எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் பிறந்த வீட்டில் இடிந்து விழுந்த மேற்கூறை கட்டிடம் !
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் பிறந்த வீடு 1973-ம் ஆண்டு தமிழ்நாடு அரசால் அரசுடைமையாக்கப்பட்டு செய்தி மக்கள் தொடர்பு துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் பாரதியார் பயன்படுத்திய கம்பு கத்தி உள்ளிட்ட பொருட்களும். பாரதியின் கையெழுத்து பிரதிகள் அவர் எழுதிய கடிதங்கள் வைக்கப்பட்டுள்ளன. மற்றும் அவரது வாழ்கைக் குறிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், கிளை நூலகமும் செயல்பட்டு வருகிறது.

தினந்தோறும் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பள்ளி மாணவர்கள் பாரதி அன்பர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரும் முக்கிய அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் வந்து செல்கின்றனர். பாரதி பிறந்த வீடு இரண்டு அடுக்கு காரை கட்டிடம் பழைய கட்டிடம் என்பதால் மழைநீர் கசிவு ஏற்பட்டு மேல் தளத்தில் உள்ள சொருகு கட்டைகள் ஒடிந்து இருந்துள்ளது. இது தெரிந்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இன்று காலையில் இருந்து சுமார் முப்பதுக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு சென்றுள்ளனர். மாலை 6 மணிக்கு பாதுகாவலர் மகாதேவி வீட்டை பூட்டி சென்ற சிறிது நேரத்தில் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. நல்ல வேளையாக பார்வையாளர்கள் இல்லாத நேரத்தில் விழுந்ததால் சேதாரம் ஏற்படவில்லை. தகவல் அறிந்து எட்டயபுரம் தாசில்தார் சுபா மற்றும் தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும், அந்தப் பகுதியில் பொதுமக்கள் செல்லாமல் இருக்கும் வகையில் தடுப்புக்களும் வைக்கப்பட்டுள்ளன. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அந்த இல்லத்திற்கான மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
— மணிபாரதி.