ஜெக்ட்டில் மட்டும் தான் பாஸானேன். பன்னிரண்டாம் வகுப்பிலும் எல்லா சப்ஜெக்டிலும் பெயில் ஆனேன். பப்ளிக் எக்ஸாமில் மட்டும்தான் பாஸானேன். லைஃப் இஸ் பியூட்டிஃபுல். வாழ்க்கையை நம்புங்கள். வாழ்க்கையில் நிறைய அழகான விசயங்கள் நடக்கும். வாய்ப்புகள் வரும்போது அதை தவற விடாதீர்கள். வாழ்க்கையில் ஒரு முறை , இரண்டு முறை அல்லது மூன்று முறை வாய்ப்பு கிடைக்கும். அதனைத் தவற விட்டு விடாதீர்கள். இந்த வயதில் எல்லோரும் ரிஸ்க் எடுக்கலாம். தவறில்லை. பேரார்வத்துடன் இருந்தால் மட்டும் போதாது. முழுமையான ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும். எல்லோருக்கும் அழகான வாழ்க்கை இருக்கிறது. அந்த வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்தப் படத்தில் கார்த்திக் சுப்புராஜ் சொன்னது போல் நிறைய லேயர்ஸ் இருக்கிறது. ஆனால் எனக்கு பிடித்த விசயம் ஒன்று இதில் இருக்கிறது. நானும், பூஜாவும் பேசிக் கொண்டிருக்கும்போது தம்மம் … தி பர்பஸ்… என்பதை பற்றி பேசுவோம். இந்த வேகமான வாழ்க்கையில் கார்த்திக் சுப்புராஜ் சொன்ன அந்த ரெண்டு விசயங்கள் என்னை கவர்ந்தது.
என்னுடைய பர்பஸ் ..அகரம் பவுண்டேஷன் தான். இதற்கும் உங்களுடைய ஒத்துழைப்பு இருக்கிறது. படிப்பில் ஆவரேஜ் ஸ்டூடண்ட்டான எனக்கும் ஒரு வாழ்க்கையை கொடுத்து அதன் மூலமாக எனக்கு ஒரு சக்தியை கொடுத்து ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட தம்பிகளும், தங்கைகளும் பட்டதாரி ஆகியிருக்கிறார்கள். இன்னும் நிறையப் பேர் பட்டதாரி ஆவார்கள். இதற்கு அகரத்தில் பணியாற்றும் அனைவருக்கும் பங்கு இருக்கிறது. இதை நான் எப்போதும் பெருமிதமாக கருதுவேன்.
மே முதல் தேதியன்று வெளியாகும் கார்த்திக் சுப்புராஜின் ‘ரெட்ரோ’ படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து கொண்டாடுங்கள். ஐ லவ் யூ ஆல். உங்கள் அன்பிற்கு நன்றி”.
— மதுரை மாறன்.