‘ஆர்.எம்.வீ. தி கிங் மேக்கர்’—ல் பகீர் உண்மை!
ஆர்.எம்.வீ.யை அதிர்ச்சியடைய வைத்த வி.என்.ஜானகி!
புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திரக் கோட்டையில் 1926-செப்டம்பர் 09-ஆம் தேதி பிறந்த இராம.வீரப்பன் திராவிட இயக்க தீரர் காரைக்குடி இராம.சுப்பையாவால் தந்தை பெரியாருக்கு உதவியாளராக அனுப்பப்பட்டு, அதன் பின் அறிஞர் அண்ணாவின் அன்புக்கு பாத்திரமானார். திமுகவில் எம்.ஜி.ஆர்.இருந்த போதே அவருக்கு நெருக்கமாகி, எம்.ஜி.ஆர்.திமுகவிலிருந்து வெளியேறியதும் அவருடனேயே இராம. வீரப்பனும் வெளியேறினார். அதிமுக என்ற கட்சியை எம்.ஜி.ஆர்.துவங்கியதிலிருந்து, அவர் மறையும் வரை அவருக்கு மிகச்சிறந்த ஆலோசகராக இருந்தார். இராம.வீரப்பன் [ எ ] ஆர்.எம்.வீ.
எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக என்ற கட்சியில் ஜெயலலிதா என்ற நடிகை கோலோச்ச நினைப்பதை ஆரம்பத்திலிருந்தே கடுமையாக எதிர்த்தவர் ஆர்.எம்.வீ. அப்போது அதிமுகவின் 100 எம்.எல்.ஏ.க்கள் ஆர்.எம்.வீ.யின் கட்டுப்பாட்டில் இருந்ததால் எம்ஜி.ஆரின் மனைவி வி.என்.ஜானகியை முதல்வராக்கினார் ஆர்.எம்.வீ. ஆனால் அப்போது நடந்த சில கோமாளிக் கூத்துகளால் ஜானகி ஆட்சி அற்பாயுசில் முடிந்தது.

ஆர்.எம்.வீ.மீது ஏற்கனவே செம கடுப்பில் இருந்த நடிகை ஜெயலலிதா தனக்கென ஒரு அணியை கட்சிக்குள் ஸ்ட்ராங்காக்கி ஆர்.எம்.வீ.யை ஓரங்கட்டி…. அதன் பின் அக்கட்சிக்குள் நடந்த அக்கப்போர்களெல்லாம் இப்போது 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
‘எம்.ஜி.ஆர்.கழகம்’ என்ற கட்சியை ஆரம்பித்து சில ஆண்டுகள் நடத்திய ஆர்.எம்.வீ. தனது சிஷ்யன் ஜெகத்ரட்சகனுக்கு அரக்கோணம் எம்.பி.தொகுதியை திமுக கூட்டணியில் சேர்ந்து வாங்கிக் கொடுத்து ஜெயிக்க வைத்தார். கடந்த பத்து ஆண்டுகளாக தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்த ஆர்.எம்.வீ.. கடந்த 2024 ஏப்ரல்.09-ஆம் தேதி தனது 98—ஆவது வயதில் மறைந்தார்.
அவர் மறைந்து சில மாதங்களிலேயே அவரைப் பற்றிய ஆவணப்படம் எடுக்கும் வேலையை ஆரம்பித்தார் ஆர்.எம்.வீ.யின் மகன் தங்கராஜ் வீரப்பன். அந்த ஆவணப்படம் மெல்ல மெல்ல வளர்ந்து முழு நீள சினிமாவானது. சென்சார் சர்டிபிகேட்டுடன் வெளியாகியுள்ள இந்த சினிமா 1 மணி நேரம் 32 நிமிடம் ஓடுகிறது. ‘ஆர்.எம்.வீ.-தி கிங் மேக்கர்’ என்ற டைட்டிலுடன் வெளியாகியுள்ள இந்தப் படத்தை பினு சுப்பிரமணியம் என்பவர் இயக்கியுள்ளார். இந்த முழு நீள சினிமா ஆரம்பிப்பதற்கு முன்னால் ஐந்து நிமிடம் வல்லத்திரக்கோட்டையில் ஆர்.எம்.வீ. பிறந்தது, வளர்ந்தது குறித்த தகவல்களுடன் ஆவணப்படம் ஓடுகிறது.
முழு நீள சினிமா ஆரம்பித்த பிறகு முதலில் பேசுகிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். அதன் பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், நடிகர் சத்யராஜ், ஜெகத்ரட்சகன், திருநாவுக்கரசர், ஏ.சி.சண்முகம், சைதை துரைசாமி, ஐ.நா.சபையில் வேலை பார்த்த ஆர்.கண்ணன், டைரக்டர்கள் பி.வாசு, சுரேஷ் கிருஷ்ணா, கவிப்பேரரசு வைரமுத்து, கவிஞர் முத்துலிங்கம், அமெரிக்காவில் எம்.ஜி.ஆர்.சிகிச்சை பெற்ற போது உறுதுணையாக இருந்த பழனி ஜி.பெரியசாமி, கம்பன் கழக செயலாளர் சாரதா நம்பி ஆரூரான், த.வெ.க.செங்கோட்டையன், உட்பட 36 பேர் ஆர்.எம்.வீ.யின் குணநலன்கள், பெருமைகள் குறித்து பேசியுள்ளனர். ‘காக்கிச்சட்டை’, ‘காதல் பரிசு’ என சத்யா மூவிஸின் இரு படங்களில் நடித்திருக்கும் கமல்ஹாசன் மட்டும் மிஸ்ஸிங்.

இதில் பழனி ஜி.பெரியசாமி தான் ஒரு பகீர் உண்மையை அம்பலப்படுத்தினார். ”100 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆர்.எம்.வீ.முதல்வராக நினைத்தார். என்னிடம் இதைப்பத்தி சொன்னார். நானும் சந்தோஷப்பட்டேன். ஆனால் டிச.26-ஆம் தேதி [ எம்.ஜி.ஆர்.மறைந்து மூன்றாவது நாள்] அதிகாலை 4 மணிக்கு தலைவரின் உதவியாளர் மாணிக்கம் எனக்கு போன் பண்ணி தோட்டத்திற்கு வரச்சொன்னார். நானும் போனேன். அப்போது வி.என்.ஜானகி அம்மையார் அவர்கள் என்னிடம், “நான் சி.எம்.ஆகணும்னு முடிவு பண்ணிட்டேன்னு சொன்னதும் எனக்கு அதிர்ச்சி. ஆர்.எம்.வீ. சி.எம்.ஆகணும்னுதாம்மா எம்.எல்.ஏ.க்களெல்லாம் விரும்புறாங்க. திடீர்னு இப்படிச் சொன்ன எப்படிம்மான்னு கேட்டேன். இல்ல நான் தான் சி.எம்.ஆவேன். இதை ஆர்.எம்.வீ.கிட்டேயே சொல்லிருங்க”ன்னு சொல்லிட்டு விருட்டுன்னு மாடிக்குப் போயிட்டாங்க.
அங்கிருந்தபடியே காலை 5 மணிக்கு ஆர்.எம்.வீ.க்கு போன் பண்ணி விசயத்தைச் சொன்னேன். இந்த உண்மையை இப்பத்தான் சொல்றேன்” என பட்டாசைக் கொளுத்திப்போட்டுள்ளார் பழனி ஜி.பெரியசாமி.
மற்றவர்கள் பேசியதெல்லாம் ஆர்.எம்.வீ.யின் பராக்கிரமங்கள்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.